Wednesday, July 7, 2010

உயிரோசையில் வெளியான என் கவிதைகள்

உயிரோசையில் வெளியான என் கவிதைகள்:

விடைபெறும் உரையாடல்

அவனிடமிருந்து அவளுக்கு.....................

விளிம்பு சிதைந்த சிறையின்
நடுவே
ஒற்றை ரோஜா.

ஊண் துளைக்கும் புழுக்களின்
புன்னகையில்
நகர்கிறது மையம்.

விளிம்பின் விரிந்த புள்ளியின்
அடியில் கிடக்கிறது
வாழ்தலின் அர்த்தம்...

பைத்தியமாதலின் சாத்தியங்களில்
பிறக்கிறது
யாரோ ஒருத்தியின் குழந்தை.

கடந்த காலத்தைக் கடந்தும்
கேட்கிறது தனியறைக் கைதியின்
மரண இசை.

மரணம் கூட சாத்தியமில்லை
என்கிறான்
என்னுடன் இறந்துபோன
எவனோ ஒருவன்.

சிதையும் விளிம்பால்
நகர்ந்து கொண்டே இருக்கிறது
எல்லோருக்குமான மையம்.

இப்படிக்கு,
இவன்.


அவளிடமிருந்து அவனுக்கு ......................

மகளிர் விடுதியின்
தனித்த அறையை
மூடிக்கொண்டேன்.

அறையுடன் என் உரையாடல்
கிசுகிசுப்பின் மொழியில்
தொடர்கிறது......

உடலிடும் ஓலத்தை
மறைவிடத்தின்
எதோ ஒரு மூலையில்
விரல்களின் நடனத்தால்
சரி செய்கிறேன்.

சுதி சரியில்லை என்ற
அறையின் பதிலால்
மாறவில்லை
உடலின் ஒலி.

வெடித்துக் கசியும்
சுடுநீரின் வெப்பத்தில்
வழிகிறது
காமத்தின் தனிமை.

சங்கீதம் சுதி சேர
வருடங்கள் ஆகலாம்.....

அசலோடும் நிழலோடும்
தனிமையில் மிதக்கிறது
காமத்தின் பிரபஞ்சம்.

உடைந்த கண்ணாடியில்
தெரிகிறது
என் பல்வேறு உருவங்கள்....

இப்படிக்கு,
இவள்.



நிலா வாழும் மூனாங்கட்டு

முட்ட முட்டக்
குடித்த இரவுகள்
ஒரு சொட்டு
விஸ்கி மீதமாவதுடன்
முடிகின்றன.

தூக்கம் -
இடிந்துபோன
வீட்டின் மூனாங்கட்டில்
வாழ்கிறது...

விழித்திருத்தலின்
சாத்தியம் புரியாமல்
கரைகிறது என் நிலா.

வீடு என்பது
ஒதுக்கப் பட்ட வீதி
என்பதாய்
தெரு நாயில்
ஒரு நாய்க்குச் சொல்கிறேன்.

குறிப்பு:
மூனாங்கட்டு - மூன்றாம் கட்டு - செட்டிநாட்டு வீடுகளின் பெட்டகங்கள் இருக்கும் பகுதி


நன்றி: உயிரோசை - உயிர்மை

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3102