Wednesday, August 25, 2010

மனநல மருத்துவர் - மச்சடோ டி ஆசிஸ்

நீங்கள் எப்போதாவது ஒரு மனநிலை பிறழ்ந்தவராக உணர்ந்ததுண்டா?
அல்லது
பிறரை அப்படி உணர்ந்ததுண்டா?
அல்லது
சமூகம் அப்படி இருப்பதாக உணர்ந்ததுண்டா?

ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது.

மச்சடோ டி ஆசிஸ் எழுதிய மனநல மருத்துவர் என்ற கதையைப் படிக்கும் பொது நாம் ஒரு பழக்கப் பட்ட உலகில் வாழ்வதையே உணர்வோம்.

சீமோன் ஒரு மருத்துவர். அவருக்கு உளவியல் மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு அதைக் கற்கிறார். பின் ஊரில் இருக்கும் பைத்தியங்களைப் பராமரிக்க நகரசபை உதவியுடன் ஒரு மனநல விடுதியை(கிரீன் ஹவுஸ்) ஆரம்பிக்கிறார். தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக யார் பைத்தியம் என்பதைத் தீர்மானிக்க ஒரு விதியைக் கண்டுபிடிக்கிறார்.

விதி ஒன்று : அது யார் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு மனநலக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியிடம் கோபப் படுவது, பிறரைப் புகழ்வது என எல்லாமே மனநோய்க்குறிகள் என்று ஊரில் உள்ள முக்கால்வாசிப் பேர் கிரீன் ஹௌசிற்கு கொண்டு வரப் படுகின்றனர். அவருக்கு எதிராகப் புரட்சி வெடித்துக் கிளம்புகிறது. "வதங்கிய கோட்டைகள்" என்று அழைக்கப் படும் அவர்கள் நகர சபையைக் கைப்பற்றினாலும் அவர்களுக்கு ஒரு பைத்தியக்கார விடுதி தேவையாய் இருக்கிறது. புரட்சிக்கு எதிரான புரட்சி வெடித்து புது ஆட்சி வர, அந்த நேரம் பார்த்து டாக்டரின் கொள்கையும் மாறிவிடுகிறது.

விதி இரண்டு: யாரெல்லாம் நேர்மை, வாய்மை, பகுத்தறிவுடன் உள்ளார்களோ அவர்கள் எல்லாம் மனநோயாளிகள்.
இதன் படி சிலரே விடுதியில் அடைக்கப்படுகின்றனர்.120 வருடங்களுக்கு முன்னும் கூட சிலரே இந்தக் குணாதிசயங்களுடன் இருந்துள்ளனர் :) அதையெல்லாம் அவர்கள் கைவிடும்வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒவ்வொருவரும் எப்படி தங்கள் கொள்கைகளைக் கைவிடுகின்றனர் என்பதை மச்சடோ மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்.

இறுதியில் டாக்டர் மறுபடியும் தன தேடல் வழியே புது விதியைக் கண்டடைகிறார். அது என்ன என்பதையும் அதன் விளைவு என்ன என்பதையும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பகடியில் பலவிதம், இதில் வரிக்கு வரி பகடிதான். கதையில் உலாவும் எல்லோரும் நம்மை எதோ ஒரு இடத்திலாவது பிரதிபலிப்பது மச்சடோவின் சாதனை. ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களை நூறு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு மனிதன் பகடி செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. இத்தாகூய் நகரத்தை நாம் வாழும் சமூகமாகவும், நகரசபை நம்மை நிர்வாகம் செய்யும் அரசியல் அமைப்புகளாகவும் கொண்டால், நாம் எல்லா சமயங்களிலும் நோயாளியாகவும், டாக்டராகவும் வாழ்வது புரியும். ஒவ்வொரு முறை பிறரை நோயாளிகளாக உணரும் பொது நாம் விடுதலை பெற்றதாய் உணர்கிறோம். அதே நேரம் நாம் நோயாளியாவது தவிர்க்க முடியாததாகிறது. பெரும்பாலும் உண்மையை உணரும்போது மரணம் நமக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணரலாம். சமூகம், மக்கள், புரட்சி, மருத்துவம், ஆராய்ச்சி, தத்துவம், பக்திஇவற்றைப் பகடி செய்து இந்த உண்மையைச் சொல்வதில் மச்சடோ பெரும் வெற்றி பெற்றுவிட்டார்.

வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்திருப்பதால் சில இடங்களில் வாசிக்கக் கடுமையாய் இருக்கிறது என்றாலும், கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தின் பெயர் : மனநல மருத்துவர்
எழுதியவர் : மச்சடோ டி ஆசிஸ்
மொழிபெயர்த்தவர் : ராஜகோபால்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 70 ருபாய்

No comments:

Post a Comment