Sunday, November 7, 2010

படித்ததில் பாதித்தது

என்னைக் கவர்ந்த கதை.......

நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா

http://nanjilnadan.wordpress.com

Wednesday, November 3, 2010

கிருஷ்ணப்பருந்து - ஆ.மாதவன் - புத்தக அறிமுகம்



மனிதனின் குணங்களில் மிக முக்கியமானது காமம். எல்லா உயிர்களும் வாழவும்
பெருகவும் அதுவே அடிப்படையாக இருக்கிறது. ஆனால் மனிதனின் பகுத்தறிவின்படி காமம் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய குணமாக மாற்றமடைந்திருக்கிறது. காமத்தைப் பற்றிய தேடல்கள்தான் கலையாக வளர்ந்து ஒவ்வொரு மனிதனையும் கவர்கிறது. காமம் இயல்பானது என்பதாக புரிதல் இருந்த காலத்தில் வாழ்வும் எளிமையாகக் கடந்துபோயிருக்கிறது.

சங்கப் பாடல்களில் ஒரு பெண்ணோ ஆணோ காதலிப்பதோ உறவு கொள்வதோ
குற்றமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் பின் வரும் காலக் கட்டங்களில் வெளியிலிருந்து வந்த கலாச்சார பகிர்வுகள் மற்றும் திணிப்புகளால், பின் நாளில் காதல் என்பதோ காமம் என்பதோ முற்றிலும் ஒதுக்கப் படவேண்டியவை என்ற தோற்றம் தமிழ் சமூகத்தில் உண்டாகி இருக்கிறது. நமது சமூகத்தில் எல்லோருமே வானத்தில் இருந்து குதித்த அல்லது பூமியில் இருந்து முளைத்தவர்கள் என்பது போன்று நடிப்புடனே வாழ்கிறோம். எல்லா மதங்களுமே கடவுளையும் காமத்தையும் எதிர் எதிர் துருவங்களாக வைத்து பிழைப்பை நடத்துகின்றன. உண்மையில் காமம் அவ்வளவு ஒதுக்கப் பட வேண்டிய விஷயமே அல்ல.

பேரிலக்கியங்கள் எல்லாமே மனிதனின் பாலுணர்வின் விளைவுகளைப்
பேசுபவையே. இந்நிலையில், அவற்றில் சில, மதங்கள் பேசும் கருத்துகளை மறுபிரதி எடுத்து - நீதி சார்ந்த காம ஒழுக்கங்களை போதிப்பவை. மற்றவை மனிதனின் இயல்பாக காமத்தை எடுத்து சொல்பவை. தமிழ் தீவிரஇலக்கிய சூழலில் இந்த இருவகை படைப்புகளில் முதல்வகைப் படைப்புகள் அவ்வளவாக கவனம் பெற்றவை அல்ல.

இந்நிலையில் .மாதவனின் கிருஷ்ணப்பருந்து நாவல் நம் முன் வைப்பது
என்ன?

இது ஒரு மனிதனின் பார்வையில் விரியும் சற்றே நீண்ட சிறுகதை என்று
சொல்லலாம். ஏனென்றால் இந்த கதை முழுக்க ஒரு மனிதனின் இயல்பைச் சார்ந்து நகல்கிறது. காலம் மட்டுமே நீண்டு கிடக்கும் இந்த கதையில்.... கதாப்பாத்திரங்கள் உட்பட கதையின் எந்த ஒரு உறுப்பும் பெருமாற்றங்களை அடைவதில்லை.

சுவாமி என்று அழைக்கப்படும் நாவலின் நாயகன், காமத்தைப் புறந்தள்ளி
யோகநாயகனாக வாழ முயல்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாள். அவன் தொடர்ந்து பக்தியின் மூலம் காமத்தைக் கடக்க முயல்கிறான். அவனிடம் வந்து சேரும் வேலப்பன் என்ற சிறுவனின் வாழ்வும் அவன் வாழ்வுடன் பிணைந்து விடுகிறது. இந்த இடத்தில் முக்கிய அம்சம், நாவலின் முழுப் பகுதியிலும் வேலப்பனின் குணாம்சம் மட்டுமே மாற்றம் அடைகிறது. நாவலின் இறுதி வரை வேறெந்த கதாப்பாத்திரமும் குணநல மாற்றங்களை அடைவதில்லை. இது இந்த நாவலின் பெரும் குறை.

நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிருஷ்ணப்பருந்து ஒரு குறியீடாக, ஒரு சாட்சியாக வருகிறது. தெய்வாம்சம் கொண்ட சுவாமியின் அறையில் திறந்த
மார்பு பெண் ஓவியம் இருப்பதை வேலப்பன் திடீரெனப் பார்க்கிறான். ஏனென்றால் கடந்த காலத்தில் அவன் அவரை ஒரு முனிவனைப் போல கருதிவந்திருப்பதால் அதை அவன் அதன் முன் உணர்வதில்லை. ஆனால் அவருள் எப்போதும் எதோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் காமம் அந்த ஓவியம் வழியே வேலப்பனுக்கும் நமக்கும் உணர்த்தப்படுகிறது. நாம் புனித பிம்பங்களாக ஆராதித்துவரும் ஆளுமைகளின் மேல் வரும் சந்தேகங்கள் அவர்களையோ அல்லது அவர் மேல் கொண்ட சந்தேகங்களையோ முற்றிலும் நிராகரிக்க வைக்கும். வேலப்பன் சந்தேகத்தை நிராகரிக்காமல் சுவாமியை நிராகரிக்கத் தொடங்குகிறான்.

சுவாமி தன் மனைவியுடன் நடத்திய சிருங்காரங்கள் நினைவில் வாழ்கிறார். வெளியில் அந்த சிருங்காரங்கள் குறித்த நினைவுகள் வராமல் ஒரு யோகி
போன்ற பிம்பத்துடன் வாழ்வதாக நடிக்கிறார். இறுதில் சுவாமி தன் தாடியை மழித்துவிட்டு வரும்போது அவரின் ஒழுக்க முகமூடியையும் சேர்த்தே மழித்துவிடுகிறார்.அவரின் உண்மையான பிம்பம் வெளிப்படுகிறது. நாவலின் இந்தப் பகுதியில் கிருஷ்ணப்பருந்து வருவதே இல்லை. ஏனென்றால் கிருஷ்ணப்பருந்து என்பது அவரின் உள்ளே இருக்கும் காமத்தின் குறியீடு. வேலப்பனைக் காப்பாற்றுமாறு கேட்கும் அவன் மனைவி மீது காமம் நுரைத்து வெடிக்கிறது. இந்நிலையில் வேலப்பன் இவர் மீது கொண்ட சந்தேகம் உண்மையாகிறது. அவன் மனைவி அவன் மேல் கொண்ட காதலும் உண்மையாகிறது. அவள் காமத்தின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் இதுவரை அவர் அவர்மேல் அவராக உருவாக்கிக் கொண்ட பிம்பம் உடைந்து சுக்கல்சுக்கலாக நொறுங்கிப் போகிறது. நொறுங்கிய பிம்பங்கள் அவரையே பார்த்து சிரிக்கும் வேளையில் அவர், காமத்தை நிராகரித்து வேலப்பனைக் காப்பாற்ற வெளியேறிப்போகிறார்.

நாவல் முழுவதும் ஒரு வித நாடகத் தன்மை இருந்தாலும், இறுதிக்காட்சி மிகை
உணர்ச்சியுடன் கூடிய நாடகமாகத் தோன்றுகிறது. ஏனென்றால் ஒருவன் அல்லது ஒருத்தியிடம் உறவுக்கான சம்மதம் பெற்ற பின் அதைத் தவித்துவிட்டுப் போவதென்பதெல்லாம் இயல்பில் நடக்காது... இது போன்றதொரு சூழல் யாருக்காவது அமைந்தால், அவர்கள் உறவு கொண்டுவிட்டு வாழ்நாளெல்லாம் அதை நினைத்து வருந்துவார்கள் அல்லது மகிழ்வார்கள். இந்த இடத்தில் நாவலின் நீதி சொல்லும் போக்கு நாவலை விட்டுத் துருத்தியபடித் தெரிவது நாவலின் தோல்வி என்றே சொல்லலாம்.

மற்றபடி மனித மனதின் மாற்றங்கள் எப்படி மனித உறவுகளை நிர்ணயிக்கிறது
என்பதைச் சொல்வதில் நாவல் வெற்றிபெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

புத்தகத்தின் பெயர் : கிருஷ்ணப்பருந்து
எழுதியவர் : ஆ.மாதவன்
பதிப்பகம் :
தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை - 14

விலை : 65 ரூபாய்



Monday, November 1, 2010

பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்? - பிலோ இருதயநாத்- புத்தக அறிமுகம்


பயணம் - இந்த ஒற்றை சொல்லில் இயங்குகிறது உலகம். ஆனால் கடைசியாகப் பயணம் சென்ற இடம் என்ன என்று நம்மைக் கேட்டால் சற்றே யோசிக்கத் தோன்றும். தினசரி வாழ்வில் சிதையும் ஆன்மாவைக் காப்பாற்ற எங்கேயாவது போகலாம் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சிறுவயதில் பக்கத்துத் தெருவிற்குப்போவதே பயணம்தான். வயது ஏற ஏற உள் நோக்கிய பயணமும், வெளி உலகப்பயணமும் குறைந்து போகிறது. உலகில் பெரும் மாற்றங்கள் பயணத்தின்மூலமே சாத்தியமாகி உள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து மனிதன் பயணத்தின் மூலமே உலகெங்கும் பரவினான்.அதன் பின்தான் அவன் சந்தித்த சவால்களின்மூலம் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி சத்தியப்பட்டது. இன்று நாம் காலையிலிருந்து இரவுவரை ஒரே மாதிரியான வாழ்க்கை வாழப்பழகிவிட்டோம். நமது தினசரிப் பயணம் என்பது ஒரு கூண்டில் இருந்து இன்னொரு கூண்டிற்குமாறும் நாகரீக சர்க்கஸ் கூண்டு வாழ்வாகவே இருக்கிறது.வெளி உலகத்தேடலுடன் இருக்கும் குழந்தைகளை நான் பார்த்தே பலவருடம் இருக்கும். இதில் நகரம் கிராமம் என்ற பேதம் எல்லாம் இல்லை. முன்பெல்லாம் குழந்தைகள் வீடு வந்து சேர்வதில்லை என்ற கவலையுடனே பல பெற்றோர் இருப்பார்கள். ஆனால் இன்று உட்கார்ந்தஇடத்தில் டி.வி , கம்ப்யூட்டர் , அபாகஸ், ஓவியம் இவற்றை கற்றுக்கொள்கிறார்கள். இதில் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் நிச்சயமாக மனித எந்திரங்கள்தான்.

பெற்றோர் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்க நினைப்பதுதவறல்ல.ஆனால் இயற்கையை பற்றிய எந்த அறிவும் அற்ற இவர்கள் என்ன ஓவியம்
வரைந்து எதை அடையப்போகிறார்கள். அது போலவே மற்றவையும். பெரும்பாலான பெற்றோரின் சோம்பல்தான், அவர்களின் குழந்தைகளுக்கும் பழக்கமாகிறது. சனி, ஞாயிறு என்பது தின்றுவிட்டுத் தூங்கும் நாட்கள் என்பதாகவே நம் மனதில் பதிந்து போயிருப்பது சோகம்தான்.

சிறு வயதில் நான் படித்த "பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்?" புத்தகத்தை என்னால் மறக்கவே முடியாது. எப்போதும் வெளியே சுற்றுவதை வரவேற்கும் என் சித்தப்பாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு நாளில் நூறு கிலோமீட்டர்வரை சைக்கிளில் பயணம் செய்யக்கூடியவர் (
பல முறை அவர் மதுரைக்கு சைக்கிளில் பொய் வருவதை பார்த்திருக்கிறேன்). நானும் அவருமாக எங்கள் ஊரின் அருகே உள்ள பல கிராமங்களுக்கு சென்று வருவோம். வெளிஉலகம் என்ற ஒன்றை அறிமுகம் செய்ததில் அவர் பங்கு மிகமுக்கியமானது. அதே போல பிலோ இருதயநாத். என் சித்தப்பாவை மற்றொரு பிலோ என்று சொல்லலாம்.

பிலோ இருதயநாத், ஒரு பயணி என்பதாக எடுத்துக் கொண்டால் நாம் அவரைசரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு தனி நபர் காடுமேடெல்லாம் அலைந்து இந்தியாவின் பல பகுதிகளையும் பார்த்திருக்கிறார். அவர் பெரும்பாலும் பார்த்தது காடுவாழ் மக்களை - இப்போதும் நாம் காட்டுமிராண்டி என்று அழைக்கும் மக்களை. அந்த மக்களை சக மனிதனாக 50 வருடங்களுக்கு முன் நினைப்பதே பெரிய ஆச்சர்யம். இந்நிலையில்அவர்களுடன் போய் தங்கி, உண்டு உறங்கி, குறிப்புகள் எடுத்து அவர்களின் வாழ்வை இன்றும் நமக்குச் சொல்லும் புத்தகங்களை எழுதிய தனி நபர் இயக்கம் என்று பிலோவை சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன் படித்த, பயணம் செய்த என் நினைவுகளை மீண்டும் புத்துயிர் ஊட்ட பிலோவின் புத்தகங்களை தேடினேன். என் நண்பர்
களிடமும் , பல புத்தகக் கடைகளிலும் விசாரித்து, கடைசியாக அவர் புத்தகங்கள் வானதி பதிப்பகத்தில் கிடைப்பது தெரிந்தது. வானதி பதிப்பகம் போய் பிலோவின் எல்லாப்புத்தகங்களும் வேண்டும் என்றவுடன், அவர்கள் நான்குதான் இருப்பதாகவும், இரண்டு புத்தகங்கள் இல்லை என்றும் சொன்னார்கள். நான்கையும் வங்கி உடனேபடிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்ட வருடம் 1989 . நான்குபுத்தகங்களின் மொத்த விலை 53 ரூபாய்.

புத்தகம் பயணம் செய்வது எப்படி என்பதில் ஆரம்பித்து சவால்கள், சிரமங்கள், உயிராபத்துகள், விலங்குகள், காடர்கள், திருடர்கள் என்று எல்லா பகுதிகளையும்விவரிக்கிறது. பிலோ வெறும் மனிதர்கள் நம்பி மட்டுமே பயணிக்கிறார். பயணத்தில் அவர் சந்திக்கும் நாட்டு மனிதர்களில் சிலராவது திருடர்களாய் இருக்கிறார்கள். ஆனால் காட்டில் அவரிடம் பரிவுடன் பழகும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர் எச்சரிக்கை செய்வது எல்லாமே நாட்டில் வாழும் மனிதர்களைப் பற்றியும், காட்டில் வாழும் விலங்குகளைப் பற்றியுமே. ஒரு இடத்தில், போட்டோ எடுக்கக் கூட அனுமதி கேட்கிறார், ஏனென்றால் நான் என் அதிகாரத்தை அப்பாவிகளிடம் காட்ட விரும்பவில்லை என்று கூறுகிறார். இந்நிலையில் தண்டகாருண்யாவில் நமது அரசும், முதலாளிகளும் செய்யும் அத்துமீறல்கள் உங்கள் ஞாபகத்தில் வந்தால் நீங்கள் இன்னொரு பிலோ என்றுசொல்லாம். குழந்தைகள் இதைப் படித்தால் அவர்கள் வாழ்வின் எக்காலத்திலும் பிறர் மேல் அதிகாரம் செலுத்த நினைக்கமாட்டார்கள்.

இந்தப் புத்தகத்தில் வரும் குறிப்பை கொண்டு பார்த்தால்... 2012 பிலோவின்நூற்றாண்டாக இருக்கும், பிலோவின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கி, அவர்பயணம் மேற்கொண்ட இடங்களுக்கு அந்த அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குப் பயணம் பற்றியும், காட்டுயிர்கள், காடர்கள், மனித உரிமை பற்றியும் ஒருவிழிப்புணர்ச்சி ஏற்படும். ஐரோப்பாவில் இதைப் போல வர விடுமுறைகளில் மாணவர்கள் பெருமளவில் பயணம் செய்வதைக் காணலாம். அதற்கு அரசு கட்டண விலக்குகளையும் அளிக்கிறது.
இன்றைய சூழலில், இப்படிப் பட்ட புத்தகங்கள் தமிழில் வருவதில்லை. வருவதெல்லாம் 5 வயது குழந்தைக்கு C ++, 10 வயதுக் குழந்தை பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற புத்தகங்கள்தான். வாழ்க்கை என்பது பணம், வீடு, அதிகாரம் இவற்றை எல்லாம் தாண்டிய ஒன்று என்பதை உணர இந்த புத்தகம் உதவக்கூடும். உங்கள் குழந்தைக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள்.... பயணம் செய்ய ஊக்குவியுங்கள்... அவர்கள் ஒரு முழு மனிதனாய் வளர உதவுங்கள்.... பெற்றோராய் அல்ல..... ஒரு சக மனிதனாய்..... அதுவே பிலோவைப்போன்ற மனிதர்களுக்கு... அவர்களின் உழைப்பிற்குச் செய்யும் மரியாதை.

புத்தகத்தின் பெயர் : பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்?
எழுதியவர் : பிலோ இருதயநாத்
பதிப்பகம் : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு,
தி.நகர்.
சென்னை - 17.
விலை : 18 ரூபாய்




Tuesday, October 26, 2010

பாலையில் அலையும் மான்கள்



"பழைய ராமநாதபுரம் மாவட்டம்" என்றாலே இதை படிக்கும் யாருக்கும் ஒருவறண்ட பாலை நிலம் மனதில் தோன்றும். தண்ணி இல்லாத காடு என்ற சொற்பிரயோகத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தந்த மண். ஆனால் எத்தனை பேருக்கு சிவகங்கை மாவட்டத்தைத் தெரியும் என்றுதெரியவில்லை. பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப் பட்ட இந்த மாவட்டம் அசல் தண்ணி இல்லாத அரைப்பாலைநிலம். கடந்த கால அரசுகளின் அளப்பரிய சாதனையான வேலிக்காத்தான் மரங்களும் இயல்பான வெக்கையும் நிரம்பிய இந்த மாவட்ட மக்களில் குறிப்பிடத்தகுந்த அளவு ஆண்கள் அரபு நாடுகளில் வேலை செய்கிறார்கள். விவசாயம் மற்றொரு தொழில். ஆனால் அது வெறும் பேசு பொருள்மட்டுமே. வருடத்தில் 5 -6 நாட்கள் மட்டுமே புரண்டோடும் மழை பெய்யும். அதை நம்பி விவசாயம் செய்ய சிலருக்கு மட்டுமே மனதைரியம் உள்ளதால், விவசாயம்
வழக்கொழிந்து வருகிறது.. பலநூறு ஆண்டுகளாக மக்கள் வெளிநாடுகளில் (முன்பு இந்தோனேசியா, பர்மா, மலேயா, இப்போது அரபு நாடுகள், சிங்கபூர்) வேலை செய்வதையே வருமானத்திற்கான முக்கிய வழியாக கொண்டுள்ளனர். எந்த இயற்கை வளமும் அற்ற அந்தப் பகுதியில்தான் உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டு அரண்மனைகள் உள்ளன. இவை அனைத்துமே நான்கு மாதத்திற்கு முன்பான புரிதல்கள். ஆனால் ஒரு உயிரின் இருப்பு இவை அனைத்தையும் தாண்டிய சந்தோசத்தையும் பெருமையையும் அந்தப் பாலைக்கு ஏற்படுத்தி உள்ளது.

நான்கு மாதத்திற்கு முன் ஒரு சனிக்கிழமை நானும் என் சகோதரரும் மதுரை சென்றோம்.ஆயிரம் ஆண்டு பழமையான மதுரையின் நெடும்வீதிகளின் வழியே அலைந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு 9 மணி அளவில் மாட்டுத்தாவணி வந்து சேர்ந்தோம். மேலூர் வழியாக மதகுபட்டி சென்று அங்கிருந்து எங்கள் ஊரான ஒக்கூருக்குச் செல்வதெனமுடிவு செய்து பேருந்தில் ஏறினோம். மாட்டுத்தாவணியில் இருந்துகிளம்பியதில் இருந்தே இம்சை ஆரம்பித்தது. பழைய அதிலும் மொக்கையான பாடல்களை நாராசமாய் ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.
ஓட்டுனர் இருக்கையின் பின்புறம் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். எனவே அந்தப் பாடல்கள் மற்றும் நடிகர்களின் உடல்மொழி பற்றிப் பகடி செய்தபடியே வந்தோம். மதகுபட்டியை நெருங்கும் பொது திடீரென்று 'டம்' என்ற சத்தம் கேட்டது...... எங்களையும் டிரைவரையும் தவிர்த்து மக்கள் அனைவருமே தூக்கத்தில்இருந்தனர். டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்க, நாங்களும்இறங்கினோம்.

இறங்கிப் பார்த்தால், நன்கு வளர்ந்த புள்ளிமான் ஒன்று துடித்தபடி இருந்தது. நிச்சயமாக டிரைவர் மேல் எந்த தவறும் இல்லை. மிக மெதுவாகவே வண்டியை ஓட்டி வந்தார். இருந்தாலும் சட்டப்படி செயல்பட்ட அவர், அருகில் உள்ள மதகுபட்டி காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். உடனே பின்னால் வந்த சுமோ வெளிச்சத்தில் என் சகோதரர் மானை ஆராயத்தொடங்கினார். அது 3 அடி உயரமும், 30 கிலோ எடையும் இருக்கும். உடல்முழுக்க புள்ளிகளும் அடிவயிறு சற்றே வெள்ளை நிறமாகவும் இருந்தது. அது தண்ணீர் குடிக்க வந்திருக்கலாம். என் அண்ணன் மானின் வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டு அது சினையாக இருப்பதாகவும், விரைந்து செயல்பட்டால் வயிற்றில் இருக்கும் குட்டிகளையாவது காப்பாற்றலாம் என்றுஅங்கு வந்த காவல் அதிகாரியிடம் சொல்ல, அவர் மிக அலட்சியமாகஅதெல்லாம் செத்துரும் தம்பி என்றார். அது சரி, மனிதன் உயிருக்குப்போராடினாலே காப்பாற்ற மாட்டார்கள் இதில் மானையா காப்பாற்றப்போகிறார்கள் என்றார் ஒரு பெரியவர். இரவு 12.30 வரை அங்கேயேநின்றுவிட்டு இறுதியாக மானை நாங்கள் இருந்த பஸ்சிலேயே ஏற்றினோம். மூன்று பேர் சேர்த்துதான் தூக்கவே முடிந்தது. இரவு மதகுபட்டி காவல்நிலையத்தில் இறந்து போன மானை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினோம். மறுநாள் ஒக்கூர் மாட்டாஸ்பத்திரியில் பிரேத
ப்பரிசோதனை முடிந்து மான் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காட்டுயிர் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை இந்த மானின் இறப்பு எழுப்பி உள்ளது. ஏனெனில் என் அம்மா சிறு வயதில் பலமுறை மான்கறி சாப்பிட்டது பற்றி சொன்னதும்,
என் வீட்டின் அருகில் ஒரு மான் வேலியில் மாட்டி இறந்து போனதையும் தவிர எங்கள் ஊரில் மானின் இருப்பு பற்றிய கதைகள் குறைவு. அந்த மான் இறந்த போது, சிவகங்கையில் இருந்து வனஅலுவலர் மற்றும் விலங்கியல் மருத்துவர் வந்து பிரேத பரிசோதனைசெய்துவிட்டு மானைப் புதைத்தார்களாம். பின் மக்களிடம் யாரும் புதைத்தமானைத் தோண்டி எடுத்துத் திண்ணக்கூடாது ஏனெனில் விசஊசி போடப்பட்டுள்ளது என்று எச்சரித்துவிட்டுச் சென்றனராம். இந்த மான்களின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் நில மற்றும் உயிரின அடிப்படையில் புரிந்து கொள்வது இன்றியமையாதது. எங்கள் மாவட்டத்தில் குழிமுயல், நரி, கீரி போன்ற சிற்றுயிர்கள் மட்டுமே வாழமுடியும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் பெருமழையில் கண்மாய் நிரம்பினால் எண்ணற்ற வக்கா பறவைகளும், நீர்க்காக்கைகளும் வரும். பறவைக்கழிவுகள் நிலங்களை உரப்படுத்தி அவ்வருடம் விவசாயம் செழிக்கும் என்பதால் அவருடம் மக்களின் சந்தோசம் வருடம் முழுவதும் இருக்கும். அப்போதெல்லாம் சில வீடுகளில், கரும்பு வயல்களில் இருந்த நரிக்குட்டிகளை எடுத்து வந்து நாயைப் போல வளர்ப்பார்கள். அவை இரவு முழுவதும் ஊளை இட்டபடி இருக்கும்.10 வருடம் முன்பு வரை எளிதாகக் காணமுடிந்த நரிகளை இப்போது பார்க்கவே முடியவில்லை. இந்நிலையில் வருடம் முழுவதும் பாலையின் வெக்கையும், இலையற்ற வேம்பும் நிறைந்த எங்கள் மாவட்டமான சிவகங்கையில் மான்களுக்கான வனச்சூழல் நிலவுவது மகிழ்ச்சியையும் பெரும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இதுமாதிரியான பாலையில் வாழப்பழகி உள்ள அவற்றைக் காப்பது மக்களின் - அரசின் கடமை ஆகிறது. இப்பகுதியில் மான்களால் விவசாயத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக்குறைவாகவே இருக்கும் என்பதால் மேலும் சில மானினங்களைஅறிமுகப்படுத்தி, ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட மற்றும் பாதுகாக்கப் பட்டமான்சரணாலயம் அமைக்கப்பட்டால் அது மக்களிடையே காட்டுயிர்கள் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும் நிகழ்சிகள் மூலம் மக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு புரிதலை ஏற்படுத்தினால் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இங்கே மான் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஏற்படுத்தலாம்.அவ்வழியே வன உயிர்ப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எல்லாவற்றிலும்
மேலாக செட்டிநாட்டு அரண்மனைகளைப் போலவே மான்களுக்கான பகுதியாகவும் இந்த பாலை நிலம் அறியப்படும்.

குறிப்புகள் :-

மாட்டாஸ்பத்திரி - veterinary hospital

ஒக்கூர் - சிவகங்கை அருகே உள்ள ஒரு சிற்றூர். புறநானூற்றுப் புலவரான மாசாத்தியாரின் ஊர்.

வேலிக்காத்தான் -
காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முள்மரம். இன்றும் பல குடும்பங்களை வாழவைக்கும் தேவதாரு. ஆடுகளும், மாடுகளும் விரும்பி உண்ணும் இதன் காய்கள் மிகுந்த புரதம் நிரம்பியவை. ஆனால் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கும் மரம்.

மலேயா
- மலேஷியா

கனவுகளின் பயணி


கடவுளின் கனவில் நானிருந்தேன்.

அவன் /அவள்/அது அல்லது
கடவுள் என்பதாய்
எழுதி இருந்தது
அவரின் முகவரி.

கடவுள் தன் இறப்பை
சற்றே தள்ளி வைத்தார்.......
தன் கேள்விக்களுக்குப் பதில் என்ன?
என்றபடி பிரபஞ்சத்தைத் தூங்க வைத்தார்.

கேள்விகள் எல்லாம் செத்துப் போன ஒரு தருணத்தில்
பதில்களெல்லாம் உயிர் பெற்றுப் பறந்தன.
பறக்கும் பதில்களில்
சில கடவுளின்
முகத்தில் உமிழ்ந்தன......
சில எச்சமிட்டன.....

கடைசியாய் நான் எப்படித்தோன்றினேன் ?
என்ற கேள்வியுடன் கடவுள் இறந்து போனார்
எல்லாப் பதில்களும் கடவுளின் அழுகிய
உடலைத் திண்ணத் தொடங்கின....

அவரின் கடைசிக் கேள்வி மட்டும்
கனத்த கழுகாய்
பிணத்தைச் சுற்றி வருகிறது.

மற்றொருவனின் கனவில்
வாழ்வதைப் பற்றிய
என் நினைவுகள்
வளரத்தொடங்கியது
கழுகின் நிழலில்....

ஒற்றை மரம் கொண்ட
பெருத்த வனமாய்.

Wednesday, October 13, 2010

ஈழம் - இரவு - எலீ வீஸல்


நான் படிக்கும் புத்தகங்களை பெரும்பாலும் நானே தேர்ந்தெடுக்கிறேன். அதிஷ்டவசமாக சில புத்தகங்கள் என்னிடம் வந்து சேரும். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அண்ணன் வசந்தகுமார் சில புத்தகங்களைக்கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் ஒரு புத்தகம் எலீ வீஸல் எழுதிய இரவு. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக என்னுடைய கண் முன்னே அசைவின்றி இருந்த புத்தகம். வாசிக்கும் விருப்பத்தில் அனேகமாக கடைசி நிலையில் இருந்த புத்தகம். திடீரென்று நேற்று வேலைக்கு கிளம்பும் போது கையில் சிக்கி படித்து முடித்தேன்.

அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிவிட விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை படிக்கும் முன்பு யூதர்கள் மேல் ஒரு எரிச்சல் உண்டு. ஏனென்றால் இன்று உலகில் நடக்கும் பெரும் யுத்தங்களை பின் நின்று நடத்துவது அவர்கள்தான். பொருளாதாரம், கல்வி இரண்டையும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப் படைக்கும் அவர்களைப் பற்றி உலக அரசியல் தெரிந்த யாரும் அறிவார்கள்.

ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகான என் எண்ணம் முற்றிலும் வேறுபட்டது.

உலகம் முழுவதும் இலக்கியம் பல கிளை கொண்ட மரமாக இருக்கிறது. பேரிலக்கியங்கள் சமூக அவலங்களை உலகுக்கு எடுத்துச் சொல்பவையாகவேஇருக்கின்றன. இந்தப் புத்தகமும் ஒரு பேரவலத்தை நம் கண்முன் மறுபடி நிகழ்த்திக் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போர் என்பது ஹிட்லரை மையமாகக்கொண்டதாகவும் அவர் நடத்திய இனஅழிப்பை நிறுத்துவதற்காகவும் நடத்தப்பட்டது என்பதாகவே நாம் அறிந்திருக்கிறோம். இந்த இடத்தில் இனஅழிப்பு என்பதுஒரு
சொல்லாக - கடந்து போகக்கூடியதா இருக்கிறது. ஆனால் யூத இனம் எப்படி எல்லாம் அழிக்கப்பட்டது என்பதற்கு பல சாட்சியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்தப் புத்தகம்.

எலிசர் என்னும் சிறுவன், (வயது 15 ) ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன்இருப்பவன். ஹிட்லரின் நடவடிக்கையால் அவன் வாழ்வு எப்படியெல்லாம்மாறுகிறது எனபது தான் இந்த சுயசரிதையின் சுருக்கம். நடக்கும் துயரங்களைசிலர் சொன்னாலும், அவை எல்லாம் நடக்கவே சாத்தியமற்றவை என்பதாய்புரிந்து கொண்டு தினசரி வாழ்வை வாழும் மக்கள். அதன் பின் அவர்கள்கேள்விப்பட்டதை விடக்கொடுமையான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் நுழையும் ஒரு முகாமில், குழிகளில் சடலங்கள் கிடப்பதும், கைக்குழந்தைகள் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும் பார்ப்பவர்கள் தங்களுக்கு நேரப்போவதைதெரிந்துகொள்கிறார்கள். அதன்பின் அப்பாக்களை கொன்று, அவர்களின்உணவை மகன்கள் உண்டு வாழ்கிறார்கள். நோயாளிகள், உடல் திடமற்றோர் உடனடியாக எரி உலைக்கு அனுப்பபட்டு உலகத்தில் இருந்து விடைபெறுகிறார்கள். பலருக்கும் சாவதே விருப்பத்திற்கு உட்பட்ட செயலாய்இருக்கிறது. உயிரற்ற உடல்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. தூக்கிலிடப்படுவோர் உடலின் கனமற்ற தன்மையால் நெடுநேரம் தொங்கி அணுஅணுவாக உயிரை விடுகின்றனர். கடைசியில் எலீயின் அப்பாவும் நோய்வாய்பட, அவன் அப்பாவை முடிந்தவரை காப்பாற்ற முயல்கிறான். இறுதியில், அவனேசலித்துப்போய் கைவிட நேர்கிறது. ஒரு நாள் காலை அவன் எழும்போது அவன்அப்பா இல்லை. அவர் உயிருடனோ, பிணமாகவோ எரிக்கப் பட்டிருக்கலாம் என்றபடி கடந்து போகிறான். இடையே எல்லோரும் கடவுளைத் தொழுகிறார்கள். கடவுளிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் புத்தகத்தில் ஓரிடத்தில் கடவுள் எங்கே எனக்கேட்பவனிடம், எலீ சொல்ல நினைப்பது "
இதோ இங்கே தூக்கில் தொங்குகிறானே அவன் தான் கடவுள்" என்று.

எல்லோரையும் கொல்வதை எப்படி உலகம் வேடிக்கை பார்க்கிறது என்று கேட்க, அதற்கு உலகம் நம்மை மறந்துவிட்டது.... கைவிட்டுவிட்டது என்பதே பதிலாய்இருக்கிறது. இந்த இடம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இடம். உலகமே ஒரு இனத்தை கைவிடும் போது, மீண்டு வரும் யாரும் உலகத்தை பழிவாங்க முனைவது இயல்பே. அதனால்தான் இன்று யூத இனம் பேரழிவுகளைஏற்படுத்தும் ஒரு இனமாக இருக்கிறது. அவர்கள் இன்று உலகின் பெரும்எண்ணெய், தங்கம், வங்கி, ஆயுத வியாபாரிகளாக வளர்ந்துள்ளனர். சகமனிதனை கைவிடும் நாம் அதற்கான கூலியைப் பெற்றேஆகவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தை தொடர்ந்து ஒரே மூச்சில் வாசித்தல் என்பது சாத்தியமில்லை. ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் நிறுத்திவிட்டு இப்படிஎல்லாம் நடக்க சாத்தியமில்லை என்று யோசிக்க வாய்ப்பிருக்கிறது, இந்தப்புத்தகத்தில் வாழும் சராசரி மக்களைப்போலவே. அப்படி நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நாளை இது நமக்கும் நடக்கலாம்.

இப்போது ஈழத்தைப் பற்றி,

இந்தப்
புத்தகத்தில் விவரிக்கப்பட்ட இன அழிப்பிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல ஈழத்தில் நடந்த அழித்தொழிப்பு. ஈழத்தில் வாழ்ந்தவன் தமிழன்என்பதைத் தாண்டி, அவர்கள் மனிதர்கள் என்பதைகூட இந்த உலகம் உணரமறுத்துவிட்டது. 600 கோடிப் பேர் வாழும் உலகில் 10 லட்சம் பேர் அழிந்துபோனதுஒரு நிகழ்வாகக் கூடப் பதியப்படவில்லை. எண்ணிக்கை என்பதைவிட, ஒருஇனமே அழிக்கப்பட்ட துயரத்திற்கு யாரும் கண்டனம் தெரிவிக்ககூடத் தயாராய்இல்லை. இந்நிலையில் இந்தப்போர், நடந்தது அநேகமாக வரலாற்றின்பக்கங்களில் இருந்து துடைத்து எடுக்கப்படும். ஏனென்றால் வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் மிகைபுனைவு. அதில் உண்மையைக்கண்டறிய சாமானிய மனிதனுக்கு வாய்ப்பே இல்லை.

இப்போதைய தேவை என்ன?

ஈழத்தில் நடந்தது என்ன என்பதை விட, அங்கே நடந்த அரசியல், களத் தவறுகளைப் பேசி தானும் அறிவாளி என்பதைக் காட்டிக்கொள்ள முயல்வோரேஅதிகம். இன்னொன்று குறை சொல்வோர் யாரும் அதற்கான மாற்று அரசியல்பற்றி தெளிவான கருத்தை முன்வைப்பதில்லை. இன்றைய உலகமயமாக்கலின்சூழலில் ஆயுதப்போராட்டம் என்பது ஆயுத வியாபாரிகளின் வியாபாரத்தந்திரங்களில் ஒன்று. இங்கே ஆயுத வியாபாரி என்பது தனிப்பட்ட நிறுவனமோ, தனி நபரோ அல்ல - அவை பெரும் பண பலம் கொண்ட வல்லரசுகள் மட்டுமே.

வரலாற்றை மீண்டும் மீண்டும் படித்தால் ஒன்று மட்டும் தெளிவாகும் - அது கல்வியும் பொருளாதாரமுமே ஒரு இனத்தையோ தனி மனிதனையோ விடிதலை செய்யமுடியும் என்பதே. இந்த நிலையில் ஈழத்தமிழன் எந்த நாட்டிற்கு புலம் பெயர்ந்தாலும், கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் மூலம் இனத்தை மீட்டெடுக்க முடியும். இரண்டாவது ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வின்குறிப்புகளை யூதர்களைப் போல ஆவணமாக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் (?????) முதல்ஆராய்ச்சிக்கட்டுரைகள் வாசிக்கும் எழுத்தாளன் வரை யாரும் இதைத் தங்களின்படைப்பில் கொண்டுவரத் தயாராய் இல்லை. அவர்களை பொறுத்தவரைபிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே விளிம்பு மனிதர்கள். அதுதவிர விவசாயிகள், மீனவர்கள் போன்ற பெரும் எண்ணிகையிலான துயரவாழ்வினை வாழும் மக்களுக்கு அவர்களின் உலகில் இடமே இல்லை. மற்றசிலருக்கு காவிய நாயகர்கள், அரசியல்வாதிகள், அற்புத தருணங்கள் பற்றி எழுதமட்டுமே நேரமும் ஆர்வமும் இருக்கிறது. இன்னும் சிலருக்கு உலக இலக்கியம், உள்ளூர் இலக்கியம் எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு - எது இலக்கியம் என்பதைவிளக்கவே நேரம் போதவில்லை.

எனவே இனஅழிப்பு பற்றிய புத்தகங்கள் ஈழ மக்களால் மட்டுமே எழுதப்படமுடியும். அப்படி ஒரு புத்தகம் வந்தாலாவது இந்த உலகம் வெட்கித்தலைகுனிகிறதா என்று பார்ப்போம்.

அதுவரை வழக்கம் போல
இலக்கிய வியாதிகளின்அக்கப்போர்களை மட்டுமே கவனித்துக் கைதட்டுவோம். :(

புத்தகத்தைப் பரிந்துரைத்த அண்ணன் தமிழினி வசந்தகுமாருக்கு நன்றி.

சக மனிதன் மேல் அன்பிருக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர் : இரவு
எழுதியவர் : எலீ வீசல்
தமிழாக்கம்: ரவி இளங்கோவன்
பதிப்பகம் : யுனைடெட் ரைட்டர்ஸ்,
130/2, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை - 86.
விலை : 70 ரூபாய்

Tuesday, September 21, 2010

களவு போகும் புரவிகள் - சு. வேணுகோபால் - புத்தகஅறிமுகம்

தமிழ் இலக்கியம் இயற்கை பற்றி நிறைய தகவல்களைக் கொண்டது. ஆனால், தற்போதைய இலக்கியம் நகரம் சார்ந்தும், அது தொடர்பான மக்கள் சார்ந்தும் இயங்கி வருகிறது. கிராமம் சார்ந்து எழுதுபவர்கள் கூட விவசாயமே இல்லாத கிராமத்தையே எழுதுகிறார்கள். கடந்த 50 வருட இலக்கியத்தில் விவசாயத்தை, விவசாயியைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கிராமத்தை அழகியல் சார்ந்து கிட்டத்தட்ட ஒரு பாரதிராஜா படம் போல எழுதுபவர்கள்தான் இன்று இருக்கிறார்கள் அல்லது கிராமம் என்ற போர்வையில் நகர வாழ்வைச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயமொஹனுடனான உரையாடலின் போது, இன்றைய தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்து எழுதுபவர்களில் சு. வேணுகோபால் மிக மிக கவனம் பெரும் படைப்பாளி என்று சொன்னார். சமீபத்தில் தமிழினி பதிப்பகம் போயிருந்த போது அவரின் களவு போகும் புரவிகள் புத்தகத்தை வாங்கினேன்.


மொத்தம் 17 சிறுகதைகள் உள்ள தொகுப்பு. ஒரே மூச்சில் 2 மணிநேரத்தில் படித்து முடித்தேன். சிறுகதைகள் பற்றி பார்ப்பதற்கு முன் சு.வேணுகோபாலின் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண், விவசாயத்தில் தோல்வி கண்டு வேறு வேலை தேடும் ஒரு தாழ்த்தப் பட்ட மனிதன், பாலுறவில் ஊக்கம் குறைந்த ஒருவன், பெண்ணியம் பேசும் பெண்கள், உண்மையான (?????) தியாகி, பன்றி மேய்க்கும் பெண், விவசாயிகள், உடல் பலமற்ற வயதானவர்கள், மன நிலை பிறழ்ந்த ஒரு மேதாவிப்பெண், கணவனுக்காக கருவைக் கலைக்கும் பெண் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றியே பேசுகின்றன சு. வேணுகோபாலின் கதைகள். மற்றொன்று விவசாயம் பற்றி, வளர்ப்பு பிராணிகள் பற்றி வேணுகோபாலின் அவதானிப்பும்,வர்ணனைகளும் (details) வியப்பில் ஆழ்த்துகின்றன.


இனி அந்தத்தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றிய சிறு அறிமுகம்:

1 . அம்மாவின் விருப்பங்கள்:

ஒரு சிறுவனின் பார்வையில் அவன் அம்மா எப்படி நடந்து கொள்கிறாள். அம்மா ஏன் பிற பிள்ளைகளிடம் பாசம் காட்டாமல், நடிக்கிறாள் என்பது போன்ற கேள்விகளுடன் நகர்கிறது கதை. சிறுவர்களின் மன உலகை மிக நெருக்கத்தில் சென்று பார்க்கும் உணர்வைத் தரும் கதை.

2 . மண்ணைத் தின்றவன் :
நாம் உண்ணும் சோறு யாரோ ஒரு விவசாயியின் ரத்தம் என்பதை உணர்ந்திருப்போமா? விவசாயம் என்பது ஒரு சபிக்கப்பட்ட தொழில். அதில் வருமானம் பெறுவது என்பது தார்ப்பாலைவனத்தில் நீர் அருந்துவதைப் போன்றது. எவளவு தண்ணீர் அருந்தினாலும் பாலைவனத்தை ஒருபோதும் கடக்க முடியாது. விவசாயத்தில் வரும் வருமானம் விவசாயியின்/; அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த உழைப்பிற்கு ஈடாகாது. இருந்தும் ஏன் விவசாயம் நடைபெறுகிறது? அது ஆச்சர்யம்தான். சாதிய நிலைப்பாடுகளும், சமூக அங்கீகாரமும், விவசாயமும் எப்படி ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதை இந்தக் கதை நெற்றியில் அடித்தது போலச் சொல்கிறது.

3 . மீதமிருக்கும் கோதும் காற்று:
ஒரு பாலியல் தொழிலாளியின் அனுபவங்களை விளக்கி பல கதைகளை படித்திருப்போம்.ஆனால் இது உண்மையிலேயே அவளின் குரலில் சொல்லப்படுகிறது. வாசகனுக்கு அதிர்ச்சியைத் தந்து, எழுத்தாளன் கவனம் பெற முயலாமல் இயல்பாய் ஒரு சம்பவ நிகழ்வை விளக்கியிருப்பது மிகச்சிறப்பு.

வாய் நாற்றமெடுக்கும் ஒருவன் முத்தமிடும்போது அவள் நினைப்பது :

"மலத்தில் விழுந்த ஈயாகயோனியில் புரண்டார்கள். நிமிர்ந்தபோது அடிவயிற்று வலி.பிராந்தியை நீட்டினார்கள்.பிராந்தி அடித்தால் நாற்றம் தெரிவதில்லை."

"ஒவ்வொருவனும் மேலே படுக்கும்போது யோனி உடலின் வெவேறு இடங்களில் இருக்கக்கூடாதா என்றிருந்தது"


இங்கே காமம் செத்து ஒருத்தியின் சுயம் மட்டுமே எஞ்சுகிறது.


4 . சப்பைக்கட்டு:
புற உலகில் பெண்ணியம் பேசும் ஒருவன் தனக்கான உலகில் மனைவியை, சக தோழியை எவ்வாறு கேவலமாக அணுகுகிறான் என்பதும், அந்த முரணியக்கம் எப்படி நிகழ்கிறது என்பதும் தான் கதை. இந்த ஒருவன் நாமாகவும் இருக்கலாம்.

5 . உருமாற்றம்:

மாறிவரும் உலகில் ஒரு உண்மையான தியாகியின் இருப்பு என்ன? அந்த இருப்பின் தேவையோ/ அவசியமோ இல்லாத நிலையில் அந்த தியாகி எடுக்கும் முடிவும் விளைவையும் இயல்பாக விளக்கும் கதை. இந்தக் கதையில் வரும் தியாகி உங்கள் தாத்தாவாகவோ அப்பாவாகவோ இருக்கலாம்.

6 . சங்கிலி:

பாலுறவில் வெற்றி தோல்வி என்று ஏதுமில்லை. இருந்தும் முதலிரவில் தன் மனைவியிடம் நிருபிக்க முயலும் முதிர்கண்ணன் ஒருவன் தோற்றுவிட்டால் என்ன நடக்கும்? அவன் மனநிலை என்ன?

7 . உடம்பு:

ஈன முடியாமல் தவிக்கும் கிடேரியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்நிலையில் இருக்கும் பெண்ணை அவளின் கணவனின் மனநிலையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? விலங்குகளிலும் சரி, மனிதனிலும் சரி விந்தைத் தருவதோடு முடிந்துவிடுகிறது ஆணின் கடமை. பின் மனிதனுக்கும் விலங்கிற்கும் என்னதான் வித்தியாசம்?

8 . நடை:

பலசமயம் புறக்கணித்தலை நாம் விலகிப் போதலின் வழியே உணர்த்துகிறோம். பிறரைப் புறக்கணிக்க அவர்களின் புறத்தொற்றமும், ஆளுமையும் போதும் என்றாகிப்போகிறது. இந்தச் சிறுகதைப் படித்தபின் நீங்கள் யாரையும் குற்ற உணர்வின்றிப் புறக்கணிப்பது அவளவு சுலபமாக இருக்காது.

9 . பதிலடி:
புரிதலற்ற கணவன் மனைவியும், இடைவெளியை வலிந்து ஏற்படுத்தும் நண்பர்களும் சேர்ந்தால் குடும்பம் சிதைவதைத் தடுக்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
கிராமம் என்றால் அப்பாவி மக்கள் வாழும் இடம் என்ற நினைவுடனே இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மனிதனின் அடிப்படை உணர்ச்சியான குதர்க்கம், பொறாமை எல்லாம் அதிக அளவில் உள்ள சமூகம் அது.

10 . வட்டத்திற்குள்ளே:

ஒரு ஆண் - ஒரு பெண் தன் மனைவி ஆனதாலேயே அவளின் கனவுகளை, படைப்பூக்கத்தை, தினசரி வாழ்வை, இறுதியாய் அவளின் கர்ப்பத்தைக் கலைக்கிறான். அது ஒரு கனவின் அழிப்பு மட்டுமல்ல...... ஆன்மாவின் அழிப்பும்கூட.......

11 . வெகுதூரம் விலகி:

மருத்துவம் சேவை என்பதிலிருந்து வெகுதூரம் விலகி தொழில் என்ற நிலையை அடைந்துள்ளது. கதையின் இறுதியில் டாக்டர் கிழவனின் குரல் கேட்பதாகச் சொல்ல..... இல்ல சார், வெருவா கத்துது.... நாம வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்... என்கிறான் கூட வந்தவன்.

ஆம்..... நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் இயற்கையிடமிருந்தும் கூட...

நாம் நாகரீகம் அற்றவர்கள் என்று சொல்லும் காட்டுவாசிகள் எப்படி மனிதத்துடன் இருக்கிறார்கள் என்பதன் மூலம் எழும் கேள்வி, யார் காட்டுமிராண்டிகள் அவர்களா நாமா? என்பதுதான்.


12 . மாயக்கல்:

சமூகம் ஒதுக்கியுள்ளோரை அதிகாரம் எப்படி சிதைக்கிறது என்பதும், வக்கிரம் பிடித்த அதிகாரப் புள்ளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதுமே கதை.
கதையைப் படித்தவுடன் கீழ்வரும் எண்ணம் எழலாம்:
ராமேஸ்வரம் தாண்டிய கடலிலும் நடப்பது இதுதானே?
(இதில் பன்றிகளைப் பற்றி வரும் தகவல்கள் சிறுகதைகளில் தகவல்களின் முக்கியத்துவம் என்ன என்று சொல்கின்றன)

13 . சாப நினைவுகள்:

நமது சமூகம் குறிப்பாக கல்விக் கூடங்கள் அதிமேதாவிகளை அடிமுட்டாள்கள் ஆக்குவதைத்தான் வேலையாகச் செய்துவருகின்றன. அப்படி முட்டாள் ஆக்கப்பட்ட ஒருத்தி மனநிலை பாதிக்கப்பட்டு சமூகத்தால் என்ன நிலை அடைவாள்?

14 . வேம்பு :


உலகமயமாக்கலால் ஒரு கிராமமும் அதன் வாழ்வியலும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் சிறுகதை. இந்தக் கதையா படித்துவிட்டு சிரிக்கும் நாம் யார்?

குடிக்கும் நீரைக் காசுகொடுத்து வாங்கும் கோமாளிகள்.............

15 . இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை:

இறந்துபோனவனின் பார்வையில் இறப்பு எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.

16 . தருணம்:

இங்கே கோயில்கள், மசூதிகள் எல்லாம் சிதைந்து போகின்றன. ஏன்? மனிதம் சிதைந்த மனிதர்களால்தான். மதம் பெரும்பாலும் மனிதனை தனியல்பு இலக்கச் செய்கின்றன. ஆனால் மதத்தால் என்ன பயன் என்ற கேள்விக்கு மட்டும் விடையே இல்லை.

17 . களவுபோகும் புரவிகள்:

கிராம தெய்வங்களின் உருவாக்கம் மூதாதேயர்களின் வழிபாடாகவே இருக்கிறது. அதை ஒரு மாயஎதார்த்த பாணியில் கதையாக்கியுள்ளார்.
அருமையான அனுபவத்தைத் தரும் கதை.

இது தமிழின் மிக முக்கியமான கதைத்தொகுப்பு.... எல்லோரும் படியுங்கள்......


புத்தகத்தின் பெயர் : களவு போகும் புரவிகள்

எழுதியவர் : சு. வேணுகோபால்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை - 14
விலை : 60 ரூபாய்

Thursday, August 26, 2010

புத்தகம்: ஹெய்டி - ஜோஹானா ஸ்பைரி

கடந்த வாரம் landmark -ல் சில புத்தகங்களை கேட்க அவர்கள் நான் கேட்ட எந்தப் புத்தகமும் இல்லை என்று சொன்னார்கள். :(
அப்போது எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரையான ஹெய்டி-யைப் பார்த்தேன். பலமுறை இந்த புத்தகத்தை புத்தகக் கடைகளில் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எஸ்.ராமகிருஷ்ணனின் எந்தப் பரிந்துரை புத்தகமும் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இதுவும் அப்படியே.

இந்தப் புத்தகத்தைப் பற்றிப் படிக்கும் முன் எஸ்.ராவின் அனுபவத்தைப்படித்துவிடுங்கள்.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி...... உலகிலேயே அதிகபட்சக் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது யார்?
உங்களின் பதில் கீழ்க்கண்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஈழத்தமிழர்கள்...... பாலஸ்தீனியர்கள்..... தொழிலாளர்கள்.... தலித்துகள்...... சிறுபான்மை மக்கள்.... மனநோயாளிகள்..... விவசாயிகள்....

ஆனால் இவர்கள் யாருமே கிடையாது.... அதற்கான பதில் குழந்தைகள். குழந்தைகளின் மேலான வன்முறை கட்டற்றது. இந்தியாவில் இளையோர் எண்ணிக்கை முதியோர் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெரும்பான்மையான கூட்டம் சிறுபான்மையால் தண்டிக்கப்படுவது குழந்தைகள் விஷயத்தில்தான். ஏனெனில் அவர்கள் பலகீனமானவர்கள். திருப்பித் தாக்க உடல்/மன வலிமை இல்லாதவர்கள். எனது நண்பர் ஒருவர் தன் பையனுக்கு ஓவியம், பாட்டு, கணக்கு, நடனம் இவற்றில் எல்லாம் பயிற்சி கொடுப்பதாக சொன்னார். பையனின் வயது என்ன? என்றேன். மூன்று என்றார். எதற்கு இவ்வளவு கொடுமை செய்கிறீர்கள் என்ற போது, இப்பொழுதே இப்படி பயிற்சி கொடுத்தால்தான் அவன் IIT -ல் சேர முடியும் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பார்க்கும் எந்த அறிவாளியும் இப்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. திறமையைக் கண்டுபிடித்து வளர்ப்பது தவறல்ல. திறமையை உண்டாக்க நினைப்பது முட்டாள்தனம் என்றெல்லாம் பேசிய பிறகு அவர் சொன்னது : இப்படி எல்லாம் நினைத்ததால்தான் நீங்க இப்படி ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கீங்க. என்புள்ள நாசாவுல வேலை செய்வான் அப்பிடின்னார். எனக்கு அந்தக் குழந்தையை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1880 ல் எழுதப்பட்ட ஹெய்டி மிக முக்கியத்துவம் பெறுகிறது.


ஹெய்டி ஒரு ஐந்து வயது குழந்தையாக அறிமுகம் ஆகிறாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை. தாத்தாவிடம் வளர வேண்டிய சூழல். தாத்தாவோ ஊரே வெறுக்கும் மனிதர் அல்லது ஊரை வெறுக்கும் மனிதர். அங்கே அவள் எப்படி வாழ்கிறாள். தாத்தாவிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் எப்படி கற்றுக் கொள்கிறாள் என்பதுதான் கதை.
கதையில் மிகக் குறைவான கதாப்பாத்திரங்களே வருகின்றன. ஹெய்டி, அவளின் தாத்தா, பீட்டர் (ஆடு மேய்க்கும் சிறுவன்) மற்றும் அவன் குடும்பம், நடக்கவே முடியாத கிளாரா, டாக்டர், கண்டிப்பான உதவியாளர் மேயர், கிளாராவின் பாட்டி & அப்பா.இவை தவிர சில கதாப்பாத்திரங்கள் உண்டு. பூக்களும், மலையும், ஆடுகளும் சிறுவர் உலகின் சிறந்த குறியீடுகள். அவர்கள் அவற்றுடன் பேசுகிறார்கள், விளையாடுகிறார்கள்.
உடல் நலமில்லாத பணக்காரக் குழந்தையான கிளாராவிற்கு தோழியாக பிராங்க்பர்ட் கொண்டு செல்லப்படும் ஹெய்டி, அங்கு கிளாராவுடன் ஏற்படும் நட்பு. அங்கே அவளின் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருத்தியானாலும் அவளின் மனநிலை பாதிக்கப்பட்டு மறுபடி தாத்தாவிடமே அனுப்பப்படுகிறாள். அங்கே அவளின் வாழ்க்கை எப்படி சுவாரசியமாகிறது, பிறகு வரும் கிளாராவின் உடல்நிலை எப்படி மாறுகிறது, பீட்டரின் மனநிலை என்ன என்பதுதான் கதை. குழந்தைகள் எல்லாமே உங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு எதெல்லாம் முடியாது என்று சொல்லிக் கொடுக்கவே முயல்கிறோம். இதில் பீட்டரின் பாட்டிக்கு கண் பார்வையை தன் தாத்தாவால் திரும்பத்தர முடியுமென்று ஹெய்டி நம்புகிறாள். முடியாதெனும்போது பார்வையின்மை இயல்பானது என ஏற்றுக் கொண்டு அவள் பாட்டிக்குத் தேவையான ரொட்டியைத் தருகிறாள். அதேபோல நடக்கவே முடியாத கிளாரா நடக்க முடியும் என்று ஹெய்டி, பீட்டர், கிளாரா மூவருமே நம்பி வெற்றி பெறுகிறார்கள்.

எது அவர்களால் முடியும் என்று அவர்களே (குழந்தைகளே) தீர்மானிக்கட்டும்....தீர்மானிக்க வேண்டியது நாமல்ல. அதேபோல் குழந்தைகள் நீங்கள் அவர்களுக்குத் தரும் வசதிகளைவிட அன்பையும், இயல்பான கற்றலையுமே விரும்புகிறார்கள் ஹெய்டியை போல. இது குழந்தைகளுக்கான நாவல் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமான நாவல். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது கண்டிப்பான மேயரை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் இந்தப் புத்தகத்தை உங்கள் குழந்தை படித்தால் உங்களையே மேயராக நினைக்கலாம். எனவே நீங்களே மேயரைப் போல வாழ்வதை உணர்ந்து உங்கள் குழந்தையின் மீதான வன்முறையை கைவிட்டால் அது ஹெய்டிக்குக் கிடைத்த வெற்றி.

புத்தகத் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது என்றாலும் சில குறைகள் உள்ளன. விலங்குகளை மேற்கத்தியர்கள் அவன் அவள் என்று அழைப்பார்கள் ஆனால் நாம் விலங்குகளை அது/அவை என்றே அழைப்போம். இங்கும் அப்படியே மொழிபெயர்த்திருக்கலாம். ஆடுகள் கூட அவள் என்றே அழைக்கப்படுவது அந்நியப்படுத்துகிறது.

புத்தகத்தின் பெயர் : ஹெய்டி
எழுதியவர் : ஜோஹானா ஸ்பைரி
மொழிபெயர்த்தவர் : ஸ்ரீமதி, கயல்விழி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 160 ருபாய்

Wednesday, August 25, 2010

மனநல மருத்துவர் - மச்சடோ டி ஆசிஸ்

நீங்கள் எப்போதாவது ஒரு மனநிலை பிறழ்ந்தவராக உணர்ந்ததுண்டா?
அல்லது
பிறரை அப்படி உணர்ந்ததுண்டா?
அல்லது
சமூகம் அப்படி இருப்பதாக உணர்ந்ததுண்டா?

ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது.

மச்சடோ டி ஆசிஸ் எழுதிய மனநல மருத்துவர் என்ற கதையைப் படிக்கும் பொது நாம் ஒரு பழக்கப் பட்ட உலகில் வாழ்வதையே உணர்வோம்.

சீமோன் ஒரு மருத்துவர். அவருக்கு உளவியல் மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு அதைக் கற்கிறார். பின் ஊரில் இருக்கும் பைத்தியங்களைப் பராமரிக்க நகரசபை உதவியுடன் ஒரு மனநல விடுதியை(கிரீன் ஹவுஸ்) ஆரம்பிக்கிறார். தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக யார் பைத்தியம் என்பதைத் தீர்மானிக்க ஒரு விதியைக் கண்டுபிடிக்கிறார்.

விதி ஒன்று : அது யார் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு மனநலக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியிடம் கோபப் படுவது, பிறரைப் புகழ்வது என எல்லாமே மனநோய்க்குறிகள் என்று ஊரில் உள்ள முக்கால்வாசிப் பேர் கிரீன் ஹௌசிற்கு கொண்டு வரப் படுகின்றனர். அவருக்கு எதிராகப் புரட்சி வெடித்துக் கிளம்புகிறது. "வதங்கிய கோட்டைகள்" என்று அழைக்கப் படும் அவர்கள் நகர சபையைக் கைப்பற்றினாலும் அவர்களுக்கு ஒரு பைத்தியக்கார விடுதி தேவையாய் இருக்கிறது. புரட்சிக்கு எதிரான புரட்சி வெடித்து புது ஆட்சி வர, அந்த நேரம் பார்த்து டாக்டரின் கொள்கையும் மாறிவிடுகிறது.

விதி இரண்டு: யாரெல்லாம் நேர்மை, வாய்மை, பகுத்தறிவுடன் உள்ளார்களோ அவர்கள் எல்லாம் மனநோயாளிகள்.
இதன் படி சிலரே விடுதியில் அடைக்கப்படுகின்றனர்.120 வருடங்களுக்கு முன்னும் கூட சிலரே இந்தக் குணாதிசயங்களுடன் இருந்துள்ளனர் :) அதையெல்லாம் அவர்கள் கைவிடும்வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒவ்வொருவரும் எப்படி தங்கள் கொள்கைகளைக் கைவிடுகின்றனர் என்பதை மச்சடோ மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்.

இறுதியில் டாக்டர் மறுபடியும் தன தேடல் வழியே புது விதியைக் கண்டடைகிறார். அது என்ன என்பதையும் அதன் விளைவு என்ன என்பதையும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பகடியில் பலவிதம், இதில் வரிக்கு வரி பகடிதான். கதையில் உலாவும் எல்லோரும் நம்மை எதோ ஒரு இடத்திலாவது பிரதிபலிப்பது மச்சடோவின் சாதனை. ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களை நூறு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு மனிதன் பகடி செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. இத்தாகூய் நகரத்தை நாம் வாழும் சமூகமாகவும், நகரசபை நம்மை நிர்வாகம் செய்யும் அரசியல் அமைப்புகளாகவும் கொண்டால், நாம் எல்லா சமயங்களிலும் நோயாளியாகவும், டாக்டராகவும் வாழ்வது புரியும். ஒவ்வொரு முறை பிறரை நோயாளிகளாக உணரும் பொது நாம் விடுதலை பெற்றதாய் உணர்கிறோம். அதே நேரம் நாம் நோயாளியாவது தவிர்க்க முடியாததாகிறது. பெரும்பாலும் உண்மையை உணரும்போது மரணம் நமக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணரலாம். சமூகம், மக்கள், புரட்சி, மருத்துவம், ஆராய்ச்சி, தத்துவம், பக்திஇவற்றைப் பகடி செய்து இந்த உண்மையைச் சொல்வதில் மச்சடோ பெரும் வெற்றி பெற்றுவிட்டார்.

வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்திருப்பதால் சில இடங்களில் வாசிக்கக் கடுமையாய் இருக்கிறது என்றாலும், கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தின் பெயர் : மனநல மருத்துவர்
எழுதியவர் : மச்சடோ டி ஆசிஸ்
மொழிபெயர்த்தவர் : ராஜகோபால்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 70 ருபாய்

Wednesday, July 7, 2010

உயிரோசையில் வெளியான என் கவிதைகள்

உயிரோசையில் வெளியான என் கவிதைகள்:

விடைபெறும் உரையாடல்

அவனிடமிருந்து அவளுக்கு.....................

விளிம்பு சிதைந்த சிறையின்
நடுவே
ஒற்றை ரோஜா.

ஊண் துளைக்கும் புழுக்களின்
புன்னகையில்
நகர்கிறது மையம்.

விளிம்பின் விரிந்த புள்ளியின்
அடியில் கிடக்கிறது
வாழ்தலின் அர்த்தம்...

பைத்தியமாதலின் சாத்தியங்களில்
பிறக்கிறது
யாரோ ஒருத்தியின் குழந்தை.

கடந்த காலத்தைக் கடந்தும்
கேட்கிறது தனியறைக் கைதியின்
மரண இசை.

மரணம் கூட சாத்தியமில்லை
என்கிறான்
என்னுடன் இறந்துபோன
எவனோ ஒருவன்.

சிதையும் விளிம்பால்
நகர்ந்து கொண்டே இருக்கிறது
எல்லோருக்குமான மையம்.

இப்படிக்கு,
இவன்.


அவளிடமிருந்து அவனுக்கு ......................

மகளிர் விடுதியின்
தனித்த அறையை
மூடிக்கொண்டேன்.

அறையுடன் என் உரையாடல்
கிசுகிசுப்பின் மொழியில்
தொடர்கிறது......

உடலிடும் ஓலத்தை
மறைவிடத்தின்
எதோ ஒரு மூலையில்
விரல்களின் நடனத்தால்
சரி செய்கிறேன்.

சுதி சரியில்லை என்ற
அறையின் பதிலால்
மாறவில்லை
உடலின் ஒலி.

வெடித்துக் கசியும்
சுடுநீரின் வெப்பத்தில்
வழிகிறது
காமத்தின் தனிமை.

சங்கீதம் சுதி சேர
வருடங்கள் ஆகலாம்.....

அசலோடும் நிழலோடும்
தனிமையில் மிதக்கிறது
காமத்தின் பிரபஞ்சம்.

உடைந்த கண்ணாடியில்
தெரிகிறது
என் பல்வேறு உருவங்கள்....

இப்படிக்கு,
இவள்.



நிலா வாழும் மூனாங்கட்டு

முட்ட முட்டக்
குடித்த இரவுகள்
ஒரு சொட்டு
விஸ்கி மீதமாவதுடன்
முடிகின்றன.

தூக்கம் -
இடிந்துபோன
வீட்டின் மூனாங்கட்டில்
வாழ்கிறது...

விழித்திருத்தலின்
சாத்தியம் புரியாமல்
கரைகிறது என் நிலா.

வீடு என்பது
ஒதுக்கப் பட்ட வீதி
என்பதாய்
தெரு நாயில்
ஒரு நாய்க்குச் சொல்கிறேன்.

குறிப்பு:
மூனாங்கட்டு - மூன்றாம் கட்டு - செட்டிநாட்டு வீடுகளின் பெட்டகங்கள் இருக்கும் பகுதி


நன்றி: உயிரோசை - உயிர்மை

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3102



Thursday, June 17, 2010

உயிரோசையில் என்னுடைய கவிதை

என்னுடைய கவிதை - புலிகள் பேசும் இரவு இந்த வார உயிரோசையில் வெளிவந்துள்ளது......

புலிகள் பேசும் இரவு

எதற்குமே சமமற்ற
இரவின் நிழலில்
வரிகளற்ற புலி
என் உடல்மேல்
நகர்ந்தது.

உயிரின் விலை
உணவு என்றது

சிகப்பு சேலை உடுத்திய
பெண்ணின் உதிரம்
ருசியானது என்றது

மற்றும்

விளைவுகளை மட்டுமே
விதைக்க முடியும் என்றது

இருளின் உச்சத்தில்
சிரித்தபடியே நடந்து
மறைந்தது

அதன் வாலற்ற பின்புறம்
ஒரு
இரவு ராணியின்
பின்புறத்தை ஒத்திருந்தது...

இன்னும் இரவு
மிச்சமிருக்கிறது..........


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3034

நன்றி : உயிரோசை - உயிர்மை.

Saturday, March 27, 2010

பதிவர் சங்க விவாதம் அல்லது பின்நவீனத்துவ பயிற்சிப் பட்டறை அல்லது..... கொய்யால ஏதோ ஒன்னு!

முதலில் பதிவர் சந்திப்பைப்பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் ஸ் யப்பா முடியல............................

இன்றைய பதிவர் சந்திப்பிற்கு மாலை 6 .30 க்குப் போய்ச் சேர்ந்தேன். உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஒரு மொக்கை மேட்டர் டைப் செய்யப் பட்ட பேப்பரைத் தந்தார். அப்போதே நான் உஷாராகி இருக்க வேண்டும். அதன் பின் ஒன்லி மொக்கை மற்றும் மொக்கையோ மொக்கை.

கருத்துக்குத்துக்களை இறக்குவதாக நினைத்து மட்டையடிக்கருத்துக்கள் சராமரியாக இறக்கப் பட்டன. விதிவிலக்கு சுகுணா திவாகர் மற்றும் நர்சிம். ஆ'ரம்பம்' முதலே காமெடிப் படம் பார்க்கும் உணர்வு. ஆளாளுக்கு என்று ஒரு கூட்டம் இருப்பதும் எங்கு எதற்காகக் கூடினாலும் கூட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நிரூபித்துக் கொண்டும் இருந்தனர். உண்மைத்தமிழன் பேசும்போது யாராவது நாம் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். ம்ஹீம்........இல்லையே..... ஆனா அவரும் சாதாரணப் பட்ட ஆளு இல்ல... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு. :) அநேகமா தானைத்தலைவரா அவரையே நியமிச்சுரலாம். அண்ணன் பைத்தியக்காரன் பேசிய பொது, எனக்கு இவர் தமிழ்ப்படம் போலக் கூட்டத்தைக் கலாய்க்கிறாரோ என்று நினைத்தால் உண்மையிலேயே மனுஷன் சீரியஸ்-ஆ பேசுறாரு. அந்த முன் அறிக்கையைப் படித்த எனக்கே இது ஆவாதுன்னு தெரிஞ்சு போச்சு. அண்ணே உங்களுக்குத் தெரியலையா? இல்ல உண்மையிலேயே கலாய்ச்சிங்களா? தனியாவாவது எனக்குச் சொல்லுங்க....... அப்புறம் சங்கம் சங்கம் என்று யாராவது சொல்லும் போதெல்லாம் எனக்குக் கைப்புள்ள வடிவேலும் அந்த இத்துப் போன வண்டியும் ஞாபகம் வந்து தொலைத்தது.
அப்புறம் ஞாநி........ வழக்கமாக அவர் சொல்லும் அறிவுரைகள், சட்டம், அனுபவங்கள்........ நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. மொத்த 1 .30 மணி நேரத்துல 1 மணிநேரம் பேசுனாரு. (அப்பிடித்தான் எனக்குத் தோன்றியது) அவரு சொன்ன விஷயம் எல்லாம் ஓகே. ஆனால் அபத்தமான ஒரு நாடகத்தில் இடம்பெறும் அறிவுரைக் கருத்துக்களைப் போல இருந்தது.
நான் என்ன கருத்துடன் சென்றேனோ அதே கருத்துக்களைச் சுகுணாவும் நர்சிமும் சொன்னார்கள். பிளாக் என்பது ஒரு கட்டற்ற பெருவெளி, அங்கே ஒரு சென்சாரைக் கொண்டுவருவதைப் போல பேசினார்கள் பலர். சார் என்னை இவன் கிள்ளீட்டான் சார்னு யாராவது சொன்னால் சங்கம் இறங்கிப் போராடி நடவடிக்கை எடுக்குமாம். இப்போதே யாராவது உங்களைப் பாதிக்கிற மாதிரி எழுதினால் அவர்களை முடக்க முடியும் எனும்போது கமிட்டி எதற்கு? தலைவர் எதற்கு?. யாருக்காவது உதவவேண்டும் என்றால் இப்போது செய்வதைப் போலவே ஒரு போஸ்ட் போடுங்கள். விரும்பியவர் தரட்டும்.இதில் சங்கம் என்ன செய்யப் போகிறது?. சங்கத்தின் பேரில் செய்வார்களாம்..... இப்போதும் வலைப்பதிவர் உதவி என்றுதானே சொல்லப்படுகிறது. எப்படியும் யாரையும் கட்டாயப்படுத்தி காசு/உதவி வாங்க முடியாது எனும் போது தலைவர் சங்கம் எல்லாம் என்ன செய்வதற்கு ?


அப்புறம் அரசாங்கத்தை எப்படி சந்திப்பது... :) இவர்கள் ஒருமுறை யாரையாவது சந்தித்தால் தெரியும் அந்தக் காமெடி.
ஒரு முறை தலைவராய் இருந்தவர் அடுத்த முறை பிளாக் உலகிலேயே இருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரண்டு வருடத்திற்கு முன் தீவிரமாக வலையுலகில் செயல்பட்டவர்கள் இப்போது இல்லை.இப்போது இருப்பவர்கள்? வலையுலகம் அதிகாரத்தை பரவலாக்கி இருக்கிறது. அதை மீண்டும் ஏன் சங்கத்தலைவர், செயற்குழு என்று ஓரிடத்தில் குவிக்க வேண்டும்?

ஒரு அமைப்பை விர்ச்சுவல் உலகில் தொடங்கி அதை ஒரு பகிரும் இடமாகப் பயன்படுத்துவதுதான் இந்நிலையில் சரியானதாக இருக்கும். இது நிச்சயம் வெற்றி பெறும்.. அதற்கு சிறுகதைப் பட்டறை, சிறுகதைப் போட்டி,சிங்கை நாதனுக்கு உதவியது, போலி விசயத்தில் உறுதியாய் இறுதிவரை நின்ற அண்ணன் உண்மைத்தமிழன் என்று பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு பொதுவான ப்ளாகில் எல்லாருடைய ப்ளாக், எழுதுபவரின் விருப்பம், வேலை - அவரால் அவரது பணி சார்ந்து உதவ முடியுமா? (உதா:- ப்ருனோ, செந்தழல் ரவி), பணி சாராத வேறு உதவிகள் செய்ய இயலுமா ( உதா:- நர்சிம், பைத்தியக்காரன்), அதற்கான நேரம், தொடர்பு எண், ஈமெயில்.... வலையுலக சந்தேகங்கள் (டெக்னிகல் பிரச்சனைகள்) தொடர்பான உதவிகள் செய்பவர்கள் போன்ற விபரங்களையும் , ஒரு பிரச்சனையின் தீர்வை பொதுவான அந்த பிளாக்-இல் பகிர்தல் என எவ்வளவோ செய்ய முடியும்.

இதைத்தாண்டி ஒரு நிறுவனஅமைப்பாக இதைத் தொடங்கினால் இன்றைய மொக்கைக் கூட்டம் போல ஒரு மொக்கை அமைப்பாக மாறும் சாத்தியங்கள்தான் அதிகம்.

இந்தக் கூட்டத்தினால் எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் :
டீயே குடிக்காத நான் இன்று டீ குடித்தேன் அது நன்றாக வேறு இருந்தது.
இப்படி ஒரு புத்தகக்கடை இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
இனிமேல் மான்கராத்தே செய்வதற்கு ஏதுவாக கதவின் அருகே இடம்பிடிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். (பல சீனியர்கள் மான்கராத்தெயில் ப்ளாக் பெல்ட் வாங்கி இருப்பதையும் இன்றுதான் பார்த்தேன் - இப்படி எத்தனை கூட்டத்த நாங்க பார்த்திருப்போம் - ஒரு மான் மாஸ்டர் ) :)
நிறைய ப்ளாக்கர்கள் கதைசொல்லிகளாக இருப்பதும் தெரிய

வந்தது.
எல்லாவற்றையும் விட இந்தப் பதிவை இரவு 12 .30 க்கு டைப் செய்வது.....

மற்றும்

கூட்டம் என்றால் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என்ற நவீனத்துவக் கூற்றைக் கட்டுடைத்து பின்நவீனத்துவ ரீதியில் ஒரு கூட்டத்தை நடத்துவது எப்படி என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியவர்களுக்கு என் நன்றி நன்றி நன்றி நன்றி.


படித்ததில் பாதித்தது

எனக்கு வினவு தளத்தின் மேல் பல விமர்சனங்கள் உண்டு என்றாலும்,
இந்தக் கட்டுரை என் மனதின் அடி ஆழம் வரை பாதித்து இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய கட்டுரை / அல்லது உலகிற்கான கடிதம்......

http://www.vinavu.com/2010/03/26/women-sankari/

சகோதரி சங்கரிக்கு ஒரு செவ்வணக்கம் ...........

Monday, March 8, 2010

நிசப்தத்தின் ரயில்

மாநகரத்தின் ரயில்
மெதுவாக நகர்கிறது
முதல் வகுப்பில்
ஒரு கிழவன் பிச்சை
கேட்கிறான்
பலர் பாட்டைக் கேட்கிறார்கள்
ஒரு பெண்ணின் அடிவயிற்று வலி
கண்ணீராகிறது
ஒரு குழந்தை தூங்கி வழிகிறது
பிக்பாக்கெட் யாருமில்லை

நிகழ்வற்ற நிலையில்
நிகழும் எல்லாம்
நிகழ்வுகளாக
உறைகின்றன
என் நினைவின் பக்கங்களில்.

Friday, February 26, 2010

ரத்தம் வளர் போதி

முடிச்சுகளின் முடிவில்
வாழ்வின் பெருங்கதவைத் திறந்தான்
புத்தன்.

விரைகளற்ற ஆண்கள்
முலைகளற்ற பெண்கள்
மனித ரத்தத்தில்
பெருத்து வளர்கிறது
போதி.

சிரிப்பற்ற புத்தனிடம்
எஞ்சியது
பலரும் புணர்ந்த
இதழற்ற தாமரை.

விரை அறுக்க விரைகிறான்
ஒருவன்
புத்தனும் தமிழன்தான் என்று.

புத்தனுக்குத் தெரியும்
அவனும் இன்னொரு
புத்தன் தான் என்று.

Thursday, February 25, 2010

வரலாறு

என் கடிகாரத்தின் நேரம்
யாரோ ஒருவனின்
கடிகாரத்தில் நகர்கிறது

சிவந்த மனிதர்கள்
அவர்களுக்காக
அவர்களே
வரலாற்றை எழுதுகிறார்கள்

கறுப்பான எங்களில்
மிகக்கறுப்பானவனின்
ரத்தம்
மையாய் ஒழுகிச்செல்கிறது
அவர்களின்
வரலாற்றுப் பக்கங்களில்.

Monday, February 22, 2010

ஊண் வழியும் வார்த்தைகள்

ஊண் வழியும் வார்த்தைகள்

கனவில் புணரும் சிலருக்காக
கனவைப் புணருகிறேன் நான்
வெள்ளைக் கருப்பில் விளைந்தன
விதைகள்
சிதைந்த விதைகளில் முளைக்கிறது மரணம்.

எந்த ஒரு சொல்லின் முடிவிலும்
எட்டிப்பார்க்கிறது வாழ்வின் அபத்தம்..
வரிகளின் முடிவில் ஒழிந்திருக்கிறது
அதன் ஆயுதம்.......
கவிதையின் முற்றுப்புள்ளியில்
ஆரம்பமாகிறது ஒவ்வொருவரின் வக்கிரம்..

மிச்சமிருப்பதோ
ஒழுங்கற்ற நினைவுகளும்
ரத்தம் சொட்டும் வார்த்தைகளும்............

Sunday, February 21, 2010

புணரும் காலம்

புணரும் காலம்

காமம் எரியும் ஒரு பகலின் ஒளியில்
சரியும் எல்லாம் நிமிரும் என்றாய்
என் முலை பார்த்து

இல்லை என்றேன் ஏளனத்துடன்
உன் குறி பார்த்து....

ஒளியற்ற எனதிரவில்
நீர்புசிக்கும்
உயிர் உறுப்பு
எப்போதேனும் எனது
எச்சில் நீ ருசிப்பாய்
என்றே காத்திருக்கும்
காந்தள் உதடு ......

நடுங்கும் கரங்கள்-
பதுங்கிய புலியாய்க் காமம்
நிலையற்று அலைகிறது சொல் தன துணைதேடி
இறுதியில் இருப்பதென்னவோ
இறுதியின் இறுதியும்
இருத்தலின் மரணமும்.

Saturday, February 20, 2010

தொழில்நுட்பப்பெண்ணின் ஒரு நாள்

தொழில்நுட்பப்பெண்ணின் ஒரு நாள்

கசகசக்கும்
கருக்குழி ரத்தம்

தாய்ப்பாலால் நிறைகிறது
கழிவறைக்குழி
கடவுள் சிரிக்கிறான்
பாலுறிஞ்சும் பந்தில்.

பாசத்தைப் பதிலிடுகிறது
பணம்
நினைவுகளை மட்டுமே
நீட்டிக்கிறது காலம்.
கனவில் கலைகிறது
குழந்தையின் சிரிப்பு.
தவணையில் நிறைகிறது
குறி...
அடுத்த முறைக்காகக்
காத்திருக்கிறது
காமம்

ரகசியக் கதவுகளின் பின்
ஒளிந்து நின்று
சிரிக்கிறது விதி..

Friday, February 19, 2010

சதிர்

சதிர்

கடவுளுக்கும் சாத்தானுக்குமான
சதுரங்கத்தில்
பெரும்பாலும்
சாத்தானையே ஜெயிக்க வைக்கும்
கடவுளின் உடலில் கரைந்து கிடக்கிறது
சாத்தானின் ரத்தம்.

கடவுளின் கடவுள் யாரென்றேன்....
கடவுளும் சாத்தானும்
சேர்ந்தே சொன்னார்கள்
நான்தான் என்று...

Thursday, February 18, 2010

கவிதை அல்லது அது போல ஏதோ ஒன்று

காமவாசம்

யாருமற்ற ரயில் நிலையத்தில்
எப்போதாவது நின்று செல்லும்
ரயிலுக்காகக் காத்திருக்கிறேன்.

கசங்கி
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைப் பூவின்
மணத்தில் ஒளிந்து கிடக்கிறது
உடலை விற்ற ஒருத்தியுடன்
மனதைத் தொலைத்த ஒருவன் பேசிய
சொற்களற்ற உரையாடல்.....

நிழலற்றவன்

வெயில் வழியும் நடுச்சாலையில்
நிர்வாணமாய் நிற்கிறேன்.
என் நிழலைக் காணோம் என ஒதுங்கிச்செல்கின்றனர்
முகமற்ற பலர்.
மூளையின் மறத்த பக்கங்களில்
ஒளிந்திருக்கிறது என் நிழல்.

Wednesday, February 17, 2010

மனிதம்

மனிதம்

மடக்கிய கத்தியில்
சொட்டுகிறது ரத்தம்
மனதினை வாட்டுகிறது
மரணம்
அடுத்த இரையைக்
குறிவைக்கிறது மனிதம்.

Tuesday, February 16, 2010

சிறுகடவுளின் தலையெழுத்து

எப்போதும் விழித்தே இருக்கும் நரகத்தில்
"ஸ்டெத்" மணிகட்டிய பெருங்கடவுள் ஆணையிட்டார்
பலரின் தலையெழுத்தை வாசிக்க...

போதையேறிய சிறுகடவுளின் ஆயுதம்
பழைய சுத்தியும்
உடைந்த கத்தியும்

புழுத்து நாறும் அரசவையில்
நிறைகின்றனர்
அங்கங்கள் அற்ற அடிமைகள்......
சிறு கடவுளாய் இருத்தலின்
சாத்தியங்களைப் பழித்தபடி
வாசிக்கப்படுகிறது அவர்களின்
தலையெழுத்து......

......................தொடர் புள்ளிகளால்
நீட்டிக்கப் படுகிறது
சிறுகடவுளின் முற்றுப் புள்ளி .

Monday, February 15, 2010

இரு மிருகங்களின் கதையாடல்

உன் மிருகத்தை ஏவினாய்
ஒவ்வொரு இரவிலும்
அது வெற்றிபெறும் வேளையில்தான்
விழிக்கிறது என் மிருகம்.......

மோத யாருமற்ற களத்தில்
அதன் வெறிக்கு இரையாகிறது
என் விரல்.....
வெறுமையின் பிசுபிசுப்பில்
நிறைகிறது காலிடைக்களம்.......