Monday, October 1, 2012

சொல்வனத்தில் வந்த என் கவிதைகள்

இரவின் பொய்யாமழை

நேற்றைய இரவின் இறுதிப்பக்கத்தில்
தவளைகள் கத்தாத பெருமழை பெய்தது.

யாருமே நனையாத,
எவருக்குமே விருப்பமற்ற,

கழுவியதைக் கழுவி
மேலெழும்
மழை என்பது -
மழை மட்டுமே
என்பதை ஒவ்வொரு துளியாய்ச்
சொல்லிச்சென்றது
எவருக்கும் பெய்யாத
மாநகரின் மழை.

நிகழ்வினைத் தேர்ந்தெடுத்தல்

ஒவ்வொரு முறையும்
கடந்த காலம் ஒன்றின்
எழுதப்படாத பக்கமாய்
இருக்கிறது நிகழ்வு.

அது நிகழ்வேன்பதற்காக
மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.

ஒவ்வொருமுறையும்
தவிர்த்த நிகழ்வுகள்
பெரும் பட்டியலாகின்றன.

இறுதியில்,
எம்முன் விழும் எந்த இரண்டையும் விட
மூன்றாவது ஒன்றே 
சரியானதாய் இருக்கிறது.

சொல் வழியும் உதிரம் 

சொல்லப்படா சொற்களால் நிறையும்
சொல்லின் உலகம்
நிறைந்தும் நிறையாமலும்
எஞ்சி இருக்கிறது.

நாவோன்றின் ஒற்றைப்பிறழ்வில்
இருக்கிறது
சொல்லொன்றின் வாழ்வும் இறப்பும்.

இறந்துவிட்ட சொற்களின்
நாற்றத்தால்  நிறைகிறது
நினைவெனும் வெளி.

பிறக்காமலேயே இறந்துவிட்ட
சொல்லின் வாசம்
உடல் அறியா நடுவழி துப்பும்
உதிரத்தத்தின் வாசத்தை
ஞாபகமூட்டும்.

மிச்சம் இருக்கும் சொற்கள்
அதனதன் வழியில்
இருந்தும் கலந்தும்
பிரிந்தும் வளர்ந்தும்
கரைந்தும் போகக்கூடும்

ஒரு உயிரின் விடைபெறுதல் போல.


நன்றி : சொல்வனம் - http://solvanam.com/?p=18986

No comments:

Post a Comment