Thursday, August 18, 2016

சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்


அண்ணன் பாலபாரதி புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து கண்டிப்பாகப் படிக்குமாறு சொன்னார். அவருக்கு நன்றி.

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. இங்கே நான் பேசப்போவது ஒரு வாசகனாக என்னுடைய பார்வையை மட்டுமே.

இந்த நாவலின் பாராட்டத்தக்க அம்சமாக நான் கருதுவது - அதன் களம் – முக்கியமாக அழிவின் ஆரம்பத்தில் இருக்கும் குடகு ஜமீன் – ஆங்கிலேயப் படையெடுப்பின் ஆரம்ப காலம் – மன்னர், மந்திரிகள், மக்கள் - அவர்களிடையே இருக்கும் தவிர்க்கவே முடியாத உறவு.

ஓர் எழுத்தாளனுக்கு வரலாறு அளிக்கும் சுதந்திரத்தை வேறெந்தக் களமும் அளிப்பதில்லை. இந்த இடத்தில் போரும் வாழ்வும் நாவலை எடுத்துக் கொள்வோம். அதில் இருக்கும் நீண்ட அத்தியாயங்கள், கதாப்பாத்திரங்களின் குணநலன்களையும், நிகழ்வுகளையும் வரலாற்றின் வேறொரு முனையிலிருந்து பார்க்கும் வாய்ப்பை ஒரு வாசகனுக்கு அளிக்கின்றன.

நான் இந்த நாவலை வாசிக்கும்போது, யாரோ ஒருவர் நம்மிடம் அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். கதை கேட்கும் போது, சொல்லும் நபரின் ஆளுமை சொல்லும் விஷயத்தில் கலந்து கேட்கும். அது கேட்கும் நபர் ஒவ்வொருவருக்கும் அவரவர் அநுபவம் மற்றும் விருப்பம் சார்ந்த புரிதலையே தருகிறது. எந்த ஒரு கதையும் இன்னொருவருக்கு அதே கதையாகப் போய்ச் சேர்வதில்லை. இதை அனுபவித்துப் பார்க்க எழுத்தாளர்கள் பவா, எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் கதை சொல்லலை மற்றவர்களின் கதை சொல்லலோடு ஒப்பிடலாம். குறிப்பாக பவா எழுத்திலும், பேச்சிலும் கதைகளை நிகழ்த்திக் காட்டுவார். ஆனால் மாஸ்தி அய்யங்கார் தனக்குத் தெரிந்த ஓர் உண்மையை, கொஞ்சமே கொஞ்சமாகத் தன் கற்பனைகளைக் கலந்து சொல்கிறார். அங்கே கதை நிகழவெல்லாம் இல்லை, கதை நமக்குச் சொல்லப்படுகிறது.

இலக்கியத்தில் நுழையும் வாசகனுக்கு இந்த ‘சொல்லல்’ பிடித்துதான் போகும். ஏனென்றால் வாசகன் அங்கே நடந்ததை ஒரு நம்பிக்கையான நபரிடம் இருந்து கேட்கும் உணர்வை அடைகிறான். அங்கே பெரும் கற்பனைகளோ, நிகழ்ந்ததற்கு முற்றிலும் மாறான சம்பவங்களோ நிகழவே போவதில்லை. அரிச்சந்திர மயானகாண்டம் நாடகம் பார்ப்பதைப் போல, ஆண்டாண்டு காலமாய் நமக்குத் தெரிந்த அதே கதையை நிகழ்த்தினாலும், அது நமக்கு அளிக்கும் ஒட்டு மொத்த உணர்வுக்காக அதை மீண்டும் மீண்டும் பார்த்தபடியே இருப்போம் இல்லையா? அதுதான் சிக்க வீர ராஜேந்திரனிலும் நிகழ்கிறது.

இந்த நாவலைப் படிக்கும் போது நாம் மேலே சொன்ன விஷயங்களோடு எழுதப்பட்ட காலம், எழுதியவரின் பின்புலம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு சில சலுகைகளை அளிக்க வேண்டியதிருக்கிறது. இந்த நாவலில் சொல்லப்படும் தாரை தப்பட்டை கேட்பவனுக்கு கர்நாடக இசை புரியுமா? கடவுள் மறுப்புக் கொள்கைகளை விமர்சிக்கும் பகுதி, திப்புவை மதவெறியனாகக் காட்டுவது, சாதிய/மத நியாயப்படுத்தல்கள் - இவற்றையெல்லாம் நான் கணக்கில் கொள்ளவில்லை.

பொதுவாக நாவலின் ஓட்டத்திலேயே அதைப் புரிந்துகொள்வது என்பது ஒரு வழிமுறை. ஆனால் நான் எந்த நாவலையும் அதன் பெரும் கூறுகளின் வழியே மட்டுமே புரிந்து கொள்வேன். இந்த நாவலை நான் நான்கு வெவ்வேறு பார்வைகளில் புரிந்து கொள்ள முயன்றேன்.

குடகின் ஜமீன் - சிக்க வீர ராஜேந்திரன் என்ற மனிதன் - மக்களும், சுரண்டல்களும், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பும் - நொண்டி பசவன் & ராஜேந்திரன் என்ற இரு தனி நபர்களிடையேயான உறவு அதில் சிக்கி சீரழியும் நாடு.

இதில் அய்யங்கார் குடகின் வரலாற்றையும் அழிவையும் முதன்மைப்படுத்தியே இந்த நாவலை எழுதியிருக்கிறார். அந்தப் பார்வையில் அதை நாம் படித்தால் இந்த நாவல் ஒரு குறிக்கோள் கொண்டதாகவேபடுகிறது. இது குடகின் கதை என்றால் சிக்கவீர ராசேந்திரன் ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே. குடகின் வர்ணனைகள், பின்புலம், மக்கள் மற்றும் அதிகார முரண்கள் வழியாக அவனும் பேசப்பட்டிருக்க வேண்டும். மிகச்சமீபத்தில் இந்தக் கதை நிகழும் பகுதியில் இரண்டு பயணங்களை மேற்கொண்டேன். அதை வைத்துப் பார்த்தால் நாவலில் வரும் வர்ணனைகள் மிகத் தட்டையானவை. நாவல் என்பது ஒரு மேடை, அதில் நிகழும் சூழல் குறித்த ஆழமான வர்ணனைகள் இல்லாவிட்டால் வாசகன் அந்தச் சூழலோடு தன்னை இணைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. அதுபோக, அந்நிலத்தின்  நீண்ட வரலாறு, நிலவியல், வருமானம், அது சார்ந்து மக்கள் வாழ்வு, தலைமை, ஒழுக்கம் மற்றும் ஒழுக்க மீறல், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்று ஒரு முழுமையான பார்வையை நாவல் முன் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஓர் ஒப்பீட்டிற்காக நாம் கிராவின் கோபல்ல கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு வரலாற்றைப் பேசுகிறது – மக்களின் வரலாறு. அதில் வரும் கழுவேற்றும் காட்சியில் சுற்றிலுமான மக்கள், அவர்களின் மனநிலை, ஏற்பாடுகள், உடலைத் துளைத்து வெளியேறும் கழு, அதன்பின் மக்களிடம் ஏற்படும் மனநிலை மாற்றம், அதற்குப் பின் ஏற்படும் சமாதானம், கொல்லப்பட்டவன் கடவுளாதல் என்று அதை கிரா நம்மிடம் சொல்வதன் மூலம் – அவர் நிகழ்த்திக்காட்டுகிறார். ஆனால் சிக்க வீர ராஜேந்திரனில் அது தவறிவிட்டது.

இந்த நாவலை சிக்கவீர ராஜேந்திரன் கதையாக மட்டுமே கொண்டு பார்த்தோமென்றால், அவனுடைய அதிகாரவெறி, அதற்காக அவன் மேற்கொள்ளும் நேர், எதிர் நடவடிக்கைகள், உடல் நலன், ஒரு குழந்தையைக் கொல்லும் மனநிலை - சுற்றிலுமான பெண்கள் - அவன் அம்மா, பெரியம்மா (நொண்டி பசவனின் அம்மா பகவதி), அவனையும் பசவனையும் வளர்த்த ஒரே கிழவி, ராஜேந்திரனின் மனைவி, மகள், தங்கை, பேத்தி, விலை மகளிர், ஆசைக்காகவே தூக்கி வரப்படும் பெண்கள், வெள்ளைக்காரப் பெண்கள் - அவனுடைய மந்திரிகள், உத்தையதக்கன், சென்னபசவன் என மையத்தைச் சுற்றி விரிவாக அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய மனநிலை விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். நாவலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அதற்கான வெவ்வேறு ஆழங்களோடு பேசப்படவேண்டும். ஆழமற்ற புறச்சித்தரிப்புகள் வாசகனுக்குக் கடந்தவேண்டிய உணர்வுகளைக் கடத்துவதில் தொல்வியுறுகின்றன.

இன்னொரு பார்வையில் மக்களும், அரசச் சுரண்டல்களும், ஆங்கிலேய ஆக்கிரமிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன - அரசு, மக்கள், சாதிய  முரண்கள், அதிகாரப் படிநிலைகள், மக்களை அழுத்திச் சுரண்டி கொழுக்கும் அரசர்களுக்கும் மக்களுக்குமான முரணியக்கம், அது குறித்த கேள்விகள், ஏன் மக்கள் முற்றுமுதலாக ஆங்கிலேயரை எதிர்க்கும் மனநிலைக்கே வரவில்லை? ஏன் சாதாரண மனிதர் வாழ்விற்கும் அரச வாழ்விற்குமான இடைவெளி இவ்வளவு பெரியதாக இருந்தது? புரட்சி இயக்கங்கள் ஏன் மன்னரை எதிர்த்த அளவில் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்கு நாவலில் இடமே இல்லை.

இந்த நாவலை மற்றொரு கோணத்தில் புரிந்து கொள்ள முயன்றேன். அது நொண்டி பசவன் மற்றும் சிக்க வீர ராஜேந்திரன் இடையிலான உறவு. நொண்டி பசவனைக் கதாநாயகனாகக் கொண்டு அவனுடைய பிரதியாக (Copy) சிக்க வீர ராஜேந்திரன் படைக்கப்பட்டு, இந்த இருவரிடையே இருக்கும் இயைபுகள் (harmony), முரண்கள் எப்படி ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கிறது என்று புரிந்துகொள்ள முயலும் போது இது வேறொரு நாவலாக இருக்கிறது. உண்மையில் அத்தனை தகுதியும் கொண்ட பசவன் கால் முறிக்கப்பட்டு நாய்களோடு நாயாக வளர்க்கப்படுவதும், தகுதியேதுமற்ற ராஜேந்திரன் முழு அதிகார வசதிகளோடு வளர்க்கப்படுவதும் - என்ன மாதிரியான வாய்ப்புகள்? ஒரே கிழவியே இருவரையும் வளர்க்கிறாள். நொண்டி பசவன்தான் நாட்டை ஆள்கிறான். அவன் பிறப்பு - ஓர் இழிவு, வளர்ப்பு - மற்றோர் இழிவுமந்திரிப் பதவி - ஓரு பிச்சை. ஆனாலும்கூட அவன்தான் அரசை நடத்தும் கருவி. பிறப்பால், எண்ணத்தால் உயர்ந்த மற்ற மந்திரிகளோ, விசுவாசிகளோ, ஏன் மன்னனோ கூட அவனுடைய அதிகாரத்தில் கைவைக்க முடிவதில்லை. தன் சகோதரியை - அவள் மன்னனுக்கும் சகோதரி - மடி மேல் அமர்த்துகிறான், மன்னன் அனுபவிக்கும் பெண்களை அவனும் அனுபவிக்கிறான், மன்னனுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் கூட்டிக் கொடுக்கிறான். ஒரு குழந்தையைக் கொல்லவேண்டிய சமயம் தவறியதை நினைத்துச் சந்தோசப்படுகிறான். தன்னை நாயோடு நாயாக்கிய சமூகத்தைப் பழிவாங்குகிறான். மிக முக்கியமாக யாரெல்லாம் நல்ல மனிதர்களாக இருக்கிறார்களோ அவர்களை எல்லோரையுமே துன்புறுத்துகிறான். இறுதியில் தகுதி எதுவும் அற்ற தன்னுடைய பிரதியினாலேயே கொல்லப்படுகிறான். வாழ்க்கை அரசனைப்போல அவனையும், கையாலாகாதவனாக ராஜேந்திரனையும் உருவாக்குகிறது. ராஜேந்திரனுக்குக் குற்ற உணர்வோ, தண்டனைகளோ எதுவும் இல்லை. இறுதிவரை அவன் செல்லாக்காசாகவே இருந்து முடிக்கிறான்.

இவையெல்லாம் தவிர்த்து இந்த நாவலில் வரும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு இருக்கிறார்கள். அரசருக்குப் பிறக்கும் தன் குழந்தையைக் கைவிடும் பகவதி, நீண்ட நெடும் காலம் காத்திருக்கிறாள். மகன் நொண்டி என்று அழைக்கப்படுவதை, அவன் தன்னைத்தானே தகுதிக் குறைவாக உணர்வதை, அவன் எடுபிடியாக இருப்பதை வெறுக்கிறாள். எப்படியேனும் தன் மகனை அரசனாக்க முயலும் அவள் சிக்கவீர ராஜேந்திரனைக் காப்பாற்றவும், அழிக்கவும் செய்கிறாள்.
இதற்கு முற்றிலும் மாறாக தன் கணவனை அரச பதவியில் நீடிக்கச் செய்யவும், அவனை மனிதனாக்கவும் கௌரம்மா முயன்று கொண்டே இருக்கிறாள். முற்றிலும் அழிவுப் பாதையில் செல்லும் சிக்கவீர ராஜேந்திரனை தன் மனவலிமையாலும், பக்தியாலும் மீட்டுவிட முயலும் அவள், அவனுக்குப் பதிலாக அரசை ஆள்வதையோ, அதிகாரத்திற்காக யாரையும் துன்புறுத்துவதையோ ஏற்பதில்லை. இறுதியில் சுயஅழிவின் மூலமே அவளுக்கு விடுதலை கிடைக்கிறது.

ராஜேந்திரனையும், பசவனையும் வளர்க்கும் கிழவி. அவளுக்கும் பகவதிக்கும் மட்டுமே பசவன் யாரென்று தெரியும். அவளுக்கு கால் முறிக்கப்பட்ட பசவன் மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதே சமயம் விலக்கமும். சிக்கவீர ராஜேந்திரன் குறித்து அவள் கொண்டிருக்கும் சித்திரம்தான் முக்கியமானதாகப்படுகிறது. குழந்தையாகச் சிக்கவீரன் இருக்கும்போது தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறான், அது கிழவியின் காதை நனைக்கிறது. இந்த நிகழ்வைச் சொல்லி ஒரு பெண்ணை அவன் பிடியிலிருந்து அவளால் மீட்க முடிகிறது. இறுதிவரை அவள் தூக்கத்தில் படுக்கையை நனைக்கும் சிறுவனாகவே அவனைப் பார்க்கிறாள்.

ஆண்களே இந்த உலகை ஆள்வதாக நாம் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பெண்களே இந்த உலகை ஆள்கிறார்கள். அவர்கள்தான் போட்டியை உருவாக்குகிறார்கள். உலகம் பெண் மையச் சமூகமாக இருந்ததன் எச்சமாக இன்றும் ஒவ்வொரு குடும்பமும் மறைமுகமாக பெண்களாலேயே வழிநடத்தப்படுகிறது, அதன் வழியே ஆண்களும் சமூகமும் இந்த உலகமும் கூட அவர்கள் காலடியிலேயே கிடக்கிறது. பெண்கள் மிக நுட்பமாக தங்கள் அதிகாரத்தைச் செலுத்தப் பழகிவிட்டனர். ஆண்களோ இதற்கு நேர்மாறான நிலையில், வெளிப்படையாக தாங்கள் அதிகாரம் செலுத்துவதாகக் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். அந்தக் கனவுகளில் தன் வாழ்வை இழக்கின்றனர். இந்த நாவலும் அப்படிப்பட்ட சூழலையே சித்தரிக்கிறது. தன்னைச் சுற்றி, உண்மையோடிருக்கும் நபர்கள் மீது தன் அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பிக்கும் போதும், அவர்களைக் காயப்படுத்தும்போதும் ஒரு தனி மனிதனின் அழிவு ஆரம்பமாகிறது. அந்தத் தனி மனிதன் தலைவனாக இருந்துவிட்டால் நாடே அழிந்துபோகும். தன் தங்கை, போபண்ணா, ரேவண்ண செட்டி, உத்தய்ய தக்கன் என்று சிக்க வீர ராஜேந்திரன் தன் அதிகார வெறியைச் செலுத்த ஆரம்பிக்கும் போது நல்ல மனிதர்களான அவர்கள் ஒவ்வொருவராக அவனைக் கைவிட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தீமையின் முழு வடிவான நொண்டி பசவனோ இறுதிவரை சிக்கவீர ராஜேந்திரனைக் கைவிடுவதேயில்லை. இப்படியாக வாழ்வு அதன் போக்கில் முரண்களை விதைப்பதும் அறுப்பதுமாய் இருக்கிறது.

இது தவிரவும் அதிகார மட்டத்தில் இரண்டாம் இடத்திற்காக நடக்கும் போட்டிகள், அதற்கான நகர்வுகள், உள்ளடிகள், பேச்சு வார்த்தைகள், சமரசங்கள் என்று அது ஒரு தனி உலகமாக இயங்கியபடி இருக்கிறது. மாஸ்தி அவர்கள் தன்னுடைய அலுவல் வாழ்வில் நடந்த அனுபவங்களை, உரையாடல்களைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதிகாரத்தளத்தில் நடக்கும் உரையாடல்கள் இந்த நாவலின் தரத்தை ஒருபடி மேல் நகர்த்துகின்றன. மாஸ்தி அய்யங்காரும் ஓர் அதிகாரப் போட்டியின் இறுதியில் தோல்வியுற்று, அதனாலேயே உணர்ச்சி வசப்பட்டு வேலையை விட்டிருக்கிறார். அதன் பின் முழு நேர எழுத்தாளனாக வாழ்ந்திருக்கிறார். இதே நிகழ்வு நாவலில் மந்திரி போபண்ணாவிற்கு நிகழ்வதாக வருகிறது. இப்படியாக வரலாறு என்னவோ திரும்பத் திரும்ப நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது.

எழுத்தாளன் தானறிந்த அனைத்தையும் சேர்த்து ஒரே நாவலாக எழுத வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பும் ஆராய்ச்சியும் கற்பனையும் தேவைப்படும். மாஸ்தி அய்யங்கார் அப்படிப்பட்ட ஒரு கனவை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். எனக்கோ அது இன்னும் பெரும் கனவாய் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் அந்தந்த எழுத்தாளனின் உரிமை/தேர்வுதான் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள்ளத்தான் வேண்டும்.

அதே சமயம், ஒரு சிறுகதை ஒற்றை மையம் நோக்கி மட்டுமே பேசுவதாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு நாவல் மையம் நோக்கிக் குவியும் அதே நேரத்தில், அதைச் சுற்றிய சூழலும், சூழலுக்கு வெளியில் இருக்கும் அமைப்பும், மையத்திற்கு மறுபக்கம் இருக்கும் காரணங்களும் என விரிந்து பரவவும் வேண்டும். விரிவும் ஆழமுமே சிறந்த நாவலுக்கான வரையறை. எதைச் சொல்வது? எதை விடுவது? எது மையம்? எது நோக்கிச் செல்வது? என்பது குறித்து குழப்பம் வரும் போது எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால்தான் சிக்கவீர ராஜேந்திரன் எல்லாவற்றையும் பற்றிப் பேசியபடியே இருக்கிறது. இருந்தாலும் கூட, தமிழின் பெரும்பாலான வரலாற்று நாவல்களில் காணப்படும் வெற்றுக் கற்பனைகளோ, கிளுகிளுப்புகளோ, விதந்தோதல்களோ இல்லாத தரமான நாவல் என்றே சிக்கவீர ராஜேந்திரனைச் சொல்லலாம்.

மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் இயல்பாகவும் எளிமையாகவும் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இந்த நாவலைத் தமிழிலேயே படித்தேன், ஒரு வேளை கன்னடத்தில் மாஸ்தி அவர்களின் சித்தரிப்புகள், மொழிவளம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கூடும்.

வாசிப்பிற்கு உதவிய தளங்கள்:

Sunday, June 26, 2016

நுங்கம்பாக்கம் – ரயில் நிலையம் - ஒரு நினைவு


என் சென்னை வாழ்வுல, நான் அதிக முறை போன இடம்னா அது நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன்தான். கிட்டத்தட்ட ஆறு வருஷம் சூளைமேட்டுல இருந்தேன். மாத பாஸ் 120 ரூபாய்க்கு வாங்கிட்டு, தினசரி வேலை இருக்கோ, இல்லையோ ரயில்ல பயணம் பண்ணுவது என் பழக்கம். அப்போ ஸ்டேசன் உள்ளார போகவும் வரவும் எங்களுக்குன்னு ஒரு வழி உண்டு. சவுராஷ்டிரா நகர் நாலாவது தெருவுல புகுந்து நேரே வந்தா ரயில்வே சுவர் உடைந்து இருக்கும், அது வழியா ஏறி ட்ராக்கைக் கடந்து உள்ளே போவோம். அதே போல இறங்கி வெளியிலும் வருவோம். இதெல்லாம் பகல்ல மட்டும்தான். ராத்திரில அந்த இடத்துல நாய் தொந்தரவு இருக்கும். அப்படி உள்ளே போகும் போது, எப்போவாவது டிக்கெட் செக் பண்ணுவாங்க. TC-க்கு எங்களை எல்லாம் நல்லாத் தெரியும், ஒன்னும் கேக்க மாட்டாரு. டிக்கெட் இல்லாம மாட்டுறவங்கள அந்தக் கடைசில இருக்க ரூம்ல நிக்க வைப்பாங்க. ஓரளவு ஆள் சேர்ந்த உடனே, எக்மோர் ஸ்டேசன் கூட்டிட்டுப் போய் தண்டம் கட்டவைக்கணும். அது கூட எப்போவாவதுதான் நடக்கும். அந்த ரூம் வாசல்ல எடை போடுற மிசின் ஒன்னு கெடக்கும். அந்த ரூமை தாண்டினா கிரானைட் பெஞ்ச் – வரிசையா இருக்கும். அதெல்லாமே சாயங்கால நேரத்துல லவ்வர்ஸ் பெஞ்ச்கள்.
இன்னொரு நடை மேடை வெளியூர் ட்ரைன்-களுக்காக இருக்கும். அதுல மாசம் ஒரு ட்ரைன் நிக்கிறதே பெருசு. அதுக்குப் போகணும்னா, ட்ராக் க்ராஸ் பண்ணனும் இல்லனா, வெளில போய் லயோலா ஒட்டி ஒரு பாதைல வந்து உள்ள வரணும். அந்தப் பாதைல புல் மண்டிப் போய் இருக்கும். அந்த நடை மேடைல ஒன்னு ரெண்டு கஞ்சா அடிமைகளைத் தவிர யாரும் இருக்க மாட்டாங்க.
ராத்திரி 12 மணி, அதிகாலை 5 மணினு எத்தனையோ முறை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் போயிருக்கேன். சாயங்காலத்துல போய் கிரானைட் பெஞ்ச்ல உட்கார்ந்து புத்தகம் படிச்சுருக்கேன்.
(2008 ஆக இருக்கலாம்), இரவு 11 மணிக்கு மேல இருக்கும். மாம்பலத்துல இருந்து நுங்கம்பாக்கம் வந்துட்டு இருந்தேன். கோடம்பாக்கத்திற்கும், நுங்கம்பாக்கத்துக்கும் நடுவுல வண்டி நின்னு கெளம்பியது. நுங்கம்பாக்கத்தில் ரெம்பக் குறைவான பேர்தான் இறங்கினாங்க.
நான் படிக்கட்டுக்கிட்ட வரும்போது ஒரு இத்துப் போன ஸ்ரெச்சர்ல பழைய சாக்கை வச்சு எதையோ மூடி வச்சுக்கிட்டு, கைலி கட்டின ஒருத்தர் ஒவ்வொருத்தர்கிட்டையா அதைப் பார்த்துக்கச் சொல்லி கெஞ்சிக்கிட்டு இருந்தார். யாரும் நிற்கவில்லை. போய்கிட்டே இருந்தாங்க. கடைசியா வந்த என்கிட்ட கேட்டார். அவரிடம் இருந்து மட்ட ரக சாராய வாடை அடித்தது. நான் அவரிடம் ஸ்ரெச்சேரில் என்னனு கேட்டேன். 

அனாதைப் பொணம் சார். ரயில்ல அடிபட்டது. நாங்க ரெண்டு பேர் சேர்ந்து தூக்கினோம். அவன் போலீஸ் கூட எக்மோர் போய்ட்டான். அவனும் போலிசும் வர்ற வரை இங்கதான் இருக்கணும். அப்புறம் நோட் போட்டு ஜி.ஹச் போவனும் சார். ஸ்டேசன் மாஸ்டர போன் பண்ணி வர சொல்லணும். நான் மேல போயிட்டு வர்ற வரை இதைப் பார்த்துக்க சார். நான் ஓடிட மாட்டேன் – நம்பு சார். நீ வேணா நான் மேல போறதைப் பார்த்துகிட்டே இரு.
சரி போயிட்டு வாங்க நான் நிக்கிறேன்.
சுற்றிலும் பார்த்தா, எப்போவும் பூ விக்கிற அந்த அக்கா கூட இல்லை. நான் பக்கத்துல இருந்த பெஞ்ச்ல உட்காந்தேன். அவர் அந்தப் படி வழியா மேல போய் கவுன்ட்டர்ல இருக்க ஆள்கிட்டப் பேசுறதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ அடிச்ச காத்துல சாக்கு விலகி உள்ளே இருக்கும் பிணத்தின் தலை தெரிஞ்சது. பெண், நீண்ட முடி. ஆனால், முகம்கிற ஒன்னே இல்லை. துண்டு துண்டா சிதறிய இடத்தில் பற்கள். உதடே இல்லை. பக்கத்தில இருந்த குச்சிய வச்சு சாக்கால் மறுபடி மூடினேன். அப்புறம் மறுபடி பறக்காம இருக்க ஒரு சின்னக் கல்லை அதன் மேல் வச்சேன்.
போனவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தாப்ள.
மேல டிக்கெட் கவுன்ட்டர்ல இருக்கவர் இங்க வர மாட்றார். பொணம்னாப் பயமாம், டிக்கெட் வேற குடுக்கணுமாம். என்கிட்ட இருபது ருபாயக் குடுத்துட்டு, தயவு செஞ்சி பொணத்தப் பார்க்கக் கூப்பிடாதனு சொல்லிட்டாரு. என்னா சார் மனுசங்க. ஆள் வரட்டும், அதுவரை நானே பார்த்துக்குவேன். சரி சார் நீ கெளம்பு.
பரவால்லை. ஆள் வர வரைக்கும் நானும் இருக்கேன்.
நான் கல்லெடுத்து வச்சுருக்கிறதைப் பார்த்துட்டு, நாய்க்குப் பயந்துதான் உன்னை இங்க இருக்க சொன்னேன். அது வந்து இழுத்துப் போட்டுட்டு போயிரும். நெறைய இடத்துல நாங்க போறதுக்கு முன்னாடி நாய் இழுத்து, இங்கேயும் அங்கேயும் கெடக்குற பீசுங்கள எடுத்து பொட்டலமா ஆக்கித் தூக்கிட்டு வந்துருக்கோம். பெஜாராய்டும். முழுப்போதை இல்லாம இந்த வேலை செய்ய முடியாது. இனி இதைத் தூக்கி மார்ச்சுவரில போடுற வரை சாப்பாடு கெடியாது சார். இது அனாதைப் பொணம் வேற, எங்களுக்கு ஒன்னும் கெடைக்காது.
இடுப்பிலிருந்து ஒரு குவாட்டரை எடுத்து அதில் பாதியைத் தொண்டைக்குள் கவிழ்த்தார். அது மானிட்டர் பிராந்தி என்பது வெளிச்சத்தில் தெரிந்தது.
அரை மணி நேரத்தில் போலீஸ், இன்னொரு நபர், ஸ்டேசன் மாஸ்டர் எல்லாரும் வந்துவிட்டனர். நான் கிளம்பினேன். அப்போதெல்லாம் படி ரெம்பக் குறுகல். மேலே ஏறி இடப்பக்கம் திரும்பினேன். ஒரே ஒரு ட்யுப் லைட்தான். வரிசையாகப் பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். அவர்களை நான் பலமுறை இதே ரயில்வே ஸ்டேஷனில் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தை குப்பை கூலங்களுக்கு நடுவே தனியாகக் கிடந்தது. கொஞ்சத் தூர இடைவெளியில், மனநிலை தவறிய ஒரு பெண், தன் அழுக்கான உடைகள் விலகப் படுத்திருந்தாள். அவள் கண்கள் திறந்திருந்தன. நான் நிதானமாகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன்.
--------------------------------------------------------------------------------------
என் நினைவிற்காக:
மேலும், இதற்காக அப்போது ஒரு கவிதையும் எழுதினேன்.
சிறுகடவுளின் தலையெழுத்து

எப்போதும் விழித்தே இருக்கும் நரகத்தில்
"ஸ்டெத்" மணிகட்டிய பெருங்கடவுள் ஆணையிட்டார்
பலரின் தலையெழுத்தை வாசிக்க.
போதையேறிய சிறுகடவுளின் ஆயுதம்
பழைய சுத்தியும்
உடைந்த கத்தியும்
புழுத்து நாறும் அரசவையில்
நிறைகின்றனர்
அங்கங்கள் அற்ற அடிமைகள்.
சிறு கடவுளாய் இருத்தலின்
சாத்தியங்களைப் பழித்தபடி
வாசிக்கப்படுகிறது அவர்களின்
தலையெழுத்து.
......................தொடர் புள்ளிகளால்
நீட்டிக்கப் படுகிறது
சிறுகடவுளின் முற்றுப் புள்ளி.

Sunday, June 12, 2016

நார்த் மெட்ராஸ் நினைவுகள்

நார்த் மெட்ராஸ்#1

நேற்று மதியம் மூலக்கடை போயிட்டுருந்தேன். அரை போதையில் பக்கத்தில் வந்து உட்காந்தார் ஒரு வடசென்னைவாசி. நான் புத்தகத்திற்குள் இருந்தேன், சாரி சார் – நான் குடிச்சிருக்கேன் – ஸ்மெல் மே டிஸ்டர்ப் யு. பர்டன் மி.
உங்கள மேரிதான், என் பொண்ணும் பட்ச்சுகினே இருக்கும் சார். பிளஸ் 2 இந்த வருஷம் போவுது. 25 ஆயிரம் கேக்குறான் சார் பீசு. அந்தக் கவலைலதான் ரெண்டு கோட்டர் போட்டேன். நேத்துப் பத்தாயிரம் குடுத்தேன். இன்னும் பதினைஞ்சாயிரம் ரெடி பண்ணனும். நல்லா படிப்பா சார். எனுக்கு வேற புள்ள இல்லை. அவளுக்கு அம்மா பாசம். அம்மா நீ அழகா இருக்க, அப்பா கருப்பு அப்பிடின்னு சொல்லிச்சொல்லி அவ அம்மாவுக்கு முத்தம் குடுத்துட்டே இருப்பா. எனக்கு ஒரு முத்தம் குடுக்க மாட்டா. என்னைப் பார்த்து, நீ எங்க அம்மாவுக்கு ஜோடியானு கேட்பா சார். 

போன வாரம் புர்சவாக்கம் இட்னு போய் சுடிதார் எடுத்துக் குடுத்தேன். எவ்ளோன்ற ரெண்டாயிரம் ரூபா. ஐநூறுக்கு வாங்கிக்க சொன்னா, இவ்ளோக்கு எடுக்குது. இன்னா பண்றது, பாவோம்ல வாங்கிக்கோன்னேன். ஆனா, அடுத்த வருஷம் அவள காலேஜ் அனுப்ப முடியாது, என்னாண்ட பணம் இல்ல சார். 

எங்க அப்பா ரிப்பன் பில்டிங்ல வேலை செஞ்சார். அம்மா ஸ்கூல் டீச்சர். நான் ஏழு பசங்க – ஏழும் பசங்கத்தான். எனக்கும் அம்மாதான் சார் எல்லாம். அவுங்கோ செத்து ஆறு வருஷம் ஆவுது. நான் பத்தாவதுக்கு மேலே படிக்கல – ஏறல, இன்னா பண்றது. இப்போ என் பொண்ண படிக்க வைக்க முடியாது சார். குடில உளர்றேன். தப்பா நெனைச்சுக்காத. ஆட்டுத்தொட்டி வந்துடுச்சு சார். Study well. all the best. bye bye.

நார்த் மெட்ராஸ் #2

பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். 16 வயதிருக்கலாம் அழுக்குச் சட்டை- கையில ஒரு குச்சி, இன்னொரு கையில புத்தம் புது பிளாஸ்டிக் செருப்பு - ஒரு ஜோடி. வெகு நிதானமாகக் குச்சியை வைத்துத் தார்ச்சாலையில் தட்டிக்கிட்டே வந்தான். அவன் வயசே இருக்கும் இன்னொருவன் வந்து வழிமறித்தான் இவன் சட்டை அழுக்குடனும், கிழிந்தும் இருந்தது. 

டேய் செருப்பக் குடு - ரெண்டாமாவன். முதல் சிறுவன் - குச்சியைத் தட்டுவதை நிறுத்தினான். ஆனால் செருப்பையும் விடவில்லை. இன்னும் மூனு பெண்கள் வந்தார்கள். செருப்பைக் கேட்டவனிடம், டேய் இன்னாடா, உனுக்கு இன்னா வோணும்னு கேட்பதை, நானும் கேட்டேன். 

இவன் அந்தக் கடைல இருந்த செருப்ப எட்துனு வன்ட்டான். கொஞ்ச தொலைவில் நடைபாதை செருப்புகள் பரப்பி இருந்ததைப் பார்த்தேன். அங்கேயிருந்து இன்னொரு மத்திய வயது நபர் வந்தவுடனே செருப்பைப் பிடுங்கி அவரிடம் கொடுத்துவிட்டு, டப்பென்று அறை ஒன்றையும் செருப்பை எடுத்தவனுக்குக் கொடுத்தான் ரெண்டாவது சிறுவன்.

பொருள் வந்ட்டுல்ல இன்னாத்துக்கு அடிக்கிற த்தா – இது மூன்று பெண்களின் வாயிலிருந்தும் வந்த வார்த்தைகள். செருப்பைக் வாங்கிய கடைக்காரரும் ஏண்டா அவன அடிச்ச? போடா அன்னாண்டனு சொன்னார். அடித்தவன் எதிர் திசையில் போய்க் கொண்டேயிருந்தான். அடி வாங்கியவன் கண்ணைப் பிடித்துக் கொண்டு குச்சியைக் கீழே போட்டுவிட்டு தரையிலேயே உட்கார்ந்துவிட்டான். 

த்தா. பொருள் கெடைச்ச பின்ன இந்தப் புள்ளிய என்னா மயிருக்கு அடிக்குது பாடுனு இரண்டாமாவனைத் திட்டியபடிக்கு ஒரு பெண் சேலையால் அவன் முகத்தைத் துடைத்தாள்.

சிவந்த கண்ணுடன் எழுந்தவன், குச்சியால் தரையைத் தட்டியபடிக்கு மறுதிசையில் கிளம்பிப் போனான்.

Monday, May 23, 2016

மடை - எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கடிதம்

index
அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் எழுதி இருக்கும் – யாகவா ஆயினும் நாகாக்க! என்ற கட்டுரையிலுள்ள கருத்துகளை மறுக்கிறேன்.
பனையில் வைரம் பாயாது என்று திரு.ஒத்திசைவு ராமசாமி சொல்லியிருப்பதையே எடுத்துக்கொள்வோம். ஏதேனும் ஒரு கத்துக்குட்டி ஆசாரியிடமாவது போய் கேட்டாலே, அவர்கள் பனையில் வைரம் உண்டு என்று சொல்வார்கள். ஆனால் வைரம் நடுமரத்தில் அல்ல புற மரத்தில் இருக்கும். வலிமையான அதன் வெளிப்புறத்தை மட்டுமே நம்மால் எதற்கும் பயன்படுத்த முடியும். அதற்கு மரவேலை செய்பவர்கள் வைக்கும் பெயர் வைரம். வேலைக்கு ஆகாத உட்புறத்தைக் குறிப்பதல்ல அது. உட்புறத்தின் பெயர் – சோறு. (தின்பதற்கானது அல்ல). நல்ல வேளை, வைரம் என்றால் நகை செய்ய முடியுமா என்று திரு.ராமசாமி கேட்கவில்லை.
இருபது வருடம் முன்புவரை பெரும்பாலான கிராமங்களில் வீடு கட்டுவதற்கு பனையே அடிப்படை. அவரவர் வயல்களில் வளர்ந்து நிற்கும் பனைகளை வெட்டி மூன்று மாதம் வரை ஆறப்போட்டு, பதம் கொண்ட பின் பிளக்கப்பட்டு கைமரம் என்ற வடிவத்தை அடையும். வீடு கட்டும் எண்ணம் வந்தவுடனேயே, ஆசாரிகள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் மூலம் நம்முடைய நிலங்களில் நிற்கும் பனையில் வயதில் மூத்த, அதே சமயம் வைரம் கொண்ட மரங்கள் அடையாளம் காணப்படும். பின் அவை அறுக்கப்பட்டு மேல் சொன்னபடி கைமரமாகும். சில மரங்கள் உச்சியில் நைந்து போய் இருக்கும். அவை ஒட்டுமொத்தமாகச் சுண்ணாம்புக் காளவாசலுக்கு அனுப்பப்படும். செட்டிநாட்டின் அத்தனை வீடுகளுக்கும் கடைசிக்கட்டு என்பது சமையலறை மற்றும் கூடம். அவை இந்த வைரம் பாய்ந்த பனைகளால் கூரை வேயப்பட்டவை. என் அம்மாவின் பரம்பரை வீடு 180 வருடம் பழைமையானது, இன்னும் இடியாமல் இருக்கிறது. அவ்வீட்டின் சமையலறையில் இன்னும் பனங்கை நிற்கிறது. சரியான பராமரிப்பில் அதன் ஆயுள் நாம் நினைப்பதைவிட அதிகம். நூறு வருடம் வரைகூட நிலைக்கும். தண்ணீரில் 5 முதல் 10 வருடம் நிலைக்கும். ஒரே எதிரி – கரையான்.
சரி. அடுத்து பனையைக் குடைந்து தண்ணீரைப் பாய்ச்ச முடியுமா என்ற கேள்வி. அப்படி அமைக்கப்பட்ட தூம்பில் நானே தண்ணீர் பாய்ச்சி இருக்கிறேன். அதில் அரைத்தூம்பு, முழுத்தூம்பு என இரண்டு வகை உண்டு. சுமார் பத்து வருடங்கள் வரை அது தாக்குப்பிடிக்கும். இன்றைய பிளாஸ்டிக் நீர்க்குழாய்கள் வருவதற்கு முன் பனைத்தூம்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன. நீர் வற்றிய கண்மாய்களில் இருக்கும் பள்ளங்களில் இருந்து நீரை வெளியேற்றி அதில் பத்தை என்ற மீன்பிடிக் கருவியைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம். அப்போதும் கூட இந்த பனைத்தூம்புகளே பயன்படுத்தப்படுகின்றன(பட்டன). ஆகவே ஆதியில் நீர்பாய்ச்ச பனைத்தூம்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமே கொள்ளத்தேவையில்லை.
அடுத்து மடை – சோழர்கள், பாண்டியர்கள் மடைகளில் சில வேறுபாடுகள் உண்டு. பாண்டிய நாட்டின் மடைகள் பெரும்பாலும் இரு பகுதி கொண்டவை. ஒன்று கண்மாய்க்குள் இருக்கும் உள்மடை – இன்னொன்று கரைக்கு வெளியே இருக்கும் வெளிமடை. இரண்டையும் இணைக்கும் கல் தூம்பு (குழாய் – பாதை). நிச்சயமாக இந்தக் கல்தூம்பு பின்னால் வந்தது. வெகுகாலம் முன்பு இவை எப்படி இருந்திருக்கும்? – பனைத்தூம்புகளாக இருந்திருக்கலாம். ஏனென்றால் உள்மடை என்ற அமைப்பு உருவாகும் முன், கண்மாயின் உள்பகுதியில் இருந்து வெளிமடையை இணைக்க 25 அல்லது 30 அடி நீளக் குழாய் தேவை. அதற்கு பனையைத் தவிர சுலபமான வேறெந்த வாய்ப்பும் நம்முன்னோரிடம் இருந்திருக்காது. (இன்னொரு வாய்ப்பு சுட்ட களிமண் குழாய்கள்) ஆகவே பேராசிரியரின் கூற்று உண்மையாய் இருக்கலாம்(லாம்தான் – உறுதியாக அல்ல). பின்னாளில் கல்லால் அடித்து இருபக்கங்களையும் இணைத்து, உள்மடை – வெளிமடை என்று மடை அமைப்பை மேம்படுத்தி இருக்கலாம் (மரக்கோயில்கள் கற்றளிகள் ஆனது போல). உறுதியாகத் தெரியவில்லை. அந்த அப்ஸ்ட்ராக்ட்-ல் இருக்கும் குறைகளை முன்வைத்து அவருடைய கூற்றை மறுக்கலாம் அல்லது காஞ்சி-மாமண்டூரில் இருக்கும் ஆயிரம் ஆண்டு பழைமையான மடையை முன்வைத்தும் அவரை மறுக்கலாம். ஆனால், பனைத்தூம்பே இல்லை, மூழ்கி நீர் திறப்பது என்ற வழக்கமே இல்லை என்பதெல்லாம் ஆய்வுக்கட்டுரைக்கான பதில்கள் அல்ல.
செட்டிநாட்டில் மடை ”திறக்க” அனுமதிப்பதற்கு என்றே அதிகாரம் கொண்ட ஒரு குடும்பம் இருக்கும் – எங்கள் ஊரில் அம்பலங்கள் (கள்ளர்கள்). மடையாணி “பிடுங்க” என்றே எங்கள் ஊரில் ஒரு குடும்பம் உண்டு. அவர்கள் பெரும்பாலும் தேவேந்திரகுல வெள்ளாளர்கள். பெரிய கண்மாய்கள் அருகே அய்யனார் கோயில் இருக்கும் – அதன் பூசாரிகள் – குயவர்கள். மடைக்கு அருகில் மடமுனி (மடைமுனி) என்று எந்த ஒரு உருவம் இல்லாத சூலம் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். அய்யனாருக்குப் பூசை செய்யும் வேளார் (குயவர்)-க்கு மடமுனியைப் பூசிக்கும் உரிமை கிடையாது. மடை திறக்கும் நாள், அவ்வுரிமை கொண்ட தேவேந்திர குல வெள்ளாளர் குடும்பத்தின் தலைமகன் மடமுனிக்கு பூசை செய்து உள்/வெளிமடைகளுக்கும் பூசை செய்வார். பின் அவர் வெளிமடைக்குள் இறங்கி மடையாணி (வலுத்த கட்டை) பிடுங்கிவிட நீர் பாயும். மேலேறும் போது அரை மடைக்கு நீர் சுழித்துக் கொண்டிருக்கும். மடையாணி பிடுங்கும் அந்த உரிமை வேறெந்த இனத்தவருக்கும் கிடையாது. பெரும்பாலும் அவர்களே போகம் முழுவதும் எல்லோருக்கும் முறை வைத்து நீர் பாய்ச்சுவார்கள். என் ஐயா(அப்பாவின் அப்பா – தீவிர காந்தியவாதி – சுதந்திர இந்தியாவின் பொதுப்பணித்துறையில் அதிகாரி – மடை திறக்க அனுமதிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் – பொய் சொல்ல வேண்டிய தேவையற்றவர்)விடம் மடமுனியின் கதை என்ன என்று நான் கேட்டிருக்கிறேன். சில நூறு ஆண்டுகள் முன், எங்கள் முன்னோர் அனுமதியின் பேரில் மடையாணி பிடுங்கப்போய், இறந்துப்போன (தேவேந்திர குல வெள்ளாளர்) ஒருவரின் கல்லறை அது என்று சொல்லி, அவரின் குடும்பமே இன்றுவரை மடையாணி பிடுங்கும் உரிமை கொண்டது என்று சொன்னார்.
கண்மாய்களில் நீர் பெருகி, மறுகால் போகும்போது வெளிமடையில் மடையாணி பிடுங்குவது இன்றும் ஆபத்துதான். சற்றே கவனம் பிசகினாலும், அதீத அழுத்தம் கொண்ட நீர் மனிதனை உள்ளிழுக்கும் சாத்தியம் உண்டு – ஒப்பீட்டளவில் மேம்பட்ட மடை அமைப்பு என்பதால் இறப்பு நிகழாது, ஆனால் கைகால் உடையும் வாய்ப்பு உண்டு. இது தொன்னூறுகள் வரையிலான நிலை. இன்று அப்படி அல்ல. உள்மடையிலும் கூட அடைக்கவும் திறக்கவும் முடியும். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து உள்மடை அடைக்கும் வழக்கம் இப்போது இல்லை. ஏனென்றால் இன்று நீர் நிரம்பிய உள்மடையில் இறங்கி நீர் திறக்கும்/அடைக்கும் வலிமை கொண்டவர்கள் யாருமில்லை. அப்படி யாராவது இறங்கினால் நானே, சரியான மடையனாக இருப்பான் போல என்றுதான் சொல்வேன். இன்று கண்மாய்களில் நீரே இல்லை, மடைகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் இரும்பு ஷட்டர் போடப்பட்டு, அவை துருப்பிடித்து நகர்வதே இல்லை. கண்மாய்க்கு மடைதிறக்கும் அளவிற்கு தண்ணீர் வந்து பத்து வருடம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் மடை என்பதே கற்பனை என்றுகூட யாரேனும் சொன்னால் ஆச்சர்யம் இல்லை.
ஆய்வாளன் தன் அனைத்து ஆய்வுகளிலும் சரியான முடிவுகளை அடைய முடியாது. அது ஒரு முயற்சி. அது தவறான முடிவே என்றாலும், அதிலிருந்து சரியை நோக்கி நாம் பயணப்பட முடியும். ஓர் ஆய்வுக்கட்டுரைக்கு எதிர்வினை மற்றொரு ஆய்வுக்கட்டுரையாகவே இருக்க வேண்டும். அவதூறுகள், நக்கல், கலாய்ப்பது ஆகியவை அல்ல என்று நீங்களே பலமுறை கூறி இருக்கிறீர்கள். தெங்கு குறித்த நாஞ்சிலின் கட்டுரையையே தொ.ப.விற்கான எதிர்வினை என்று நினைக்கிறேன். நீங்கள் மடை-மடையன் பற்றி அப்படி ஒன்றை எழுதினால் இதுபற்றி இன்னும் சில கருத்துகளை நாங்கள் அறிவோம். உங்கள் மீதும், தொ.ப மீதும் எனக்குள்ள மரியாதையாலேயே இதை எழுதினேன். என்ன இருந்தாலும் உங்களைப் போலவே தொ.ப எங்களுக்கும் ஆசிரியர் அல்லவா? நன்றி.
இதுவும் என் ஊரின் அருகில் உள்ள ஊர்தான்.
அன்புடன்,
பா.சரவணன்
***
அன்புள்ள சரவணன்
விவசாயம் சார்ந்த செயல்களுக்கு எனக்கு ‘செவிவழி’ தகவல்களை நம்பியிருக்கவேண்டியதில்லை. நானே அவற்றையெல்லாம் செய்திருப்பேன்.
பனைமரத்தை மடையாக குறைந்தது ஐம்பது முறையேனும் நானே அமைத்திருக்கிறேன். எங்களூரில் வயலில் இருந்து நீரை வெளியேற்ற பனை மடை பயன்படும்
பனையை இரண்டாகப்பிளந்து உள்ளிருக்கும் பாரை சுரண்டி எடுத்துவிட்டு இரண்டையும் சேர்த்துப்பொருத்தினால் மடையாக ஆகும். அதை வரப்பிலோ கரையிலோ புதைத்து வைப்போம். ஒரு பனைமரத்துக்குள் உள்ள மடையின் அகலம் அதிகபட்சம் தொடக்கத்தில் இரண்டு சாண். நுனியில் ஒரு சாண். அதில் ஆள் எல்லாம் நுழையமுடியாது
பனைத்தடி கழுக்கோலாக ஆகும். ஆனால் மெல்லிய பலகை எல்லாம் ஆகாது. அதன் சுற்றுவட்டத்தின் கரியபரப்புடன் கனமான பாரும் கலந்திருந்தால் மட்டுமே வலு. அதன் பட்டைப் பொருக்கில் வலிமை கிடையாது.
பனைமடை எதற்கு என்றால் மிக அகலமான கரைகள் மற்றும் வரப்புகளுக்குத்தான். நீளமான குழாய். மண்ணிலும் ஈரத்திலும் இருந்தால் அது கூடிப்போனால் பத்து வருடம் மட்காமலிருக்கும்.
எரிகள் குளங்களுக்கு கல்லால் ஆன மடைகள் சோழர்காலத்திலேயே வந்துவிட்டன. சோழர்காலத்தைய, நாயக்கர் காலத்தைய நீர் மட்டம் காட்டும் கிடைக்கல் மற்றும் கல்மடைகள் இன்றும் உள்ளன. குமரிமாவட்ட ஏரிகள் பற்றி அ.கா.பெருமாள் ஆய்வுசெய்திருக்கிறார்
ஏரிக்காவலர், மடைப்பொறுப்பாளர் எல்லா ஊரிலும் உண்டு. மடைதிறப்பதில் இறப்புகள் நிகழ்ந்திருக்கவுகூடும். ஆனால் அவர்கள்தான் மடையர்கள், அவர்கள் ஒருவகை தற்கொலைப்படை, அவர்களை வெற்றித்திலகமிட்டு அனுப்புவர் என்றெல்லாம் சொல்ல மேலதிகத் தரவுகள் தேவை. அம்முடிவுகளுக்கு வர ஆய்வு முறைமை தேவை. முன்னுதாரணங்கள் தேவை.
இவை நாட்டாரியல் சார்ந்த தரவுகள். ஏதேனும் ஒரு தகவலாளி அதைச் சொல்லியிருக்கவும் கூடும். இவற்றைக்கொண்டு நேரடியாக வரலாற்று முடிவுகளுக்கு செல்வதும், அம்முடிவுகளை அருள்வாக்கு போல அறிவிப்பதும் எல்லாம் ஆய்வு அல்ல. அத்துடன் அந்த ஆய்வுமுடிவுகளுடன் இனம், மொழி என அபாயகரமான உணர்வுகளையும் காழ்ப்புகளையும் கலந்துவிடுவதும் சரி, விவாதத்திலிருந்து எதிர்தரப்பை விலக்குவதும் சரி எவ்வகையிலும் ஏற்றுக்கொள்வதற்குரியதல்ல.
ஆய்வுகளின் முடிவுகள் ஆய்வால் எதிர்கொள்ளப்படவேண்டியவை. ஆனால் இத்தகைய ‘அடிச்சுவிடல்கள்’ ஆய்வாக விவாதிக்கப்படும்போது சமூகவியல், நாட்டாரியல் போன்ற துறைகளின் நம்பகத்தன்மையே இல்லாமலாகிறது. நாட்டாரியல்தகவல்கள் 1. முதன்மைத் தகவலாளியின் இடம், பெயர், காலம் ஆகியவற்றுடன் இணைந்தால் மட்டுமே தரவாக ஆகமுடியும் 2 அவை முதன்மைத்தரவுகள் அல்ல. அவை பல்வேறு சமானமான தரவுகள் வழியாக மீண்டும் மீண்டும் நிறுவப்படவேண்டும். 3 அவற்றுடன் இணையும் தொன்மையான மொழிஆதாரங்கள் இருக்கவேண்டும். 4 தொல்பொருள் சான்றுகள் இருக்கவேண்டும் 5 மேலும் அவை பிறநாட்டாரியலாளர்களால் விவாதிக்கப்பட்டு பொது ஒப்புதல் பெறப்படவேண்டும்
இம்முறைப்படி அன்றி எழும் கருத்துக்கள் வெறும் கருத்துக்களே. அவற்றைச் சொல்லிச்சொல்லி நம்பிக்கைகளாக ஆக்குதலும், மிகையான உணர்வுக்கொந்தளிப்புகளும், சொந்த சரக்குகளை ஊடாக கலந்துவிடுதலும் பெரும்பிழைகள் அவை உரியமுறையில் இவை புறக்கணிக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறேன்
இத்தகைய ஊகங்களை மேடைகளை நம்பி உருவாக்குகிறார்கள். மேடைகளில் இவை அழியாது வாழ்கின்றன. நம் அறியாமை, இன மொழி மேன்மைக்காக எதையும் நம்பும் அப்பாவித்தனம் ஆகியவற்றின் சான்றுகளாக நீடிக்கின்றன
இத்தகைய அனைத்து கூற்றுக்களையும் நான் எதிர்த்து, நகையாடி, வருகிறேன் என்பதைக் காணலாம். தலைவர்களைப்பற்றி, ஊர்களைப்பற்றி  இப்படியெல்லாம் உருவாக்கப்பட்டு மேடைகளில் உலவும் அசட்டுக்கதைகளை கடந்துசெல்வதே அறிவியக்கத்தின் அடிப்படை
இதை ஒரு கதையாக, நம்பிக்கையாக தொ.ப முன்வைத்திருந்தால், ஒரு நாவலில் இது வந்திருந்தால் அது வேறு.ஆய்வு என ஒன்று முன்வைக்கப்படும் என்றால் முதலில் தரவு, இரண்டாவதாக முறைமை தேவை. நம் ஆய்வுத்துறைகள் அனைத்துமே பாமரத்தனமான நம்பிக்கைகளாலும் சவடால்களாலும் நிறைந்துள்ளன. நாம் அதை மீட்டாகவேண்டும் என்னும் நிலையில் இன்றிருக்கிறோம்.
ஜெ

Thursday, April 14, 2016

அம்பேத்கர் பிறந்தநாள்

இன்று அம்பேத்கர் பிறந்தநாள்.
என் அம்மா மார்க்ஸ்-ஐயும் பெரியாரையும் அறிமுகப்படுத்திய அதே காலக்கட்டத்தில்தான் அம்பேத்கரையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் என்னுடைய டீன்ஏஜ் காலத்தில் என்னுடன் விவாதிப்பதற்கும், என் கருத்துக்களுடன் முரண்படுவதற்கும், கருப்புச்சட்டைக்காரர்கள் அல்லது செஞ்சட்டைத் தோழர்கள் மட்டுமே இருந்தார்கள். தமிழகத்தில் அம்பேத்கரிய- தலித்தியச் சிந்தனை வலுவாக வேரூன்றாத காலம்(90கள்) அது. அப்போதுதான் சில செடிகள் முளைவிட்டன. இப்போதும் ஒற்றை மரமாக மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். அது பெரும் ஆலமரமாக ஆகும் என்றும் நம்புகிறேன். பின் ஒரு காடாக.
கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே நான் அம்பேத்கரைப் பயில்கிறேன். அதற்கான போதாமைகள் என்னிடம் உண்டு. இருந்தாலும் கற்றுக்கொண்டுவிடலாம் என்றே நம்புகிறேன். நான் என் ஆழமான புரிதலுக்காக Annihilation of Caste - ஐ மறுபடி மறுபடி படிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
கடந்த சிலநாட்களாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் - முக்கியமாகத் தனித்தொகுதிகளின் வேட்பாளர்களை - பார்த்துக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக நேற்றைய தி.மு.கவின் தனித்தொகுதி வேட்பாளர்களில் பெரும்பாலோர் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மேலாண்மை பயின்றவர்கள். வெகு சிலருக்கே கல்வித் தகுதி குறிப்பிடப்படவில்லை. அவர்களில் சிலர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வெகு சிலரே பட்டம் பெறாதோராக இருக்கலாம்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய விஷயம் இது. நான் இதைக் கல்வி அளித்த விடுதலையிலிருந்து அதிகாரத்தை நோக்கிய நகர்வு என்றே நினைக்கிறேன்.


அம்பேத்கர் சொன்ன - கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் ! என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வோம். இப்போது கற்கிறோம், கற்பிக்கிறோம், ஒன்று சேர்கிறோம், அடுத்து வரும் காலங்களில் புரட்சி செய்யலாம். ஆயுதப்போராட்ட நிலைப்பாடுகள் எப்போதுமே உலகெங்கும் அழித்தொழிக்கப்பட்டே வந்திருக்கின்றன. எனவே நிகழவிருப்பது சமூக, பொருளாதார, அதிகாரப் புரட்சியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் அரசியல் புரட்சி என்பது படிப்படியாக அதிகாரத்தை அடைவதாகவே இருக்கும். அதற்கான களம் பறந்து கிடக்கிறது. ஆனால் செயல்பாட்டாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இப்போதைய தேவை களச்செயல்பாட்டாளர்கள்.
மார்க்சியத்தை அம்பேத்கர் விமர்சித்தார். அவர் முன்வைத்த அமைப்பு திறந்த பொருளாதார அமைப்புடன் நெருக்கமானது. பொருளாதார விடுதலை மூலம் சாதிய விடுதலையை முன்னெடுக்கும் முயற்சி. பெரியாரும் கூட ஒரு திறந்த பொருளாதார அமைப்பையே ஆதரித்தார். அதற்குக் காரணம் - அவர் ஒரு வெற்றிகரமான வியாபாரி என்பதுதான். அவர் எந்த ஒரு பொருளியல் அறிஞரையும் விட மிகுந்த அறிவு கொண்ட நடைமுறைப் பொருளாதாரவாதியும் கூட. பொருளாதார விடுதலை எப்படிப்பட்ட சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பெரியார், மார்க்சியத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் வழிகளையும், திறந்த பொருளாதார அமைப்பின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளையும் இணைத்து ஒரு புதுப்பாதையை உருவாக்கினார்.
இன்றைய தி.மு.க அல்லது வி.சி.க கொண்டிருக்கும் பொருளாதாரப் பார்வை அங்கே இருந்துதான் பெறப்பட்டது. ஒருபுறம் பொது விநியோகம், விவசாய சலுகைகள், கல்வி மற்றும் வேலையில் இடப்பங்கீடு இருக்கும் அதே நேரத்தில் மென்பொருள் நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து வேலைவாய்ப்பைப் பெருக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் - வாய்ப்புகளை மறுக்காதே.
அம்பேத்கர் தன் கல்வியின் வழியேயும், மேற்கத்திய –முக்கியமாக அமெரிக்க – அனுபவங்கள் மூலமும் பெற்ற அறிவின் வழியே அதே இடத்தை நோக்கி வந்தார். பௌத்த பொருளாதாரக் கூறுகளை-மரபார்ந்த இந்தியப் பொருளாதாரக் கூறுகளுடன் கலந்து, தான் கற்ற மேற்கத்திய திறந்த பொருளாதாரக் கொள்கைகளையும் அதனுடன் இணைத்துப் புதிய பொருளாதாரக் கோட்பாடுகளை முன் வைத்தார். அவர் ஒரு கல்விப்புலம் சார்ந்த ஆராய்ச்சியாளர் என்பதால் இரு கூறுகளை இணைப்பதிலும், அதன் மூலம் புதிய ஒரு தத்துவத்தை முன்வைப்பதிலும் சிரமங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலமும், அவர் கருத்துகளை உள்வாங்கும் அளவுக்குக் கல்வியறிவு கொண்ட மக்கள் திரளும் அவருக்குக் கிடைக்கவில்லை. பெரியாரின் நீண்ட ஆயுளும், காமராஜர், கருணாநிதி போன்ற அரசதிகாரச் செயல்பாட்டாளர்களும் அம்பேத்கருக்கு அமைந்திருந்தால் தலித்திய விடுதலை இன்னும் விரைவில் நிகழ்ந்திருக்கும். அப்போது, மார்க்சியத்தின் பொருளாதாரக் கூறுகளைத் தாண்டியும் சமூக விடுதலை என்ற பகுதியை அவர் கவனத்தில் கொள்ள வேண்டியதிருந்திருக்கும். “நடந்திருந்தால்” என்ற வார்த்தைக்கு வரலாற்றில் எந்த மரியாதையும் இல்லை. அம்பேத்கர் கனவுகண்ட சூழலுக்கு நெருக்கமாக வந்திருக்கிறோம். ஆனால், ஒடுக்கப்பட்டோர் இன்னும் முழுமையாகக் விடுதலை அடையவில்லை. அதை நோக்கிய பயணத்தில், நாம் -பெரியார் தனக்கென நிருபிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்காதது, அம்பேத்கர் - கம்யுனிசத்தோடு சேர்த்து மார்க்சியத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் கோட்பாடுகளையும் ஒதுக்கியது போன்று - அவர்கள் தவறவிட்ட இடங்களைக் கவனிப்போம். கற்றுக்கொள்வோம், கற்பிப்போம், சரி செய்வோம், முன்னேறுவோம்.
நமக்கு முன், மார்க்சியம் சமூக விடுதலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. திறந்த பொருளாதாரம் சமூக விடுதலையை விடத் தனி நபர் விடுதலையை முன்வைக்கிறது. நமக்குத் தேவை சமூக-தனிநபர் விடுதலைதான். இது அல்லது அது என்ற இருமையைத் தவிர்த்து அவரவருக்கான மானுட, சமூகத் தேவைகளைக் கவனிப்போம். எது சரி என்பதைவிட, எது தேவை என்பதையே ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறிய பின், சரி என்ற நிலைக்கு எதிர்காலத்தில் நகரலாம்.


இந்தப் படங்களைப் பாருங்கள் நண்பர்களே.
அம்பேத்கர் – மம்முட்டி நடித்த படம் -https://www.youtube.com/watch?v=yv6aU-_9xQ0
அம்பேத்கர் பற்றிய டாகுமெண்டரி -https://www.youtube.com/watch?v=uRbmGJrkbYs

Saturday, April 9, 2016

குடியம் பயணம் - தொல்குடிகள் இருந்த குகைகள்


இந்த வாரத்துக்குனு(ஏப்ரல் முதல் வாரம் 2016) ஏற்கனவே வச்சுருந்த பிளான் சொதப்பிருச்சு. செல்வபிரபு திடீர்னு குடியம் போவோம்னு சொன்னப்போ சரின்னு கெளம்பியாச்சு. வழக்கம் போல குருநாதர் செந்தில்வேல் ஓகே சொல்லிட்டார். கூடவே சுரேஷ்.


காலைல இளநியோட ஆரம்பிச்ச நாள் – வரும்போது இளநியோட முடிஞ்சது. சென்னைல இருந்து திருவள்ளூர், அங்கே இருந்து பூண்டி, அப்புறம் குடியம். போற வழில குடியம் எங்கே இருக்குனு கேட்டா யாருக்கும் தெரியல. பழைய கால குகை இருக்காமே அப்படின்னு கேட்டோம். ஓ.. கூடியமா அப்படின்னு கேட்டு வழி சொன்னாங்க. குடியம் கிராமவிலக்கிலிருந்து உள்ளே செல்ல மண் பாதை. இதுக்கு மேல் பைக் போகாது என்ற நிலைமைல நிறுத்திவிட்டு, நடக்க ஆரம்பித்தோம். அதைத் தாண்டிப் போகலாம்தான், ஆனால் பைக் காணமல் போக வாய்ப்பிருக்கு.
இந்த இடத்தில் ஒரு விஷயம், அந்த பகுதியில் சுத்தமா சிக்னல் இல்ல. அதுனால மேப்பும் வேலை செய்யாது.. குகை எங்க இருக்கு, எவ்வளவு தூரம் எதுவும் தெரியாது. என்ன ஆனா நமக்கு என்னனு நடக்க ஆரம்பிச்சோம். போற வழில ஒரு பள்ளம் தோண்டி வச்சிருந்தாய்ங்க. அதைத் தாண்டினா ஒரு வாட்ச் டவர். அதுல வலது பக்கம் திரும்பினோம். கொஞ்ச தூரம் போன உடனே, மலை இடது பக்கமா இருந்தது. அதுனால இடது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம். ஒத்தையடிப் பாதை. அது போய் முட்டிட்டா திரும்பி வந்து வேற பாதை. இப்படியே போயிட்டு இருந்தோம்.
அப்போ வழவழப்பான கற்கள் பரவிக் கெடக்கிறதப் பார்த்தோம். எடுறா கேமராவனு நிறைய போட்டோ எடுத்தோம். கருப்பா, வெள்ளையா, மஞ்சளா, வேற வேற அளவுல கற்கள் ஒவ்வொன்னும் அழகு. இந்தக் கற்களெல்லாம் குடியங்கிற இந்த ஊரைச் சுத்திக் கெடக்கு. நானும் செல்வாவும் கொஞ்சம் கற்களை எடுத்துக்கிட்டோம்.
1867ல ராபர்ட் ப்ருஷ்னு ஒரு வெள்ளைகார நிலவியலாளர் இந்தக் குகைகள கண்டு பிடிச்சு அறிவிச்சாராம். சில லட்சம் வருடங்களுக்கு முன்னாடி மனுஷன் இந்த மலைல வாழ்ந்திருக்கான். மனிதன் உணவுக்காக விலங்குக்களை வேட்டையாடத் தேவையான கற்கருவிகள் செய்ய ஏத்தது மாதிரி நிறையக் கற்கள் இங்கே இருந்ததுனால மனுஷன் இங்க தங்கி இருந்ததா சொல்றாங்க. அவங்க வாழ்ந்த குகையத்தான் நாங்க பார்க்கப் போயிருந்தோம்.


பொதுவா காட்டுக்குள்ள போகும்போது இடது பக்கமா போற பாதையத் தேர்ந்தெடுத்துப் போயிட்டே இருந்தா, முடிவுல ஏதாவது இடத்துக்கோ (?????) அல்லது கிளம்பின இடத்துக்கோ வந்துடலாம். அதுனால நாங்க போய்க்கிட்டே இருந்தோம். அப்போ ஒரு வண்டிப்பாதைல வந்து சேர்ந்தோம். அதுல நிறைய காலடித் தடம் இருந்தது. சரி நாம சரியாதான் போயிட்டு இருக்கோம்னு முடிவு பண்ணுனோம்.
கொஞ்ச தூரம் போன பின்னாடி, மூணு பேரு சரக்கைப் போட்டுட்டு இருந்தாங்க. இதே பாதைல 1.5 கி.மீ போங்க குகை வரும்னு சொன்னாங்க. போனோம். வந்தது.
அகலமான குகை. குளிர்ச்சியாக இருந்தது. மொத்த மலையுமே கடற்பாறைகளைப் போன்றே இருந்தது. நிறைய தேன் கூடுகள். இது சில கோடி வருசத்துக்கு முன்னாடி கடலாக இருந்து, நிலமாக ஆனது என்று செல்வா சொன்னார். அருமையான கற்கள். உருளைக் கற்கள் ஆற்றின் நீரோட்டத்தினால் வழவழப்பாக ஆவதாக நினைத்திருந்தேன். இயற்கையிலேயே அப்படி இருந்து எரிமலைக் குழம்பினால் வெளியே வந்து அப்படியே உறைந்து நிற்கும் கற்களைக் காண முடிந்தது.


இந்திய நிலப்பகுதிக்கு ஐந்தாயிரம் வருடம் என்பதெல்லாம் குறுகிய காலமே. ஆனால் இரண்டு லட்சம் வருடம் என்பது நீண்ட காலம். குடி-யம் என்ற வார்த்தையே குடி – கூடம் – கூட்டம் – மக்கள் திரள் என்ற பொருளில்தான் இருக்கிறது. குடியமர்வு என்ற வார்த்தையில் இருக்கும் குடியம் அதுதான் என்று நினைக்கிறேன். மக்கள் குடியமர்ந்த இடம். தமிழ் மொழி – என் அருமைத் தமிழ் மொழி. தொல்நிலம், தொல்மாந்தர் வாழ்ந்த இந்த இடத்தை ஒவ்வொரு மனிதரும் பார்க்கவேண்டும். முக்கியமா, இப்பகுதியில் ஏதேனும் தனிமம், கனிமம் கிடைப்பதாகத் தெரியும் முன்னாடிப் பார்த்துவிட வேண்டும். இல்லைனா, மதுரையின் சமணப்படுகைகள் காணாமப் போனது மாதிரி இதுவும் காணாமப் போயிடும். அப்புறம் நாம நினைச்சாலும் பார்க்க முடியாது.



தனியாகப் பயணம் போக ஏற்ற பகுதி அல்ல. குறைந்தது நான்குபேராகச் செல்வது நல்லது. பெண்கள் போவதாக இருந்தால் மிகக்கவனம் தேவை. தண்ணீர் நிறைய எடுத்துட்டுப் போங்க. பிளாஸ்டிக் பைகளை அல்லது பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். கொண்டு சென்றால் திரும்பி எடுத்து வந்துவிடுங்கள். உள்ளே நுழையும் போதே வாட்ச் டவர் இருக்கும். அங்கேயே இடதுபுறம் திரும்பினால் நல்ல பாதையில் சீக்கிரம் குகையை அடையலாம். வலது புறம் திரும்பினால் கற்கள் நிரம்பிய இடங்களைப் பார்க்கலாம். நிறையப் படங்கள் எடுக்கலாம். நினைவிற்காக கொஞ்சம் கற்களை எடுத்து வரலாம். ஆனால் இந்தப் பாதை சாகச விரும்பிகளுக்கானது.

Sunday, April 3, 2016

ப்ரசெல்ஸ், பாரிஸ் நினைவுகள் பகுதி இரண்டு

                அடுத்த ஐந்து நாட்களும் ஆபீஸ். வெள்ளி ராத்திரி நேரா கர்ட் து நார்ட் ஸ்டேஷன் போயாச்சு. அங்கே இருந்து உக்கார்ந்துகிட்டே பயணம் – நம்ம ஊர் முதல் வகுப்பு ஏ.சி சிட்டிங் மாதிரி. ஒரு ரூம் மாதிரி இடத்துல மொத்தம் ஆறு சீட் இருக்கும். எனக்கு ஜன்னல் சீட்டைக் கேட்டு வாங்கிருந்தேன். அதுதான் வெளிலே வேடிக்கை பார்க்க வசதி. இன்னொன்னு சைடுல தலைய சாய்ச்சுக்கிட்டு படுத்துக்கிட்டே போயிடலாம். ஆறு பேர்ல – எனக்கு எதிரே இருந்த ஒரு சீட் காலி. மிச்சம் நாலு சீட்லயும் காலேஜ் பொண்ணுங்க. யுரோ ரயில் - குரூப் பாஸ் வச்சிருந்தாங்க. ஒரே வகுப்பில் படிக்கிற பொண்ணுங்க. என்கிட்ட சகஜமா பேசிட்டு வந்தாங்க.
நான் அவங்க படிப்பைப் பத்தியும்பொதுவான விஷயங்களைப் பத்தியும் கேட்டுட்டுத் தூங்கிட்டேன். நடுராத்திரில முழிப்பு வந்துருச்சு. பார்த்தாஎன்னோட மடில தலை வச்சு ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கு. இன்னொரு பொண்ணு என்னோட கால்ல தலைய வச்சபடித் தரைலயும்எதிர்த்த மாதிரி இருந்த சீட்ல ஒரு பொண்ணு என்னை மாதிரி தூங்கிட்டு இருக்குஅதோட மடில இன்னொரு பொண்ணு தலை வச்சுத் தூங்கிட்டு இருக்கு. நான் எழுந்தா எல்லாரும் எழுந்திருக்க வேண்டியதுதான். கண்ணை மூடுனேன் – தூங்கினேன்.
காலைல ஜெர்மனி அன்புடன் வரவேற்றது. நேர அக்கா வீடுகுட்டிப் பசங்க கூட அடுத்த ரெண்டு நாள் ஒரே ஆட்டம். இடைல வீட்டுல செஞ்ச மான்கறிஎலும்பு சூப். சோறு+ரசம்+மான்கறி வறுவல். ஜெர்மனில மான்கறி ரெண்டு விதமா கிடைக்கும் – ஒன்னு டின்ல வருவது. இன்னொன்னு பச்சைக்கறி. பச்சைக்கறில ரெண்டு வகை இருக்கு. ஒன்னு – வளர்த்து வெட்டுனது. இன்னொன்னு – காட்ல திரியுறதச் சுட்டு அதைக் கறியாக்குறது. இந்த ரெண்டாவது ஐட்டத்தோட ரெண்டாவது ஐட்டம் இருக்குல்லஅதுதான் நான் விரும்பிச் சாப்பிடுறது.
அருமையான சூழல்லரெண்டு நாளும் மான்கறி சாப்பாடு. ஏன் இந்தியால மான்கறியத் தடை பண்ணி வச்சுருக்காங்கன்னு தெரியணும்னா அத நீங்க சாப்பிட்டுப் பார்த்திருக்கணும். அங்கே இருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குக் கொண்டுபோக மான்கறி டின்பன்னிக்கறி டின் வாங்கிக்கிட்டேன். ஏன்னாபிரான்ஸ்லயும் மான்கறி கிடைக்கிறது அபூர்வம் – அதுவும் காட்டு மான்கறி கிடைக்கிறது வாய்ப்பேயில்லை. ஆனா பாரிஸ்ல பச்சையான குதிரைக்கறி ரெண்டு இடத்தில கிடைக்கும். வாங்கி சமைக்கலாம். அதுவும் நல்லா இருக்கும். டேஸ்ட் என்னவோ மாட்டுக்கறி மாதிரித்தான் இருக்கும்.
ஞாயிற்றுகிழமை ராத்திரி 10 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். என்னோட ட்ரைன் நம்பர்ஆம்ஸ்டர்டாம் ட்ரைன் நம்பர் ரெண்டும் ஒரே நேரம்ஒரே பிளாட்பார்ம்ல வரும்னு ஸ்க்ரால் ஓட்டிட்டு இருந்துச்சு. நான் அது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். வண்டி வந்து நின்னது. யூரோ ரயில்ல TTR மாதிரி சில பேர் இருப்பாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி திருப்பி உள்ள ஏறி வருவாங்க. அவர்கிட்டப் போய் பாரிஸ் ட்ரைன் இதுவான்னு கேட்டேன். முதல் பெட்டி ஆம்ஸ்டர்டாம்அடுத்த ஆறு பாரிஸ் போகும்னு சொன்னாப்ள. என்னோட பொட்டிய தூக்கிட்டு பின்னாடிப் பெட்டிக்கு ஓடுனேன். சரியா உள்ள போறேன் கதவு மூடிருச்சு. என்னோட இடத்துக்குப் போய் படுத்துட்டேன்.
காலைல மணிக்கு எழுந்தேன். TTR வந்தார்பத்து வருசத்துக்கு ஒரு தடவை நடக்குற மெயின்டனன்ஸ் வேலையால பாரிஸ் போக 10 மணியாகும்னு சொன்னாப்ள. அய்யயோ நான் பத்துமணிக்கு ஆபிஸ்ல இருக்கணுமே அப்படின்னேன். மன்னிச்சுக்கோங்க அப்பிடின்னு பலமுறை சொன்னார். அவர் ரூம்ல இருந்து கொஞ்சம் பிஸ்கட்சாக்லேட் குடுத்தாரு. தின்னுட்டு, 200 யூரோ மிச்சம் பண்றேன்னு என்னைய இந்தச் சிக்கல்ல மாட்டிவிட்டானே அந்த டிக்கெட் விக்கிற தம்பி அவனத் திட்டிட்டுமறுபடி தூங்கிட்டேன். வேறென்ன செய்யுறது.

பத்துமணிக்கு கர்ட் டு நார்ட். மெத்ரோவை புடிச்சு சேட்டியோன் மன்ரோக் போய்பஸ் புடிச்சு ரூம் போய் அப்புறம் ஆபிஸ் போனப்போ மணி 11. நண்பர் எஸ்நான் காணாமப் போயிட்டேன்னு கதிகலங்கிப் போய்ட்டாப்ள. 

அப்புறம் வேலைதான். தினசரி சாயங்காலம் பாரிஸச் சுத்துறது. மறுபடி வேலை.
நாங்க இந்தியா கிளம்புற நாள் வந்தது. நான்நண்பர் எஸ் அப்புறம் நண்பர் எம் மூணுபேரும் பாரிஸ்ல இருந்து ப்ரசெல்ஸ்அங்கேயிருந்து சென்னை வரணும். சனிக்கிழமைக் காலைல சாப்பிட்டு கிளம்பினோம். எடை செக் பண்ற இடத்துல ஆரம்பிச்சது சனி. என்னோடது ஆறு கிலோ அதிகம். போதுவா நான் சும்மா போயிட்டு சும்மா வாரதுதான் பழக்கம். ஆனால்ஏதோ ஒரு ஞாபகத்துல 5+3 லிட்டர் போர்டோ ஒயின். கிலோ பாதாம், 3 கிலோ சாக்லேட்மான் பன்றிக்கறினு வாங்கிக் குமிச்சுட்டேன். இது போக கிப்டா வந்த சாக்லேட் வேற பணம் 600 யூரோ கட்டணும்னு சொன்னதா ஞாபகம். இப்போ என்ன பண்றது?
மான்பன்றிக்கறிஒயின்கிப்ட் சாக்லேட் தவிர எதைவேனா இழக்கலாம். ஏன்னா இதெல்லாத்தையும் கொண்டு போயே ஆக ஒரு காரணம் இருந்தது. சாக்லேட் பாதி, 3 லிட்டர் ஒயின், 1 கிலோ பாதாம் எல்லாத்தையும் தூக்கிக் குப்பைக்கூடைல போட்டேன். இதையெல்லாம் வெளில எடுக்கும் போது என்னோட புத்தம் புது ஷூவ எடுத்து ஓரமா வச்சேன். நான் பொருளெல்லாம் எடுத்துக் குப்பைல போட்ட அடுத்த நிமிஷம் ஒரு ஆப்பிரிக்கர் எல்லாத்தையும் ஒரு தள்ளுவண்டில எடுத்து வச்சுக்கிட்டுப் போயிட்டே இருந்தாப்ள. திரும்பிப் பார்க்குறேன் ஷூவக் காணோம். எவனோ ஆட்டையப் போட்டுட்டான். ஆஹா அஹஆகஹா. போகட்டும்னு எடையைப் போட்டுபொட்டிய உள்ளார தள்ளிட்டு ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கௌண்டர் போனா நிக்கிறாய்ங்க ஒரு பெரிய க்யு.
மணி ஏழரை. எங்க ப்ளைட் 8.30க்கு. அதைப் பிடிச்சு வந்து ப்ரசெல்ஸ் ஏர்போர்ட்ல ஜெட் ஏர்வேஸ 10.45 க்குப் பிடிக்கணும். நிக்கிறவங்கள்ள பெரும்பாலும் கருப்பர்கள். எனக்கு ஏற்கனவே இதுபோல ஒரு அனுபவம் இருக்கு. ஆனா எஸ் மற்றும் எம்-க்குக் கிடையாது. என்னான்னா கருப்பர்கள் செக்யூரிட்டி முடிக்க வழக்கமா ஆகிறத விட மூணு மடங்கு நேரம் ஆகும். அவங்களோட உருவம் நம்மளைப்போல மடங்குஅதுனால உடை மூணு மடங்கு இருக்கும். ஒவ்வொருத்தரும் கிலோ இரும்பு நகையப் போட்ருப்பாய்ங்கஅது மெட்டல் டிடெக்டர்ல கத்திகிட்டே இருக்கும்ஒவ்வொரு கத்துக்கும் உடம்போட எதோ ஒரு பகுதில இருந்து ஒவ்வொரு நகையா கழட்டுவாய்ங்கஒவ்வொருத்தரும் கைல எவ்வளவு எடை எடுத்துட்டுப் போகலாமோ அதுமாதிரி ரெண்டுமடங்கு கொண்டுட்டு வருவாய்ங்கஅதைக் கீழ போட சொன்னாசண்டைதான் போடுவாய்ங்ககடைசியா ஒன்னு – ஒவ்வொரு அம்மாவும் கொறஞ்சது ரெண்டு பிள்ளையாவது வச்சுருக்கும் – அந்தப் பிள்ளைகள் மேல உயிரையே வச்சுருப்பாய்ங்க. ஆனா அந்தப் பிள்ளைங்க சுத்திலும் இருக்க எல்லாரையும் உயிர வாங்கும். வெள்ளைக்காரப் பயவுள்ளைக மண்ணு மாதிரி இருக்கும்.
அடுத்து என்ன செய்யுறது - வரிசைல நிக்க வேண்டியதுதான். நாங்க போக வேண்டிய ப்ளைட் எங்க கண்ணு முன்னாடிப் பறந்து போயுடுச்சு. அதோ போகுதுல்ல அதுதான் நாம போகவேண்டிய ப்ளைட்னு சொன்னேன். அவ்வளவுதான். நம்ம மக்களோட புலம்பல் ஆரம்பிச்சது. ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ்ல இருந்து தொடர்ந்து டவுன்பஸ் மாதிரி வண்டி விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க. அடுத்த வண்டில ஏத்தி ப்ரசெல்ஸ்ல இறக்குனாய்ங்க. மணி 11.15 AM. பியர்- ல இருந்து பியர்-வந்தப்போ மணி 11.30 AM. நேர ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம், 10.45 AMக்கே வண்டி போயிடுச்சு. நீங்க எங்க பேசெஞ்ஜர் இல்ல தம்பிகளாபோயி ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிசரப் பாருங்கன்னாங்க.
அங்கிருத்து ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிஸ். ஒரே ஒரு பொண்ணு சிவனேன்னு உட்கார்ந்து இருந்தது. இது எங்களோட தப்பு இல்லநீங்க சரியான நேரத்துக்கு பாரிஸ்ல எங்கள ஏத்திஇங்க கொண்டு வரல. அதுனால வேற ஏற்பாடு பண்ணும்மா அப்படின்னேன். அந்தப் புள்ளைக்குக் கொஞ்சோண்டு இங்கிலீஷ்தான் தெரியும் போல. தந்தி அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. சரின்னு சொல்லி நாளைக்குத்தான் உங்களை அனுப்ப முடியும். லண்டன் போயிட்டு அங்கேருந்து சென்னை போற மாதிரி ஏற்பாடு பண்றேன்னு என்கிட்ட சொன்னுச்சு. இங்கபாரு ஆத்தாநாங்க காமன்வெல்த் சிட்டிசைங்கஎன்கிட்ட செங்கன்தான் இருக்குபிரிட்டிஷ் விசாவோ, USA விசாவோ கிடையாது. அதுனால எங்கள நீ அங்க அனுப்பி ட்ரான்சிட் பண்ணுறது சாத்தியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். மூடிட்டு சொன்னத செய்யினு சொல்லுச்சு. அந்த புள்ளைக்கு என்கூட வந்த பயலுக சப்போர்ட். ஏங்க அவிங்களே போக சொல்றாய்ங்க நீங்க என் வில்லங்கம் பேசுறீங்கசீக்கிரம் சென்னை போகணும்மாமனார்மாமியார்பொண்டாட்டியெல்லாம் ஏர்போர்ட் வந்துருவாங்கஎன்ன செய்யிறது? blablabla.....
ஆள விடுங்கடா சாமிகளா. எனக்கு அம்மாஅப்பாவ விட்டா ஒருத்தரும் இல்லைஆனா ஒரு நாளைக்கு ரெண்டு தடவபோன்ல நான் பேசலைன்னா எங்கம்மா கெளம்பி இங்கேயே வந்துருவாங்க. அதுனால நான் எப்போ போனாலும் ஒண்ணுதான்னு சொல்லிட்டேன். ஏர்போர்ட்-உள்ளேயே இருக்குற ஷெரட்டன் ஹோட்டல்ல ஆளுக்கொரு ரூம் குடுத்தாங்க. மறுபடி இமிக்ரேஷன் டு ஐரோப்பா – அந்த ஆபிசர் ஏன் வெளில போறீங்கனு கேட்டார். நாங்க எங்க கதைய சொன்ன உடனேநான் இந்த ஏர்போர்ட்ல 20 வருசமா வேலை பார்க்குறேன்இதுவரை ஷெரட்டன் ஹோட்டல்ல தங்கினது கிடையாது. வாழ்த்துகள் அப்படின்னு சொன்னாப்ள. மிச்ச ஏர்போர்ட் ஆபீசர்களை ஒப்பிட்டாப்ரசெல்ஸ் ஆபீசர்கள் அருமையான நபர்கள் – ரிலாக்ஸா இருப்பாங்க. (அங்கே எதுக்குக் குண்டு வச்சானுக?  )
ஷெரட்டன் – அருமையான ஹோட்டல். அன்னைக்கு நிலைமைல ரூம் இல்லாததால 650 யூரோ ரூம் ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா. சாப்பாடு வேற தனி. எல்லாம் ப்ரீ. நான் அப்படியே ஒரு ரவுண்டு ப்ரசெல்ஸ் போகலாம்னு சொன்னேன். எஸ்எம்மும் என்னைப் பார்த்த பார்வைல- வேணாம்னு முடிவு பண்ணினேன். ஏர்போர்ட் முழுக்க சுத்துனேன். அப்புறம் ராத்திரி ஒரு முறை ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபீஸ் போய் உறுதி பண்ணினேன். காலைல எட்டு மணிக்கு நண்பர் எம் ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் மூலம் லண்டன்ஒன்பது மணிக்கு நானும்நண்பர் எஸ்சும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் லண்டன். அப்படித்தான் அவங்க ரிசெர்வ் பண்ணி வச்சு இருந்தாங்க.
காலைல நண்பர் எம் முதல்ல கிளம்பினார். டிக்கெட் வாங்கினார்உள்ளே போனார்காணாமலானார். அடுத்த அரை மணியில்நாங்கள் டிக்கெட் வாங்கினோம்பிரிட்டிஷ் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம்பாஸ்போர்ட்-விசா செக் பண்ணினார்கள்பொடனியில் அடித்து விரட்டினார்கள். நான் நேற்றுச் சொன்ன அதே காரணம். கலங்கிய கண்களுடன்பாவமன்னிப்பு சிவாஜி மாதிரி நண்பர் எஸ் ஒரு நடை நடந்து என்னுடன் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கவுன்ட்டர் வந்தார். ஊருக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பேயில்லைனு வேற என்கிட்டச் சொன்னார். கவலைப்படாதீங்க நம்மள மாதிரி ஆளையெல்லாம் இங்க வச்சுக்க மாட்டாய்ங்க - எப்படியும் வெரட்டி அடிசுருவாய்ங்க. கொஞ்சம் பொறுங்கனு சொன்னேன்.
நேரே பிசினெஸ் கிளாஸ் கவுன்ட்டர் போனேன் – அங்கே ஒரு பய நிற்கமாட்டான். என்னுடைய ஒட்டு மொத்தக் கோபத்தையும் காட்டினேன். நேற்றே இப்படித்தான் நடக்கும் என்று நான் சொன்னதையும்அதை மீறி நீங்க வெட்டி வேலை செஞ்சு வச்சிங்க. இருந்தாலும் எங்களைச் சென்னை அனுப்ப இன்னும் ஒரு வாய்ப்புத் தரேன்அதுலயும் சொதப்பினா கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பேன்னு சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்துல அபுதாபி போறதுக்கு என் கையில இரண்டு டிக்கெட் கொடுத்தாய்ங்க. உள்ள போன நண்பர் எம்க்கு ஏதாவது ஆச்சுன்னாலும் நீங்க சட்டப்படி எங்களைச் சந்திக்க வேண்டியது வரும்னு சொன்னேன். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அவர் இந்நேரம் லண்டன் போயிட்டு இருப்பார்னு சொன்னாய்ங்க. எங்க ப்ளைட் இன்னும் 40 நிமிசத்துல கெளம்பும்சீக்கிரம் போங்கனு சொன்னாய்ங்க.
எங்க கைல எதுவும் பொருள் இல்லஅதுனால எல்லாம் உடனே கிளியர் பண்ணி உள்ள போனாநாங்க போற வழில நண்பர் எம் - உள்ளார இருக்க ப்ரசெல்ஸ் கவுன்ட்டர்ல கதறிக்கிட்டு இருந்தாப்ள. ப்ளைட் உள்ளார இருந்து பொடனில அடிச்சு எறக்கி இருக்காய்ங்க. ஆப்பிரிக்கா ட்ரான்சிட் வராத மாதிரி ப்ளைட்ல கெளம்பி வாயான்னு சொல்லிட்டு நாங்க ப்ளைட் ஏறுனோம். அபுதாபி வந்தோம். அங்கே ஒரு பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம ஊருக்கு வந்துட்டோம்னு தோணுச்சு.
அங்கே இருந்து சென்னை வந்தோம். நண்பர் எம் ப்ரசெல்ஸ்ல இருந்து நாலுமணிநேரம் கழிச்சுக் கிளம்பிம்யுனிக்அங்கே மணிநேரம் ட்ரான்சிட். அங்கே இருந்து டெல்லி. டெல்லி ஏர்போர்ட்ல பொட்டிய அவங்களே சென்னை அனுப்புவாய்ங்கனு நெனைச்சு டொமஸ்டிக் வந்துஅவிங்ககிட்டக் கேட்டுட்டுஅவிங்க நீதான்யா எடுத்துக்கிட்டு வரணுனு சொல்லிவண்டியப் புடிச்சு மறுபடி திரும்பப் போய் எடுத்துக்கிட்டு வந்து அதுனால ப்ளைட்ட விட்டுஅடுத்த ப்ளைட்ட புடிச்சு சென்னை வரும் போது ரெண்டு நாள் ஆயிடுச்சு.
ஒரு பயணத்துல எல்லாமே தப்பா நடக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்க இன்னொரு விஷயமும் நடந்தது.
இதெல்லாம் நடந்து ரெண்டு நாள்லஎன்னோட போட்டோ எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி வச்சுருந்த என்னோட கம்ப்யூட்டர்பேக்கப் எடுத்து வச்சுருந்த கார்த்தியோட கம்ப்யூட்டர் எல்லாம் ஒரே நேரத்துல பார்மேட் ஆகி என்கிட்ட ஒரு போட்டோ கூட இல்லாம போச்சு. அதுனால என்னவேறெந்தப் பயணத்தை விடவும் இதோட நினைவு மட்டும் அப்படியே இருக்குவேறென்ன வேணும்?