Tuesday, July 14, 2015

இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள் – ஓரான் பாமுக்



இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள் – ஓரான் பாமுக்

வரலாறு என்பது என்ன? ஒரு நபரின்/ஒரு குழுவின் - காலம் குறித்த பார்வைதான் வரலாறு. பெரும்பாலும் அது வென்றவர்களின் பார்வை – ஒரு பக்கச்சார்பானது. பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாறு என்பது பாரபட்சம் கொண்ட புனைவுதான். விதிவிலக்காகச் சில சம்பவங்கள் இருக்கலாம்.

ஒரு காலத்தில் பயணிகளே வரலாற்றை எழுதும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். இதில் புனைவின் சதவிகிதமும், ஆதரிப்போர் மீதான எண்ணச் சாய்வுகளும் அதிகம். பின் அதிகார மையங்கள் தங்களுக்குத் தேவையான வரலாற்றை அனைவருக்குமாக எழுதிக் கொண்டனர். அப்படிப்பட்ட சூழலில், நிகழ்வுகள் வரலாறாவதற்கான தேவை மற்றும் தேவையின்மை என்பது எழுதும் தரப்பின் அரசியல் லாப-நஷ்டங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இப்படிப்பட்ட வரலாறுகள் எல்லாமே ஒற்றைப் பார்வை கொண்ட குறைநோக்கு வரலாறுகளாகவே இருக்கின்றன. உண்மை என்பது மக்களின் அடிமனதிலும், புனைவுகளிலும் நிகழ்வுகளாகப் பதிவு பெற்று அவற்றுக்கான வரலாற்று மதிப்பினை இழக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்து அரை உண்மைகள் வரலாறாக நீடிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள இணையப்புரட்சி ஒவ்வொரு மனிதனின் கருத்தும் பதிவாக வரும் சாத்தியத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமகாலம் குறித்த பார்வை பதிவுகளாக, நடைபெறும் போதே எழுதப்படும் வரலாறாகக் குறிக்கப்படுகின்றன. வரலாறை எழுத எவ்வித நோக்கமும், தேவையும் இல்லாத போது பெரும்பாலும் உண்மைகள் அப்படியே கடத்தப்படுகின்றன. எழுதுபவரின் கல்வி, அரசியல் பின்புலங்கள் செலுத்தும் சாய்வு இருக்கிறதென்றாலும் அதன் எதிர்நிலையினரும் உடனே தங்கள் தரப்பைத் தந்து விடுவதற்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன. இது இத்தகைய வரலாறுக்கு ஒரு பன்முகத்தன்மையைத் தானாகவே அளிக்கிறது.  தனிமனிதப் பார்வை என்பது எப்போதுமே குறைப்பார்வைதான், இந்தத் தனிமனிதப் பார்வைகளை ஒன்றிணைத்து, தன் பார்வையையும் முன்வைத்து ஓர் அறிவுலக நபர் எழுதும் வரலாறானது இத்தகைய குறைகளையும் மீறி ஓரளவிற்கேனும் ஒட்டு மொத்தப் பார்வையைக் கொண்டிருக்கும் சாத்தியங்கள் கொண்டது. ராகுலின் வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புத்தகங்கள் இவ்வாறானவை. ஓரான் பாமுக் எழுதி இருப்பது, அப்படிப்பட்ட ஒரு வரலாறைத்தான். இந்தப் புத்தகத்தை ஓரானின் சுயசரிதையாக அல்லது பாமுக்குகளின் வம்சக்கதையாக அல்லது முக்கியத்துவம் இழந்து போன நகரின் கதையாக அல்லது ஆட்டோமான் சாம்ராஜ்யத்திற்குப் பின்பான ஜனநாயகத் துருக்கியின் கதையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது புனைவல்ல, ஒரு நபரின், குடும்பத்தின், சமூகத்தின், நகரின், வர்க்கத்தின், நாட்டின் வரலாறு. இந்த வரலாற்றில் ஓரான் ஒரு பார்வையாளனாகவும், பங்களிப்பானாகவும் இருக்கிறார். ஆட்டோமான் அரசு சரிந்து, அதன் பின்பான காலனிய அரசில் பெரும் செல்வம் சேர்த்து மேல் எழும் ஒரு தலைமுறைக்குப் பின், ஜனநாயக அரசில் கொஞ்சம் கொஞ்சமாக அழிவுறும் ஒரு குடும்பத்தின் வரலாறு. அது அந்தக் குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல, அந்தக் குடும்பம் சார்ந்த வர்க்கம் மற்றும் அந்நகரின் வரலாறும் கூட. அந்த நகரின் அழிவு ஓரானின் பிறப்பிற்கு முன்பே தொடங்கிவிட்டது, அந்த அழிவினூடே ஓரானின் குடும்பம் மேலெழுகிறது, அதைத் தக்கவைக்கும் நிலையில் அவர் அப்பா இல்லாத போது அழிவு கொஞ்சம் கொஞ்சமாக இடிபாடுகளில் மற்றொரு இடிபாடாக அந்தக் குடும்பத்தை மாற்றுகிறது. வாழ்ந்து கெட்ட ஒரு நகரில் வாழும், இன்னொரு வாழ்ந்து கெட்ட குடும்பமாக அது மாறுகிறது. 

வாழ்ந்து கெட்ட மனிதர்களை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா? அவர்களால் நன்றாக வாழ்ந்த நினைவுகளைப் புதைத்து விட்டு, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்கள் அவர்களுக்கான சோகத்தை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு அவற்றில் புதைந்து கொண்டு அவற்றிலேயே அழிந்து போவார்கள். இந்நிலையை ஓரான் ஹுசுன் என்று சொல்கிறார். இஸ்தான்புல் அப்படிப்பட்ட ஹுசுனிலேயே வாழ்கிறது.

இதைப் புரிந்து கொள்ள நாம் செட்டிநாட்டை எடுத்துக் கொள்ளலாம். அது ஒரு புதைந்த பகுதிதான். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்திய வருமானத்தில் குறிப்பிடும் அளவு சதவிகிதத்தை அது கொண்டிருந்தது. தனி விமானத்தளம், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களால் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீடுகள், பெரும் அளவிலான விவசாய நிலங்கள், வறண்ட பகுதியை வளமாக்கும் நீர் நிலைகள், பொருட்செலவை கோரும் கோயில்கள், ரயில் போக்குவரத்து, ஏற்றுமதி வசதிகள் என்று வாழ்ந்த ஒரு பகுதி. காலமாற்றம் ஏற்பட்டு காலனி அரசிடம் இருந்து ஜனநாயக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின் (அதற்குச் சற்று முன்பே கூட) ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களை உள்வாங்காத ஒரு தலைமுறையிடம் சொத்துக்கள் வந்து சேர்ந்த போது அழிவு ஆரம்பித்தது. நிலங்களை விற்று, நகைகளை - பெட்டகங்களை விற்று, வீடுகளின் உத்திரங்களாக, கதவுகளாக, ஜன்னல்களாக இருந்த பர்மிய தேக்கு மரக்கட்டைகளை விற்று, அறைகலன்களை விற்று, பட்டியற்கற்களை விற்று, சமையல் பாத்திரங்களை விற்று என்று - இன்றுவரை விற்றுத் தீராத செல்வம் கொண்ட அந்தப் பகுதி இன்றுவரை அதன் இருண்டகாலத்தைக் கடந்து வரவே இல்லை. வாழ்ந்து கேட்டவர்கள் வாழ்ந்தபோது செய்தவற்றை பெருமைமிகு குடும்பப் பாரம்பரியம் என்பார்கள், எத்தனையோ குடும்பங்கள் அவற்றைக் காப்பாற்ற தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணமே செய்யாமல் விட்டுவிட்டதும் உண்டு. அதுதான் ஹுசுன். அவர்கள் கண்டுபிடித்த/ கிழக்காசியாவிலிருந்து கொண்டு வந்த சுவைமிகு உணவுகளை உலகமே ரசித்து உண்ணும்போது, அவர்கள் அவற்றை உண்ணும் சாத்தியமே இல்லாதபோது தோன்றும் வெறுமைதான் ஹுசுன். பக்கத்திற்கு, ஐந்து அடி அகலமும், கலை வெளிப்பாடுகளும் கொண்ட நிலைவாசலும், கதவும் - முன்னும் பின்னும் ஏதுமற்ற மொட்டைச் சுவற்றில் நிற்குமே அதுதான் ஹுசுன்.  வளர்ச்சிக்கான வாய்ப்பெதுவும் இல்லாத போது கடந்தகாலத்தின் செரிக்காத நினைவுகளில் வாழும் - ஜீவன் செத்த மனிதர்கள் முகங்களில் தெரிவதுதான் ஹுசுன். இவையெல்லாம் எளிமைப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் மட்டுமே, ஹுசுனைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தை முழுவதும் படிப்பது நல்லது. 

ஹுசுன்தான் இஸ்தான்புல்லின் தேர்ந்தெடுத்த தலைவிதியாய் இருக்கிறது. ஒட்டுமொத்தப் புத்தகமும் ஹுசுனைப் பற்றித்தான் எழுதப்பட்டுள்ளது. இருள் கவிந்த நாகரிகத்தில் வேறென்ன பேசுபொருளாய் இருக்க முடியும்? காய்ந்த எலும்பொன்றைக் கவ்விக்கவ்வி தன் வாய்வழியே வழியும் தன் ரத்தத்தையே நக்கி ருசிக்கும் ஓர் நாயைப் போல, இடிந்த நகரின் நம்பிக்கை இழந்த மனிதர்களின் வாழ்வென்பது எல்லாவற்றையும் குறைகூறிக்கொண்டு தன்னையும் பிறரையும் வருத்திக் கொள்வதல்லாமல் வேறென்ன? யாருக்கும் வழிகாட்டக்கூட இடிந்த அரண்மனைகளையும், எரிந்த யாலிகளையும் அடையாளம் சொல்லும் வருத்தம் ஒரானுக்கு பெரும் மனநெருக்கடியைத் தருவதில் வியப்பொன்றும் இல்லை.

புதிதாய் மேலெழும் மனிதர்கள் மேல் உள்ள கோபம், பொறாமை, அவர்களைப் போலச் செயல்பட முடியாமை எல்லாம் வீழ்ச்சியுறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்குமே ஒரு சவால்தான். இதனிடையே மூன்றாம் தலைமுறை மனிதரான ஓரான் முழுக்க விலக முடியாமல், தன் தப்பித்தலான கனவில் வாழ்தலிலும் ஓவியம் வரைதலிலும் மூழ்க முயலும் போது சந்திக்கும் நெருக்கடிகள் எந்த ஒரு கலைஞனுக்கும் இயல்பாக நடப்பவைதான். புறவாழ்வின் நெருக்கடிகள் காதலியின் வழியே, அம்மாவின் வழியே நெருக்கும் போது விடாப்பிடியாகத் தன் கட்டிடக்கலைப் படிப்பைப் புறந்தள்ளுதல் மூலம் கனவில் தான் காணும் பிரபல ஓவியர் என்ற சித்திரத்தை நனவுலகிலும் கொண்டு வந்து விட முயல்கிறார் ஓரான். 

பொதுவாக கலைஞர்கள் மனநோயாளிகளாக, குடிகாரர்களாக, பாலியல் நோயாளிகளாக மாற அவர்களின் அதிகற்பனைகள்தான் காரணமாகின்றன. அதே சமயம் அவர்களை வெறியோடு இயங்கச் செய்பவையும் அவைதான். ஒரே கலையில் மூழ்கும் கலைஞர்கள் அதிஷ்டவசமாக வெற்றியை மட்டுமே அடைந்துவிட்டால், அவர்கள் மேல் சொன்ன பிரச்சனைகளைச் சந்திப்பதில்லை - அதற்கான சாத்தியங்கள் வெகு அபூர்வம் என்றாலும் கூட. அதே சமயம் அவர்கள் தொடர்தோல்வியோ அல்லது தொடர்ந்த வெற்றிக்குப் பின்பான பெரும் தோல்வியையோ அடையும் போது அவர்கள் சுயஅழிதலுக்குப் போகிறார்கள். தொடர் தோல்வி – சுய அழிதலுக்கு ஓவியர் வான்கோ போன்றோரையும், தொடர் வெற்றி – பெரும் தோல்விக்கு மைக்கேல் ஜாக்சன் போன்றோரையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இப்போது ஒரு நாகரிகத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்போம். நாகரிகம் என்பது கலையின் நீண்ட வெற்றிகளை தன் அணிகளாகக் கொண்டது. அதனளவில் நீண்ட வருடங்களாய்த் தொடரும் பாரம்பரியத்தைக் கொண்டது. அது ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது அது மீண்டெழும் சாத்தியங்களை மறுக்கிறது. சிதைந்த நாகரிகங்கள் எல்லாமே மீண்டெழ முடியாமைக்கு அதுவரையிலான அதன் மீது அதுவே ஏற்படுத்திக் கொண்ட ஒற்றைப்பார்வைச் சிறப்புகளே காரணமாகின்றன. ஆண்டாண்டு காலமாய் அது தன்னைப் பற்றி எழுப்பியுள்ள வெறும் சிறப்பு குறித்த பிம்பங்கள் கூட்டு எண்ணங்களாய் ஆட்சியாளர்கள் - மக்கள் மனதில் பதிந்து அவர்களை அதை விட்டு வெளியேற முடியாதவர்களாய் மாற்றுகின்றன. அது ஒரு பலவீனமான படையெடுப்பினால் ஏற்படும் சிறு பின்னடைவிலேயே கூடச் சிதைத்து போகிறது. சிறப்பு குறித்த பிம்பங்கள் இருந்த இடத்தை தோல்வி குறித்த சுயஇரக்கம் நிரப்பத் தொடங்குகிறது. அது ஒட்டு மொத்த இருளுக்குள் மனிதனை, நாட்டை, நாகரிகத்தை அழைத்துச் செல்கிறது. இதற்கு உலக வரலாற்றின் எந்த ஒரு நாட்டையும், நாகரிகத்தையும் உதாரணமாகக் கொள்ளலாம்.

அப்படியான இருளில் இருந்து மறுபடி மீண்டு வருதல் என்பது காலத்தை உண்ணும் செயலாய் இருக்கிறது. அந்த இருளான நாட்டில் இருந்து தப்பித்து வெளிச்சம் கொண்ட இடம் நோக்கிச் சில கலைஞர்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். இன்னும் சிலரோ தங்களுக்குள்ளே இருக்கும் இருளிலேயே கரைந்து போகின்றனர். ஓரானின் அம்மா இது பாரிஸ் அல்ல, இஸ்தான்புல் என்று சொல்வது அதைத்தான். ஆனால் ஓரானின் மனதில் சிறு வயதில் இருந்தே கதாநாயகர்களாய் இருப்போர் அந்த இடிந்த நகரை விட்டுச் செல்லாத, அந்த நகரை ஆராதிக்கும் தோல்வியுற்ற எழுத்தாளர்கள்தான். அந்த அங்கீகாரமற்ற சாகச மனிதர்கள்தான் ஓரானின் ஆளுமை வளர்ச்சியை நிர்ணயித்துள்ளனர். 

கலைஞர்களில் இன்னொரு சிறப்பு இயல்பு கொண்டோர் உண்டு, தன் கலையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கைவிட்டுவிட்டு மற்றோர் கலையில் ஈடுபடுவோர். இவர்கள் அங்கீகாரத்திற்காக, அகத்தூண்டுதலில், நெருக்கடியில், வேறுவழியின்றி, பணத்தேவைக்காக என்று பல காரணங்களுக்காக இரண்டாம் கலையைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதில் வருத்தம் கொள்வோரில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் அவர்களின் தோல்வியை – முதல் கலையைக் கைவிட்ட அன்றே - ஒப்புக்கொண்டவர்கள். இத்தகையோரை வரலாறும் கொண்டாடித்தீர்க்கும். ஏனென்றால் முதல் கலையை இரண்டாவதாய்த் தேர்ந்தெடுத்துக் கொண்ட கலையுடன் இணைத்து இரண்டு கலைகளுக்கும் புதுப்பரிமானத்தை வழங்குவார்கள் – ஒரானைப் போல. தன்னுடைய ஓவியக்கலைக்கு நெருக்கமான கட்டிட வரைவியலை புறந்தள்ளும் ஓரான், ஓவியக்கலையையே ஒட்டுமொத்தமாக விலக்கிவிட்டு இறுதியில், அதற்குக் கொஞ்சமும் தொடர்பற்ற எழுத்தாளனாய் வரப்போவதாய் முடிவெடுக்கிறார். ஆனால், ஓரானின் படைப்புகளில் வரும் ஓவிய நுணுக்கங்கள், வர்ணனைகள் ஒரு புது வித வாசிப்பனுவத்தைத் தருபவை. நாவலின் காட்சிகள் அனைத்துமே ஓவியத்தின் ஒரு பகுதிபோல, நகரும் ஓவியத்தை போலவே விளக்கப்படும். அதே சமயம் ஒரானால் ஒரு ஓவியத்தை காட்சியாக விளக்கவும் முடிகிறது. ஓவியன் ஓர் ஓவியத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பித்து எப்படி வேண்டுமானாலும் பயணித்து குறிப்பிட்ட சட்டகத்தில் முழுமை பெற வைக்க முடியும். அதைப்போல ஒரானும் தன் நாவல்களின் சம்பவங்களை எங்கோ ஆரம்பித்து பயணம் செய்து முழுமை பெறச்செய்வார். (என் பெயர் சிவப்பு வர்ணனைகளுக்காகவே மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய நாவல்.)

Departures என்று ஒரு ஜப்பானியப் படம் உண்டு. அதில் செலோ வசிக்கும் ஒரு கலைஞன் திடீரென வேலை இழந்து, வேறு வழியின்றி பிணங்களை அலங்கரிக்கும் வேலைக்குச் செல்வான். முதலில் விருப்பமே இல்லாமல் ஆரம்பிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக செலோ வாசித்தலுக்கான நுணுக்கங்களுடன், பிணங்களையும் அலங்கரிக்கத் தொடங்குவான். ஒரு கலையில் நேர்த்தி அடைதல் என்பது தனிப்பட்ட கலையில் ஏற்படும் நேர்த்தி அல்ல, அது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மேல் உள்ள அக்கறையினால் ஏற்படும் நேர்த்திதான். பிணங்களை அலங்கரிக்கும் கலை அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவனுடைய செலோ வாசிக்கும் திறனையும் மேம்படுத்தும். இவை ஒட்டுமொத்தமாக பிற மனிதர்கள் குறித்த அவனுடைய பார்வையையும், அவன் மேலான பிற மனிதர் பார்வையையும் தலைகீழாக்கும். கலையிலிருந்து கலைக்கு என்னும்படியான மாற்றங்கள்தான் இருள் கவிந்த ஹுசுனில் இருந்து மனிதர்களை வெளியே வரச்செய்யும். அதே சமயம் அடித்தட்டு மக்களுக்கு போராட்டத்திலிருந்து மற்றொரு போராட்டம் என்னும்படியான மாற்றங்கள்தான் தேவைப்படுகிறது. அது இரண்டு வர்க்கங்களின் முரண்.

இது தவிர்த்து, ஓரானின் இந்தப் புத்தகம் அரசு, மதம் குறித்து கறாரான விமர்சனங்களை முன்வைக்கிறது. கைக்கூலி அரசுகள் எப்படிச் செயல்பட்டன, அவை தனி மனிதனின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று விரிவாகச் சொல்கிறார். இரு பெரும் கலாச்சார – புவியியல் சந்திப்பில் இருக்கும் துருக்கி உடை போன்ற தனிநபர் விருப்பங்களில் தலையிட்டு மேற்கத்திய மாற்றங்களைத் திணித்ததும், ஆயிரமாண்டு மொழியின் வரிவடிவம் அழிக்கப்பட்டு புது வரிவடிவம் திணிக்கப்பட்டதும் மக்களின் அடையாளப் பெருமிதங்களை அழிக்கும் வேலைதான். அது இரண்டு விதங்களில் வேலை செய்யும், புது உத்வேகத்துடன் ஒரு தலைமுறை கிளம்பலாம் அல்லது பெருமிதங்கள் ஏதுமில்லாத மனிதக்கூட்டம் மாபெரும் மந்தைகளாக மாறலாம். துருக்கியில் இரண்டாம் நிலையே நீடிக்கிறது. இதற்கு நேர்மாறாக இத்தாலிய, ஆர்மீனிய மக்கள் அழித்தொழிப்பு செய்யப்படும் நிலையை அதே மொழிவெறியே ஏற்படுத்தி உள்ளது. நோன்பு நோற்றலை வற்புறுத்தாத, மேற்கத்திய சிந்தனைகளை முன்னிறுத்தும் ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஓரான் – சமூகமே மதத்தை முன்னிறுத்தி கடுங்கோட்பாடுகளை செயல்படுத்தும் நிலையை அடைவதைப் பார்க்கும்போது ஒரு சிந்தனாவாதியாக நோகடிக்கப்படுவது இயல்புதான். எந்த ஒரு சுயசிந்தனை கொண்ட மனிதனும் எந்த ஒரு வெறியையும் ஏற்றுக்கொள்ள மறுப்பான். அவ்வகையில் ஓரானின் இந்தப் புத்தகம் துருக்கி குறித்து ஒரு திறந்த பார்வையை முன்வைக்கிறது. ஆனாலும் கூட, இது ஒரு குறிப்பிட்ட  வர்க்கத்தின் பார்வைதான். இங்கே ஏன் வர்க்கம் குறித்து சொல்கிறேன் என்றால், ஓரானின் பார்வை சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்த அல்லது இருக்கும் மனிதனின் பார்வைதான். அவர் சொல்லும் ஹுசுன் என்பது கூட இருந்ததை இழந்தவை குறித்த ஏமாற்றம் மற்றும் இழந்த பெருமைகள் குறித்த ஏக்கம்தான். ஆனால், காலம் காலமாக இப்படிப்பட்ட பகுதியில் வாழும், எந்தப் பெருமைகளையும், வசதிகளையும் அனுபவிக்காத மக்களுக்கு வாழ்வும், அழிவும் ஒன்றுதான். அடிவயிறு எரியும் நிலையில் உணவற்ற இருளில் வாழும் அவர்களிடம் ஏக்கங்களின் வழி கொண்ட ஹுசுனுக்கு வேலை ஏதும் இல்லை. அரண்மனைகளிலோ, யாலிகளிலோ, நிலங்களிலோ எவ்வித ஒட்டுறவும் இல்லாத நிலையில், ஒருமுறைகூட அவற்றின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அவை குறித்த பெருமை உணர்ச்சியோ, அவை அழியும் போது ஏற்பட வேண்டிய ஏக்கங்களுக்கோ எவ்வித வேலையும் இல்லை. - அது செட்டிநாடாக இருந்தாலும் சரி, இல்லை இஸ்தான்புல்லாக இருந்தாலும் சரி. 

இந்நிலையில் நம்முடைய வரலாற்று, கலாசார நினைவுச்சின்னங்கள் சிதைக்கப்படுவதற்கும், அவை குறித்து நாம் குற்ற உணர்ச்சி கொள்ளாமல் இருப்பதற்கும் பின்னால் இந்திய சனாதன அமைப்பின் தீண்டாமை இருக்கிறது. காலங்காலமாக கலையைக் கோயில்களுக்குள்ளும், அரண்மனைகளுக்குள்ளும் அடைத்துவிட்டு, அவற்றுக்குள் மக்களை அனுமதிக்காத வேலையை சனாதன சாதி அமைப்பு செய்தது. அவற்றுக்குள்  அனுமதிக்கப்படாத மக்களிடம் இருந்து கலையும், கலையிடம் இருந்து மக்களும் வெகுதூரம் விளக்கப்பட்டு, கலை குறித்த புரிதலை, அதனால் ஏற்படும் பெருமை உணர்ச்சியை ஒட்டுமொத்த மக்களும் முற்றிலுமாக இழந்துவிட்டனர்.  இந்நிலையில் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்ட ஓவியத்தில், சிற்பத்தில் தன் பெயரை ஆங்கிலத்தில் கிறுக்குவதைக் குற்றம் சொல்ல யாருக்கும் இங்கே தகுதி இல்லை. இன்றும் கூட, வேறெப்போதும் இல்லாத அளவில் மக்கள் கலைகள் புறந்தள்ளப்படுவதும், அவை வாழும் கிராம தெய்வவழிபாடுகள் அழிக்கப்பட்டு பெருந்தெய்வ வழிபாடுகள் முன்நிறுத்தப்படுவதும், மக்களுக்கும் கலைகளுக்கும் இடையே ஓர் பெரும் இடைவெளியை ஏற்படுத்திவருகிறது. தமிழில் வழிபாடு செய்ய மறுக்கப்படுவது, சிதம்பரம் கோயில் தனியாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளிப்பது, பெரும்பான்மை மக்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது, பறையடிப்பதை இசையே இல்லை என்பது, IIT-யில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடை செய்வது என்று எல்லாமே இந்த அந்நியப்படுத்துதலின் வெவ்வேறு வடிவங்கள்தான். இந்தப் புரிதலுடன்தான் இந்தப் படைப்பை வாசிக்க வேண்டியதிருக்கிறது.

சென்னையை இப்படிப்பட்ட ஒரு அரசியல் பார்வையுடன் அணுகிய அபுனைவுகள்  இதுவரை வரவில்லை. ஏன் – தமிழ்நாட்டில் அரசியல் பார்வையில் நகரங்களை முன்வைத்து எந்த ஒரு புத்தகமும் எழுதப்பட்டதில்லை. ஏனென்றால், இங்கிருக்கும் எழுத்து எந்திரங்களுக்கு விருதுகளில் இருக்கும் கவனம் மக்கள் மேல் இருந்ததில்லை. அன்றைய அரண்மனைக் கோமாளிகளுக்கும் இவர்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. அன்றும் இன்றும் அரண்மனைகளையே அண்டிப்பிழைக்கும் இவர்கள் கலையை மக்களிடமிருந்து பிரித்து, சிலருக்கு மட்டுமே ஆனது என்று சொல்லி, புதைத்து மாலை போட்டு, அதன்மேல் ஆசிரமம் கட்டி, அதுதான் உன்னதம் என்றும் சொல்லி ஏமாற்றுபவர்கள். இன்றிருக்கும் சூழலில், 90-களுக்குப் பின்பான தாராளமயச்சிந்தனை ஒரு நகரத்தில் ஏற்படுத்தியுள்ள கலை, அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கறாராக முன்வைக்கும் புனைவற்ற படைப்பு ஒன்றிற்கான தேவை இருக்கிறது. அதை மக்களே மக்களுக்காகச் செய்வார்கள் என்று நம்பலாம் – ஏனென்றால் நம்மிடம் ஒரான்கள் யாரும் இல்லை.

No comments:

Post a Comment