Thursday, August 1, 2013

கதிரேசன் செட்டியாரின் காதல் - மா.கிருஷ்ணன்



மா. கிருஷ்ணன் ஒரு சூழலியலாளர். காலச்சுவடின் வெளியீடான மழைக்காலமும் குயிலோசையும்  (தொகுப்பாளர்: தியடோர் பாஸ்கரன்). பறவைகளும் வேடந்தாங்கலும் (பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன்) ஆகிய புத்தகங்களைப் படித்தபோதே இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் இருந்தது. மற்ற இரண்டு புத்தகங்களும் தமிழில் இருக்கும் மிக முக்கியமான சூழலியல் புத்தகங்கள்.

சூழலியல் புத்தகங்கள் இரண்டு வகையாக எழுதப்படுகின்றன. ஒன்று வெறும் புத்தக அறிவுடன் எழுதப்படும் Desk Work . மற்றொன்று சூழலியல் செயல்பாட்டாளர்களால் எழுதப்படுபவை.

மா.கிருஷ்ணன் இரண்டாம் வகையை சேர்ந்தவர். புத்தகம் எழுதுவது, உயிரினங்களைப் படம் எடுத்தல், படங்களை வரைதல், இலக்கியங்களில் இருந்து பெயர்களை மறு உபயோகப் படுத்துவது என்று அவர் நேரடி அனுபவங்களை எழுதக்கூடியவர்.

இப்போது கதிரேசன் செட்டியாரின் காதலுக்கு வருவோம்.இது ஒரு துப்பறியும் கதை.

கதிரேசன் செட்டியாரின் தோட்டவீட்டில் அவரின் வேலைக்காரன் கொலை செய்யப்படுகிறான். காவலுக்கு இருக்கும் கொம்பை நாயும் கொல்லப்படுகிறது. அதே நேரம் கோவில் நகை திருடு போகிறது. போலீஸ் வருகிறது, அவர்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்த விசாரணை முடிவில் யார் குற்றவாளி என்று தெரிகிறது.

பொதுவாக துப்பறியும் நாவல்களுக்கு என்று ஒரு வரை முறை இருக்கிறது.

-நேரடியான கதை.
-குற்றம் தெளிவானதாக அதே சமயம் எல்லாக் கதைமாந்தர் மேலும் வாசகனுக்கு சந்தேகம் வரவேண்டும்.
-Detail - மிக முக்கியம்.
-கதை உள்ளே செல்லச் செல்ல சந்தேகம் எல்லோர் மேலும் வர வேண்டும்.
-முடிவை நெருங்க நெருங்க சந்தேகம் ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கியோ அல்லது குழுவை நோக்கியோ திரும்ப வேண்டும்.
-இறுதியில் குற்றவாளி பற்றிய - யாரும் எதிர்பாராத ஒரு முடிவு வேண்டும். (ஆனால் அதற்கான குறிப்பு நாவலில் முதலிலேயே - முடிந்தால் முதல் அத்தியாயத்திலேயே இருக்க வேண்டும்.)

இந்த நாவல் மேற்கொண்ட விசயங்கள் அனைத்தும் கொண்ட ஒன்று.

வழக்கமான துப்பறியும் கதைகளில் விசேச நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் எல்லாவற்றையும்  தீர்த்து வைப்பார் . அதுதான் இருப்பதிலேயே மோசமான அணுகுமுறை. (sherlock holmes போல).

இதில் கொம்பை நாயின் படம் ஒன்று அட்டையில் உள்ளது, அது மா.கிருஷ்ணனே வரைந்தது. அதே போல கொம்பைக் குட்டியை வளர்க்கும் முறை, உணவு முறை, நாய் இறந்தால் கிடக்கும் நிலை இவற்றை சரியாகச் சொல்லி இருப்பார். இது இங்கே இப்போது கதை/ இலக்கியம் எழுதும் பலரும் செய்யாதது. மற்றொன்று கதையில் இறுதி வரியில் தான் கதையே இருக்கிறது. நாவலின் தலைப்பும் கூட அங்கே தான் ஆரம்பிக்கிறது. அது வாசகனை கதையின் முடிவுக்குப் பிறகும் உள்ள கதையை யோசிக்கச் செய்கிறது. அது ஒரு நல்ல துப்பறியும் நாவலின் இலக்கணம்.

நாவலில் குறை என்றால், எல்லோரும் பிராமண பாஷையைப் பேசுவது. அதிலிருந்து நடைமுறைத் தமிழுக்கு மாறுவது, மீண்டும் பிராமண பாஷைக்கு மாறுவது. இனிவரும் பதிப்புகளில்(?) யாரேனும் இந்தக் குறையைச் சரி செய்தால், இன்னும் பலரால் வாசிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்து கதை நடக்கும் காலம்: அது நிச்சயமாக 1989 அல்ல. அதை 1940-1950 க்குள் என்று வைத்து இருக்கலாம். கதை மாந்தர் மொழி,களம், வாகன வசதிகள் எல்லாம் அதையே சொல்கின்றன. இது ஒரு மிகப் பெரிய குறை.

நிச்சயமாக இது தமிழில் இருக்கும் சரியான (!) துப்பறியும் நாவல்.

வெளியீடு: மதுரை பிரஸ்

No comments:

Post a Comment