Sunday, April 3, 2016

ப்ரசெல்ஸ், பாரிஸ் நினைவுகள் பகுதி இரண்டு

                அடுத்த ஐந்து நாட்களும் ஆபீஸ். வெள்ளி ராத்திரி நேரா கர்ட் து நார்ட் ஸ்டேஷன் போயாச்சு. அங்கே இருந்து உக்கார்ந்துகிட்டே பயணம் – நம்ம ஊர் முதல் வகுப்பு ஏ.சி சிட்டிங் மாதிரி. ஒரு ரூம் மாதிரி இடத்துல மொத்தம் ஆறு சீட் இருக்கும். எனக்கு ஜன்னல் சீட்டைக் கேட்டு வாங்கிருந்தேன். அதுதான் வெளிலே வேடிக்கை பார்க்க வசதி. இன்னொன்னு சைடுல தலைய சாய்ச்சுக்கிட்டு படுத்துக்கிட்டே போயிடலாம். ஆறு பேர்ல – எனக்கு எதிரே இருந்த ஒரு சீட் காலி. மிச்சம் நாலு சீட்லயும் காலேஜ் பொண்ணுங்க. யுரோ ரயில் - குரூப் பாஸ் வச்சிருந்தாங்க. ஒரே வகுப்பில் படிக்கிற பொண்ணுங்க. என்கிட்ட சகஜமா பேசிட்டு வந்தாங்க.
நான் அவங்க படிப்பைப் பத்தியும்பொதுவான விஷயங்களைப் பத்தியும் கேட்டுட்டுத் தூங்கிட்டேன். நடுராத்திரில முழிப்பு வந்துருச்சு. பார்த்தாஎன்னோட மடில தலை வச்சு ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கு. இன்னொரு பொண்ணு என்னோட கால்ல தலைய வச்சபடித் தரைலயும்எதிர்த்த மாதிரி இருந்த சீட்ல ஒரு பொண்ணு என்னை மாதிரி தூங்கிட்டு இருக்குஅதோட மடில இன்னொரு பொண்ணு தலை வச்சுத் தூங்கிட்டு இருக்கு. நான் எழுந்தா எல்லாரும் எழுந்திருக்க வேண்டியதுதான். கண்ணை மூடுனேன் – தூங்கினேன்.
காலைல ஜெர்மனி அன்புடன் வரவேற்றது. நேர அக்கா வீடுகுட்டிப் பசங்க கூட அடுத்த ரெண்டு நாள் ஒரே ஆட்டம். இடைல வீட்டுல செஞ்ச மான்கறிஎலும்பு சூப். சோறு+ரசம்+மான்கறி வறுவல். ஜெர்மனில மான்கறி ரெண்டு விதமா கிடைக்கும் – ஒன்னு டின்ல வருவது. இன்னொன்னு பச்சைக்கறி. பச்சைக்கறில ரெண்டு வகை இருக்கு. ஒன்னு – வளர்த்து வெட்டுனது. இன்னொன்னு – காட்ல திரியுறதச் சுட்டு அதைக் கறியாக்குறது. இந்த ரெண்டாவது ஐட்டத்தோட ரெண்டாவது ஐட்டம் இருக்குல்லஅதுதான் நான் விரும்பிச் சாப்பிடுறது.
அருமையான சூழல்லரெண்டு நாளும் மான்கறி சாப்பாடு. ஏன் இந்தியால மான்கறியத் தடை பண்ணி வச்சுருக்காங்கன்னு தெரியணும்னா அத நீங்க சாப்பிட்டுப் பார்த்திருக்கணும். அங்கே இருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குக் கொண்டுபோக மான்கறி டின்பன்னிக்கறி டின் வாங்கிக்கிட்டேன். ஏன்னாபிரான்ஸ்லயும் மான்கறி கிடைக்கிறது அபூர்வம் – அதுவும் காட்டு மான்கறி கிடைக்கிறது வாய்ப்பேயில்லை. ஆனா பாரிஸ்ல பச்சையான குதிரைக்கறி ரெண்டு இடத்தில கிடைக்கும். வாங்கி சமைக்கலாம். அதுவும் நல்லா இருக்கும். டேஸ்ட் என்னவோ மாட்டுக்கறி மாதிரித்தான் இருக்கும்.
ஞாயிற்றுகிழமை ராத்திரி 10 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். என்னோட ட்ரைன் நம்பர்ஆம்ஸ்டர்டாம் ட்ரைன் நம்பர் ரெண்டும் ஒரே நேரம்ஒரே பிளாட்பார்ம்ல வரும்னு ஸ்க்ரால் ஓட்டிட்டு இருந்துச்சு. நான் அது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். வண்டி வந்து நின்னது. யூரோ ரயில்ல TTR மாதிரி சில பேர் இருப்பாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி திருப்பி உள்ள ஏறி வருவாங்க. அவர்கிட்டப் போய் பாரிஸ் ட்ரைன் இதுவான்னு கேட்டேன். முதல் பெட்டி ஆம்ஸ்டர்டாம்அடுத்த ஆறு பாரிஸ் போகும்னு சொன்னாப்ள. என்னோட பொட்டிய தூக்கிட்டு பின்னாடிப் பெட்டிக்கு ஓடுனேன். சரியா உள்ள போறேன் கதவு மூடிருச்சு. என்னோட இடத்துக்குப் போய் படுத்துட்டேன்.
காலைல மணிக்கு எழுந்தேன். TTR வந்தார்பத்து வருசத்துக்கு ஒரு தடவை நடக்குற மெயின்டனன்ஸ் வேலையால பாரிஸ் போக 10 மணியாகும்னு சொன்னாப்ள. அய்யயோ நான் பத்துமணிக்கு ஆபிஸ்ல இருக்கணுமே அப்படின்னேன். மன்னிச்சுக்கோங்க அப்பிடின்னு பலமுறை சொன்னார். அவர் ரூம்ல இருந்து கொஞ்சம் பிஸ்கட்சாக்லேட் குடுத்தாரு. தின்னுட்டு, 200 யூரோ மிச்சம் பண்றேன்னு என்னைய இந்தச் சிக்கல்ல மாட்டிவிட்டானே அந்த டிக்கெட் விக்கிற தம்பி அவனத் திட்டிட்டுமறுபடி தூங்கிட்டேன். வேறென்ன செய்யுறது.

பத்துமணிக்கு கர்ட் டு நார்ட். மெத்ரோவை புடிச்சு சேட்டியோன் மன்ரோக் போய்பஸ் புடிச்சு ரூம் போய் அப்புறம் ஆபிஸ் போனப்போ மணி 11. நண்பர் எஸ்நான் காணாமப் போயிட்டேன்னு கதிகலங்கிப் போய்ட்டாப்ள. 

அப்புறம் வேலைதான். தினசரி சாயங்காலம் பாரிஸச் சுத்துறது. மறுபடி வேலை.
நாங்க இந்தியா கிளம்புற நாள் வந்தது. நான்நண்பர் எஸ் அப்புறம் நண்பர் எம் மூணுபேரும் பாரிஸ்ல இருந்து ப்ரசெல்ஸ்அங்கேயிருந்து சென்னை வரணும். சனிக்கிழமைக் காலைல சாப்பிட்டு கிளம்பினோம். எடை செக் பண்ற இடத்துல ஆரம்பிச்சது சனி. என்னோடது ஆறு கிலோ அதிகம். போதுவா நான் சும்மா போயிட்டு சும்மா வாரதுதான் பழக்கம். ஆனால்ஏதோ ஒரு ஞாபகத்துல 5+3 லிட்டர் போர்டோ ஒயின். கிலோ பாதாம், 3 கிலோ சாக்லேட்மான் பன்றிக்கறினு வாங்கிக் குமிச்சுட்டேன். இது போக கிப்டா வந்த சாக்லேட் வேற பணம் 600 யூரோ கட்டணும்னு சொன்னதா ஞாபகம். இப்போ என்ன பண்றது?
மான்பன்றிக்கறிஒயின்கிப்ட் சாக்லேட் தவிர எதைவேனா இழக்கலாம். ஏன்னா இதெல்லாத்தையும் கொண்டு போயே ஆக ஒரு காரணம் இருந்தது. சாக்லேட் பாதி, 3 லிட்டர் ஒயின், 1 கிலோ பாதாம் எல்லாத்தையும் தூக்கிக் குப்பைக்கூடைல போட்டேன். இதையெல்லாம் வெளில எடுக்கும் போது என்னோட புத்தம் புது ஷூவ எடுத்து ஓரமா வச்சேன். நான் பொருளெல்லாம் எடுத்துக் குப்பைல போட்ட அடுத்த நிமிஷம் ஒரு ஆப்பிரிக்கர் எல்லாத்தையும் ஒரு தள்ளுவண்டில எடுத்து வச்சுக்கிட்டுப் போயிட்டே இருந்தாப்ள. திரும்பிப் பார்க்குறேன் ஷூவக் காணோம். எவனோ ஆட்டையப் போட்டுட்டான். ஆஹா அஹஆகஹா. போகட்டும்னு எடையைப் போட்டுபொட்டிய உள்ளார தள்ளிட்டு ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கௌண்டர் போனா நிக்கிறாய்ங்க ஒரு பெரிய க்யு.
மணி ஏழரை. எங்க ப்ளைட் 8.30க்கு. அதைப் பிடிச்சு வந்து ப்ரசெல்ஸ் ஏர்போர்ட்ல ஜெட் ஏர்வேஸ 10.45 க்குப் பிடிக்கணும். நிக்கிறவங்கள்ள பெரும்பாலும் கருப்பர்கள். எனக்கு ஏற்கனவே இதுபோல ஒரு அனுபவம் இருக்கு. ஆனா எஸ் மற்றும் எம்-க்குக் கிடையாது. என்னான்னா கருப்பர்கள் செக்யூரிட்டி முடிக்க வழக்கமா ஆகிறத விட மூணு மடங்கு நேரம் ஆகும். அவங்களோட உருவம் நம்மளைப்போல மடங்குஅதுனால உடை மூணு மடங்கு இருக்கும். ஒவ்வொருத்தரும் கிலோ இரும்பு நகையப் போட்ருப்பாய்ங்கஅது மெட்டல் டிடெக்டர்ல கத்திகிட்டே இருக்கும்ஒவ்வொரு கத்துக்கும் உடம்போட எதோ ஒரு பகுதில இருந்து ஒவ்வொரு நகையா கழட்டுவாய்ங்கஒவ்வொருத்தரும் கைல எவ்வளவு எடை எடுத்துட்டுப் போகலாமோ அதுமாதிரி ரெண்டுமடங்கு கொண்டுட்டு வருவாய்ங்கஅதைக் கீழ போட சொன்னாசண்டைதான் போடுவாய்ங்ககடைசியா ஒன்னு – ஒவ்வொரு அம்மாவும் கொறஞ்சது ரெண்டு பிள்ளையாவது வச்சுருக்கும் – அந்தப் பிள்ளைகள் மேல உயிரையே வச்சுருப்பாய்ங்க. ஆனா அந்தப் பிள்ளைங்க சுத்திலும் இருக்க எல்லாரையும் உயிர வாங்கும். வெள்ளைக்காரப் பயவுள்ளைக மண்ணு மாதிரி இருக்கும்.
அடுத்து என்ன செய்யுறது - வரிசைல நிக்க வேண்டியதுதான். நாங்க போக வேண்டிய ப்ளைட் எங்க கண்ணு முன்னாடிப் பறந்து போயுடுச்சு. அதோ போகுதுல்ல அதுதான் நாம போகவேண்டிய ப்ளைட்னு சொன்னேன். அவ்வளவுதான். நம்ம மக்களோட புலம்பல் ஆரம்பிச்சது. ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ்ல இருந்து தொடர்ந்து டவுன்பஸ் மாதிரி வண்டி விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க. அடுத்த வண்டில ஏத்தி ப்ரசெல்ஸ்ல இறக்குனாய்ங்க. மணி 11.15 AM. பியர்- ல இருந்து பியர்-வந்தப்போ மணி 11.30 AM. நேர ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம், 10.45 AMக்கே வண்டி போயிடுச்சு. நீங்க எங்க பேசெஞ்ஜர் இல்ல தம்பிகளாபோயி ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிசரப் பாருங்கன்னாங்க.
அங்கிருத்து ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபிஸ். ஒரே ஒரு பொண்ணு சிவனேன்னு உட்கார்ந்து இருந்தது. இது எங்களோட தப்பு இல்லநீங்க சரியான நேரத்துக்கு பாரிஸ்ல எங்கள ஏத்திஇங்க கொண்டு வரல. அதுனால வேற ஏற்பாடு பண்ணும்மா அப்படின்னேன். அந்தப் புள்ளைக்குக் கொஞ்சோண்டு இங்கிலீஷ்தான் தெரியும் போல. தந்தி அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. சரின்னு சொல்லி நாளைக்குத்தான் உங்களை அனுப்ப முடியும். லண்டன் போயிட்டு அங்கேருந்து சென்னை போற மாதிரி ஏற்பாடு பண்றேன்னு என்கிட்ட சொன்னுச்சு. இங்கபாரு ஆத்தாநாங்க காமன்வெல்த் சிட்டிசைங்கஎன்கிட்ட செங்கன்தான் இருக்குபிரிட்டிஷ் விசாவோ, USA விசாவோ கிடையாது. அதுனால எங்கள நீ அங்க அனுப்பி ட்ரான்சிட் பண்ணுறது சாத்தியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். மூடிட்டு சொன்னத செய்யினு சொல்லுச்சு. அந்த புள்ளைக்கு என்கூட வந்த பயலுக சப்போர்ட். ஏங்க அவிங்களே போக சொல்றாய்ங்க நீங்க என் வில்லங்கம் பேசுறீங்கசீக்கிரம் சென்னை போகணும்மாமனார்மாமியார்பொண்டாட்டியெல்லாம் ஏர்போர்ட் வந்துருவாங்கஎன்ன செய்யிறது? blablabla.....
ஆள விடுங்கடா சாமிகளா. எனக்கு அம்மாஅப்பாவ விட்டா ஒருத்தரும் இல்லைஆனா ஒரு நாளைக்கு ரெண்டு தடவபோன்ல நான் பேசலைன்னா எங்கம்மா கெளம்பி இங்கேயே வந்துருவாங்க. அதுனால நான் எப்போ போனாலும் ஒண்ணுதான்னு சொல்லிட்டேன். ஏர்போர்ட்-உள்ளேயே இருக்குற ஷெரட்டன் ஹோட்டல்ல ஆளுக்கொரு ரூம் குடுத்தாங்க. மறுபடி இமிக்ரேஷன் டு ஐரோப்பா – அந்த ஆபிசர் ஏன் வெளில போறீங்கனு கேட்டார். நாங்க எங்க கதைய சொன்ன உடனேநான் இந்த ஏர்போர்ட்ல 20 வருசமா வேலை பார்க்குறேன்இதுவரை ஷெரட்டன் ஹோட்டல்ல தங்கினது கிடையாது. வாழ்த்துகள் அப்படின்னு சொன்னாப்ள. மிச்ச ஏர்போர்ட் ஆபீசர்களை ஒப்பிட்டாப்ரசெல்ஸ் ஆபீசர்கள் அருமையான நபர்கள் – ரிலாக்ஸா இருப்பாங்க. (அங்கே எதுக்குக் குண்டு வச்சானுக?  )
ஷெரட்டன் – அருமையான ஹோட்டல். அன்னைக்கு நிலைமைல ரூம் இல்லாததால 650 யூரோ ரூம் ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா. சாப்பாடு வேற தனி. எல்லாம் ப்ரீ. நான் அப்படியே ஒரு ரவுண்டு ப்ரசெல்ஸ் போகலாம்னு சொன்னேன். எஸ்எம்மும் என்னைப் பார்த்த பார்வைல- வேணாம்னு முடிவு பண்ணினேன். ஏர்போர்ட் முழுக்க சுத்துனேன். அப்புறம் ராத்திரி ஒரு முறை ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் ஆபீஸ் போய் உறுதி பண்ணினேன். காலைல எட்டு மணிக்கு நண்பர் எம் ப்ரசெல்ஸ் ஏர்வேஸ் மூலம் லண்டன்ஒன்பது மணிக்கு நானும்நண்பர் எஸ்சும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் லண்டன். அப்படித்தான் அவங்க ரிசெர்வ் பண்ணி வச்சு இருந்தாங்க.
காலைல நண்பர் எம் முதல்ல கிளம்பினார். டிக்கெட் வாங்கினார்உள்ளே போனார்காணாமலானார். அடுத்த அரை மணியில்நாங்கள் டிக்கெட் வாங்கினோம்பிரிட்டிஷ் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனோம்பாஸ்போர்ட்-விசா செக் பண்ணினார்கள்பொடனியில் அடித்து விரட்டினார்கள். நான் நேற்றுச் சொன்ன அதே காரணம். கலங்கிய கண்களுடன்பாவமன்னிப்பு சிவாஜி மாதிரி நண்பர் எஸ் ஒரு நடை நடந்து என்னுடன் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் கவுன்ட்டர் வந்தார். ஊருக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பேயில்லைனு வேற என்கிட்டச் சொன்னார். கவலைப்படாதீங்க நம்மள மாதிரி ஆளையெல்லாம் இங்க வச்சுக்க மாட்டாய்ங்க - எப்படியும் வெரட்டி அடிசுருவாய்ங்க. கொஞ்சம் பொறுங்கனு சொன்னேன்.
நேரே பிசினெஸ் கிளாஸ் கவுன்ட்டர் போனேன் – அங்கே ஒரு பய நிற்கமாட்டான். என்னுடைய ஒட்டு மொத்தக் கோபத்தையும் காட்டினேன். நேற்றே இப்படித்தான் நடக்கும் என்று நான் சொன்னதையும்அதை மீறி நீங்க வெட்டி வேலை செஞ்சு வச்சிங்க. இருந்தாலும் எங்களைச் சென்னை அனுப்ப இன்னும் ஒரு வாய்ப்புத் தரேன்அதுலயும் சொதப்பினா கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பேன்னு சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்துல அபுதாபி போறதுக்கு என் கையில இரண்டு டிக்கெட் கொடுத்தாய்ங்க. உள்ள போன நண்பர் எம்க்கு ஏதாவது ஆச்சுன்னாலும் நீங்க சட்டப்படி எங்களைச் சந்திக்க வேண்டியது வரும்னு சொன்னேன். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அவர் இந்நேரம் லண்டன் போயிட்டு இருப்பார்னு சொன்னாய்ங்க. எங்க ப்ளைட் இன்னும் 40 நிமிசத்துல கெளம்பும்சீக்கிரம் போங்கனு சொன்னாய்ங்க.
எங்க கைல எதுவும் பொருள் இல்லஅதுனால எல்லாம் உடனே கிளியர் பண்ணி உள்ள போனாநாங்க போற வழில நண்பர் எம் - உள்ளார இருக்க ப்ரசெல்ஸ் கவுன்ட்டர்ல கதறிக்கிட்டு இருந்தாப்ள. ப்ளைட் உள்ளார இருந்து பொடனில அடிச்சு எறக்கி இருக்காய்ங்க. ஆப்பிரிக்கா ட்ரான்சிட் வராத மாதிரி ப்ளைட்ல கெளம்பி வாயான்னு சொல்லிட்டு நாங்க ப்ளைட் ஏறுனோம். அபுதாபி வந்தோம். அங்கே ஒரு பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம ஊருக்கு வந்துட்டோம்னு தோணுச்சு.
அங்கே இருந்து சென்னை வந்தோம். நண்பர் எம் ப்ரசெல்ஸ்ல இருந்து நாலுமணிநேரம் கழிச்சுக் கிளம்பிம்யுனிக்அங்கே மணிநேரம் ட்ரான்சிட். அங்கே இருந்து டெல்லி. டெல்லி ஏர்போர்ட்ல பொட்டிய அவங்களே சென்னை அனுப்புவாய்ங்கனு நெனைச்சு டொமஸ்டிக் வந்துஅவிங்ககிட்டக் கேட்டுட்டுஅவிங்க நீதான்யா எடுத்துக்கிட்டு வரணுனு சொல்லிவண்டியப் புடிச்சு மறுபடி திரும்பப் போய் எடுத்துக்கிட்டு வந்து அதுனால ப்ளைட்ட விட்டுஅடுத்த ப்ளைட்ட புடிச்சு சென்னை வரும் போது ரெண்டு நாள் ஆயிடுச்சு.
ஒரு பயணத்துல எல்லாமே தப்பா நடக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்க இன்னொரு விஷயமும் நடந்தது.
இதெல்லாம் நடந்து ரெண்டு நாள்லஎன்னோட போட்டோ எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி வச்சுருந்த என்னோட கம்ப்யூட்டர்பேக்கப் எடுத்து வச்சுருந்த கார்த்தியோட கம்ப்யூட்டர் எல்லாம் ஒரே நேரத்துல பார்மேட் ஆகி என்கிட்ட ஒரு போட்டோ கூட இல்லாம போச்சு. அதுனால என்னவேறெந்தப் பயணத்தை விடவும் இதோட நினைவு மட்டும் அப்படியே இருக்குவேறென்ன வேணும்?

ப்ரசெல்ஸ், பாரிஸ் - நினைவுகள் பகுதி ஒன்று


        என்னோட நிறுவனத்துல ஒருமுறை பாரிஸ் (கார்னர் இல்ல) போகச் சொன்னாங்க. இந்த விஷயம் எனக்கு சொல்லப்பட்டது எப்போன்னா - சாயங்காலம் 3.30க்கு. சென்னைக்கு மிக அருகில் இருக்கிற மகிந்திரா சிட்டில வேலை. என்னோட ரூம் சூளைமேடுல. இடைப்பட்ட தூரம் – 45 கி.மீ. ப்ளைட் டிக்கெட் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வர கொஞ்சம் நேரமாகும் அதை நேரா உங்க ரூம்லேயே குடுக்க சொல்றோம், கெளம்புங்க அப்படின்னு ட்ராவல் டெஸ்க் மக்கள் சொன்னப்போ மணி சாயங்காலம் 6. அங்கே இருந்து கிளம்பி ரூமுக்கு வந்தப்போ மணி 8.30. சாப்பிட்டுட்டு, ரிலையன்ஸ் பிரெஷ்ல 3 கிலோ அரிசியும், கொஞ்சம் தொக்கும் வாங்கிட்டு வரும்போது மணி 9.30. 10 மணிவரை ஒரு சத்தத்தையும் காணோம். நானும் இருக்குற நாலு சட்டை, பேன்டையும் எடுத்து என்னோட பெட்டில வச்சுட்டு வழிமேல விழி வைச்சுக் காத்துக்கிட்டு இருந்தேன். தம்பி சதீஸ் வந்தான், என்னண்ணே மறுபடி பாரிஸ் கெளம்பியாச்சா அப்பிடின்னு நக்கலா சொன்னான். அப்போவே நான் சுதாரிச்சு இருக்கணும்.
மணி 10.15 – ஒரு போன்கால். சார் நான் எழும்பூர் மணி எக்ஸ்சேன்ஜ் ரெப் பேசுறேன், எங்க சார் வரணும் அப்பிடின்னாப்ள. வழி சொல்லிட்டு விட்டத்த பார்த்துகிட்டு இருந்தேன். என்னோட வர்ர இன்னும் ரெண்டு துரோகிகளோட டிக்கெட், காசு எல்லாம் நான்தான் வாங்கிட்டு வரணும்.
இதுக்கு இடைல அவங்க வேற கால் பண்ணி ஜி நாங்க ரெடி ஆயிட்டோம்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான் .
வேளச்சேரில இருந்து கேளம்பிட்டோம்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
போர்டிங் அட் பாஸ்ட் ட்ராக்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
வி ஆர் மூவிங்.
காசும் டிக்கெட்டும் இன்னும் வரல - இது நான்.
ஆன் தி வே டு ஏர்போர்ட்டு.
டே உங்களுக்கு ஆன்சைட்டே இருக்குமான்னு தெரியல, ஏண்டா இவ்வளவு அவசரம்? வீட்டுக்குத் திரும்பி போங்கடா அப்பிடின்னேன்.
ஜி, பொண்டாட்டி, மாமனார், மாமியார், மச்சினிச்சி, மச்சான் சகிதமா சைலோ கார்ல போறோம் ஜி. இப்பிடில்லாம் சொல்லாதீங்க அப்படின்னு கதறுனாப்ள. போங்கடா போக்கத்தவனுகளா.
மணி பதினொன்னு இருபது. ஒரு வழியா டிக்கெட், ட்ராவல் கார்ட் கெடைச்சுது. சென்னையிலிருந்து ப்ருசெல்ஸ் ஜெட் ஏர்வேஸ் கிளம்பும் நேரம் அதிகாலை 1.50 அப்படின்னு போட்டு இருந்துச்சு.
கால் டாக்ஸி புடிச்சு ஏர்போர்ட் போனேன் மணி நள்ளிரவு 12.15. அந்த ரெண்டு ஆடுகளும், ஆடுகளின் சொந்தங்களும் என்னைய வெறிகொண்டு பார்த்துக்கிட்டு இருந்தாய்ங்க. தம்பி உங்களுக்கு பொறுப்பே கிடையாதா? சரியான நேரத்துக்கு கொண்டாந்து குடுத்துட்டு நீங்க லேட்டா வர வேண்டியதுதானே அப்படின்னு ஒரு ஆடோட மாமனார் கேட்டாரு.
எடை போடுற வரிசைல நின்னு எங்க முறை வந்தப்போ மணி 12.40. ஜெட் ஏர்வேஸ் கவுன்ட்டர் போனா, அனுமதிக்க முடியாது நீங்க ஒரு மணிநேரம் முன்னாடி வந்திருக்கணும்னு சொன்னாய்ங்க. நான் அவங்க வாட்ச காட்டி இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு, அனுமதிக்கலைனா நான் வழக்குப் போடுவேன்னு சொன்னேன். சரின்னு ஓகே பண்ணுனாங்க. யாருகிட்ட?
இப்போ இமிக்ரேசன். எனக்கு முன்னாடி ஜோஸ்னா சின்னப்பா அஞ்சு ஆறு பாஸ்போர்ட் வச்சுக்கிட்டு நின்னாங்க. கூடவே, ரெண்டு மூணு பசங்க, ஒவ்வொருத்தன் கையிலயும் அஞ்சு பாஸ்போர்ட். நுனி நாக்கு ஆங்கிலம் கசகசன்னு பேச்சு. சரிதான்.
ஒருவழியா எல்லாம் முடிச்சு, உள்ளார போனப்போ மணி 1.30. வராண்டால போகும்போதே எங்கள கூட்டிட்டுப் போய் கிட்டத்தட்ட உள்ள தள்ளுனாங்க. விமானம் எங்களால பத்து நிமிஷம் தாமதமா கிளம்பியது
ப்ரசெல்ஸ் ஏர்போர்ட் பியர் –B ல இறங்கியாச்சு. அங்கே இருந்து பியர் –A போனோம். அங்கே இருந்து ப்ரசெல்ஸ் ஏர்லைன்சோட லோக்கல் பிளைட்ல பாரிஸ் போகணும். பிளைட்டுக்குள்ள போனா நம்மூரு டவுன் பஸ் மாதிரி ஒரே கூட்டம். ஒரு 200 மில்லி தண்ணி பாட்டிலும், ஒரே ஒரு பெல்ஜியம் சாக்லேட் குடுத்தாங்க. ஒரே கடில சாக்லேட் காலி, ஒருமடக்குல தண்ணி காலி. அதுக்குள்ளே பாரிஸ் வந்திருச்சு.
மெதுவா இறங்கி வந்தோம். மூணு கன்வேயர். எல்லாரும் அடிச்சு பிடிச்சு எடுப்பாங்கன்றதுனால நான் எப்போவுமே, கடைசியாத்தான் அந்தப்பக்கம் போறது. ஓரமா நின்னுக்கிட்டு இருந்தேன். வேற வழியில்லாம நண்பரும் என் கூட நின்னுக்கிட்டு இருந்தார். ஒரு வழியா கூட்டம் முழுசும் காலியானதுக்கு அப்புறமும் எங்க பெட்டி ஒன்னு கூட வரல. அப்போ எனக்கு மட்டும் சாரண பரதசாரி அப்படின்னு மைக்-ல கூப்பிடுறதுமாதிரி இருந்துச்சு. பக்கத்துல இருந்த நண்பர் எஸ்- கிட்ட என்னைய யாரோ கூப்பிடுறாங்கனு நினைக்கிறேன்னு சொன்னேன். அவரு உங்கள இங்க யாருக்கும் தெரியாது அதுனால கூப்பிட மாட்டாங்க அப்படின்னார். ஆச்சா, நான் அமைதியாயிட்டேன்.
கொஞ்ச நேரத்துல அந்த ஏரியா-லையே யாரும் இல்ல. ஒரு ஆள் (பாண்டிச்சேரி) எங்ககிட்ட வந்து, யாருங்க சரவணன்னு கேட்டாப்ள. நான்தான் அப்படின்னு சொன்னேன். உங்களையும் உங்க கூட வந்த எஸ்-யும்தாங்க இவ்வளவு நேரமா கூப்பிட்டாயங்க. உங்களுக்குக் கேக்கலையா அப்படின்னாப்ள. உடனே நண்பர் எஸ் என்னைய பார்த்து கண்ணுல தண்ணி வச்சுண்டார். இனி எல்லாம் இப்படித்தான். வெல்கம் டு பாரிஸ்னு சொன்னேன்.
ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ் ஆபீஸ் ஒரு பாட்டி உங்க பெட்டி எல்லாம் ப்ரசெல்ஸ்ல இருக்கு. இந்த பார்ம நிரப்பிக் குடுத்துட்டு திரும்பிப் பார்க்காம ஹோட்டலுக்கு ஓடிருங்க, கர்த்தர் கிருபை இருந்தா பொட்டி நாளைக்குக் கெடைக்கும்னு சொல்லுச்சு. பக்கத்துல இருந்த எஸ் டஸ் ஆயிட்டாப்ள.
சரிங்க அம்மணி, மானத்த மறைக்கக்கூட மாத்துத் துணி இல்லைங்க, போட்டுட்டு இருக்கிற இந்த டிரஸ் கேவலமா நாறுது. தயவு செய்து ஏதாவது செய்யிங்க அப்படின்னு சொன்னேன். கெழவி டக்குனு திரும்பி நடத்ததெல்லாம் மறந்துட்டு இத எடுத்துக்கிட்டுப் போங்கய்யா பேராண்டிகளான்னு ஆளுக்கொரு கிப்ட் குடுத்துச்சு. அதுக்கு உள்ளார, ஒரு தேனீர் சட்டை, பல்பொடி, தண்ணி சோப்பு, ஷாம்பு, நாறாம இருக்க பூச்சி மருந்து எல்லாம் விரல்கட்டை சைஸ்ல அடைச்சு வச்சு இருந்துச்சு. பார்ம நிரப்பிக் குடுத்துட்டு எஸ்கேப் ஆனோம். எஸ் எதுவுமே பேசல. லைட்டா வெளிறிப்போய் இருந்தாப்ல.
டாக்ஸிய புடிச்சு ஹோட்டலுக்கு வந்து, குளிச்சுட்டு நான் உடனே வெளிலே கெளம்பினேன். எஸ் அவரு ரூம விட்டு வெளிய வரல. நானும் கூப்பிடல. ஒரே ஒரு பிரச்சனை அந்த தேநீர் சட்டை என் முழங்கால் அளவு வரை கவர் செய்தது. கெழவி என் மானம் போயிடக் கூடாதுனு நெனைச்சு கீழவரைக்கும் கவர் பண்றமாதிரி சட்டைய குடுத்துடுச்சு போல. மானத்தைக் காப்பாத்துன மாசாத்தியாரே வாழ்க அப்படின்னு சொல்லிட்டு பாரிஸ் உள்ள புகுந்திட்டேன். பாரிஸ் நகரம் என்னை எப்போதும் போல வாவா என்றது.
கோமாளிச் சட்டைய நாம போட்டாலும் பாரிஸ்ல ஒரு பயலும் கிண்டல் பண்ண மாட்டாய்ங்க. அம்புட்டு நல்லவைங்க. எதோ புது பேஷன் போலன்னு நெனைச்சு நமக்கிட்டயே யார் உங்க டிசைனர்னு கேப்பாய்ங்க மாசாத்திக்கிழவி, கேர் ஆப் ப்ரசெல்ஸ் ஏர்லைன்ஸ்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்கலாம். யார் கண்டது கெழவி பேமஸ் ஆகி ரேம்ப் வாக் போனாலும் போகும்.
நேர கர் து நார்ட் ஸ்டேசன் போய், அடுத்தவாரம் ஜெர்மனி போக ட்ரைன் டிக்கெட் எடுத்தேன். எப்போவும், வெள்ளி ராத்திரிக் கெளம்பிப் போயிட்டு ஞாயிறு மத்தியானம் அங்கே இருந்து கெளம்பிருவேன். கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருந்த டிக்கெட் விக்கிற தம்பி ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் ஆப்ஷன் எடுத்துகோங்க மொத்தமே 200 யூரோல முடிஞ்சுரும். நீங்க சொல்ற மாதிரிப் போனா இன்னும் 400 யூரோ மேல செலவாகும்னு சொன்னுச்சு. திங்கள் அன்னைக்கு வர லேட் ஆயிடாதானு கேட்டேன். காலைல எட்டு மணிக்கு பாரிஸ் வந்துரலாம்னு சொன்னாப்ல. நமக்கு பத்து மணிக்குத்தானே ஆபிஸ் சூப்பர். சென்னைல இருந்து கெளம்பினதுக்கு அப்புறம் எனக்கு நடக்குற நல்ல விஷயம் இதுதான்யா. நீ வாழ்கன்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு, அதைக் கொண்டாட தேசதுரோகியா மாறி பிக் மாக் பீப் பர்கர் ஒன்னத் தின்னுகிட்டே ஊர சுத்தப் போயிட்டேன்.
ராத்திரி ரூமுக்குத் திரும்பிப் போகும்போது மணி 12. நண்பர் எஸ் எனக்காகக் காத்துக்கிட்டு இருந்தாப்ள. சாப்பிட்டாச்சானு கேட்டேன், எங்க போய் சாப்பிடனும்னு கேட்டாப்ள. வேற வழி நாடு ராத்திரில சமைத்துக் கொடுத்தேன். பாவம் நாள் பூரா ஜெட் லாக், தூக்கம், பசி, தனிமைனு ஒரே நாள்ல டரியல் ஆயிட்டாப்ள. அடுத்தநாள் ஞாயிறு. என்னோட பிளான் என்னனு சொன்னேன் வேறென்ன காலைல மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டம் போயிட்டு சார்த்ர்- ஸிமோன் தெ வுவா சமாதிக்குப் போறது. சமைச்சு வச்சுட்டு எந்த எழவுக்கு வேணா போங்கனு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாள் சீக்கிரமா எழுந்து, சமைச்சு வச்சுட்டு நேரே மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டம். அதுக்குக் கொஞ்சம் முன்னாடி தெருவுல படம் வரைஞ்சு விற்பாங்க. நெறைய தள்ளுவண்டிங்க நிக்கும். அதுல படமா தொங்கும். வேடிக்கை பார்த்துட்டு, கல்லறைத் தோட்டத்துக்குள்ள போனேன்.
மார்க்சியத்தின் ஒரு பகுதியாக இருத்தலியத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிய ஆசிரியர்னு நான் நினைக்கிற ஜ(ன்) ப(ல்) சார்த்ர் கல்லறை அங்கேதான் இருக்கு. கூடவே புதைக்கப்பட்டுள்ள நபர் சார்த்ரின் இணையர்- பெண்ணியப்போராளி - ஸிமோன் தெ (ப்)வுவா.
அவங்களோட கல்லறை கொஞ்சம் வெளிறிய மஞ்சள் கலர்ல இருக்கும். கல்லறை மேல, ஏகப்பட்ட காகிதங்கள் சின்னச் சின்ன அளவுல ஆரம்பிச்சு, 10 பக்கம் அளவுக்குக் கூட. அதெல்லாம் பறக்காம இருக்கிறதுக்கு அதுமேல சில்லறைக் காசு இல்லைனா ரோஜாபூவை வச்சுருப்பாங்க. பெரிய பேப்பருக்கு சின்ன பூந்தொட்டியே வச்சுருப்பாங்க. சில தாள்கள ஒவ்வொன்னா படிச்சுப் பார்த்தேன். பெரும்பாலும் பிரெஞ்ச். கொஞ்சம் இங்கிலீஷ். என்ன எழுதி இருக்குனா லவ் லெட்டர்ஸ். காதலுக்கு ஆசிர்வாதம் கேட்டு லெட்டர்ஸ். அப்புறம் சார்த்ர், (ப்)வுவா இவங்களோட வரிகள். சிலது, பிரான்ஸ்/உலகத்துக்கு ஏன் அவர்கள் முக்கியம் அப்பிடிங்கிற மாதிரி கடிதங்கள். முக்கியமா கல்லறை முழுக்க முத்தங்கள் லிப்ஸ்டிக் கரையால் நிறைஞ்சு போயிருக்கும் கல்லறை அது.
நான் அதை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கைல, ஒரு வெள்ளைக்காரத் தம்பி வந்து ஹாய், வி ஆர் பிரம் அமேரிக்கானு சொல்லிட்டு, கேமராவைக் கொடுத்து அவங்கள போட்டோ எடுக்கச் சொன்னாப்ள. அப்போத்தாம் பார்க்குறேன் - அவர் கூட ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு. ரெண்டுபேரும் கல்லறைல அவிங்க எழுதிக்கிட்டு வந்திருந்த பேப்பர வைக்கிறமாதிரி, அப்புறம் முன்னாடி உக்கார்ந்து, ரெண்டு பெரும் கல்லறைய பார்குற மாதிரி இது வரை நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.
டக்குனு அந்த பையன் லிப்ஸ்டிக்க எடுத்தான், வாயில அப்பிக்கிட்டான், அப்புறம் அந்தப் பொண்ணும் அப்பிக்கிச்சு. முத்தம் குடுத்தாய்ங்க எங்கேன்றீங்க - கல்லறைக்கு. சரிதான் நம்ம வேலை போட்டோ எடுக்குறது. நானும் வளைச்சு, வளைச்சு போட்டோ எடுத்தேன். டபக்குனு அவைங்களுக்குள்ள பிரெஞ்ச் முத்தம். நான் விடலையே மறுபடி போட்டோ. கல்லறைக்கு இங்கிட்டும், அங்கிட்டும் நின்னுக்கிட்டு குறுக்கால சார்தரும் (ப்)வுவாவும் கெடக்காய்ங்க எதுத்தாப்ல நான் கெடக்கேன் அதப்பத்திக் கவலையே இல்லாம அவிங்க அப்பிடியே கட்டிப் பிடிச்ச மாதிரி போட்டோ பிரெஞ்ச் முத்தம் குடுத்துக்கிட்டேதான். போட்ருந்த லிப்ஸ்டிக் எல்லாம் கரைஞ்சு அவிங்க உதடு நார்மல் கலருக்கு வந்துருச்சு.
என்னைய ஒரு போட்டோ எடுங்கடான்னு என் கேமராவ குடுத்தேன். நான் முத்தம் குடுக்குறதுக்கு யாரும் இல்லையா, அதுனால கல்லறைல சாஞ்ச மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டேன். வேற வழி.
அந்தப் பயவுள்ளையும், பயலும் அமெரிக்காக்காரைங்க. ரெண்டு பெரும் ஒரே காலேஜ்ல நுண்கலை படிக்கிறாய்ங்க. ரெண்டு பேருக்கும் சார்த்ர் - ஸிமோன் தெ (ப்)வுவாவை புடிக்கும். அதுனால லவ் ஆமா அவிங்க அப்படித்தான் சொன்னாய்ங்க. ரெண்டு பேரும், ரெண்டு வருஷம் வேலை பார்த்து, பத்தாததுக்கு அப்பா- அம்மா கிட்ட காசு வாங்கி சார்த்ர் – (ப்)வுவா வாழ்ந்த, பேசுன இடங்கள பார்க்க வந்துருக்காய்ங்க. நான் இந்தியால இருந்து வந்துருக்கேன்னு சொன்ன உடனே, ஓரமா இருந்த பென்ச்ல ஒக்காந்து பேசலாமானு கேட்டாய்ங்க. ஒரு மணிநேரம் கதறக் கதற எக்சிஸ்டென்ஷியலிசம், ஃபெமினிசம், மார்க்சியம் பேசுனோம். கல்லறைகளுக்கும், இருத்தலியத்துக்குமான தொடர்பை ரெண்டுபேருமே ஆழமான சிந்தனையோட பேசினாய்ங்க. அந்தப் பொண்ணு, செகண்ட் செக்ஸ் பத்தி பேசினப்போ, பதிலுக்கு நான் பெண் ஏன் அடிமையானாள் பத்திப் பேசுனேன். ரெண்டையும் ஒப்பிட்டு பேசிட்டு - பெரியாரைப் பத்திச் சொன்னேன், அவர் போராட்டங்களைப் பத்தியும் அனார்கிசம் பத்தியும். அவிங்க சே குவேராவ அனார்கிஸ்ட்னு சொல்லலாம் இல்லையா அப்படின்னு பேசுனாய்ங்க.
அன்னைக்கு முழுக்க நாங்க மூணு பேரும் மோண்ட்பானாஸ் கல்லறைத் தோட்டத்தை முழுசா சுத்திப் பார்த்தோம். பேச்சு பேச்சு பேச்சு. முழுக்க முழுக்க சார்த்ர் – (ப்)வுவா காம்யு நீட்சே இறுதியா சேகுவேரா. நாங்க பேசுனதுல பொதைச்ச பொணமெல்லாம் எந்திரிச்சுடுமோன்னு நெனைச்சு கெளம்பிட்டோம். அவங்களோட காண்டாக்ட் எதையும் நான் வாங்கல அவங்களும் என்கிட்ட வாங்கல. எக்சிஸ்டென்ஷியலிச மனுசைங்க வேறென்ன செய்வாய்ங்க? ஆனா, என்கிட்ட நூத்துக்கணக்கான போட்டோக்கள், நினைவுகள் இருந்தது.
அங்கே இருந்து லக்ஸம்பெர்க் தோட்டம் போய் அங்கே ஒரு நடை. மக்கள் கொழந்தைகளோட குடும்பம் குடும்பமா நடக்கவும் ஆடவும் பாடவும்னு செம ஜாலியா இருப்பாங்க. மரங்கள் நடப்பட்டுள்ள விதம் அற்புதம். அந்தத் தோட்டத்தோட ஓரத்துல இருக்கிற திறந்த மண்டபத்துல இசைக்கச்சேரிங்க நடக்கும். செமையா இருக்கும். இதுக்கு எதுத்தாப்லதான் பாந்தியன் சர்ச் அங்கேதான் வால்தருடைய கல்லறை இருக்கு.
நெறைய தமிழ் படத்துல ஹீரோ ஹீரோயின் டான்ஸ் ஆடுறது இந்த சர்ச் வாசல்லதான். இன்னொரு இடம் நோட்ர டாம் சர்ச். எங்கேயும் காதல் படம் பார்த்திருக்கீங்களா? அப்போ நீங்களும் பாந்தியன், நோட்ர டாம் சர்ச் பார்த்துட்டீங்கனு வைங்க.
ராத்திரி பத்து மணிக்கே ரூமுக்கு வந்துட்டேன். நண்பர் எஸ் மலர்ந்த முகமும் சிரிப்பும் கொண்டு பூரிப்பில் இருந்தார். எங்கயாவது பக்கத்துல போயிட்டு வந்துட்டாரு போலனு நெனச்சேன். இல்லை பொட்டி எல்லாம் கரக்டா வந்து செர்ந்திருச்சாம். அப்படியானு கேட்டுட்டு சமைக்க ஆரம்பிச்சேன். கடுப்பாயிட்டாப்ள. பொருளெல்லாம் கெடைக்கும்னு நான் நினைக்கவே இல்லைனார். அப்படியானேன். அதுக்கப்புறம், சாப்பிட மட்டும்தான் வாயைத்திறந்தார்.


Monday, March 14, 2016

பேக்கர் என்றொருவர் - விஜய் பிரசாந்த்

பேக்கர் என்றொருவர் - விஜய் பிரசாந்த்.

நான் ஒரு போதும் நினைவஞ்சலிகளை எழுதியதில்லை. இப்போதும் அப்படி ஒன்றை எழுதப்போவதில்லை. காலஞ்சென்ற ஓர் மனிதனைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கெந்த அதிகாரமும் இல்லை. நான் செய்யும் தொழிலிற்கும், அவருக்கும் கூட எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் என் மீது தாக்கம் செலுத்தியவரும் அல்ல, இங்கே தாக்கம் என்பது அடிக்கோடிட வேண்டிய ஒன்று. ஆதலால், தனிநபருடனான நெருக்கத்தினால் வரும் செறிவானது என் எழுத்தில் குறையலாம். இருந்தும் நான் ஏன் அவரைப் பற்றி எழுத வேண்டும் என நினைக்கிறேன்? அதற்கான பதில் – நான் போற்றும் உண்மையென உணரக்கூடிய விழுமியங்களை வாழ்வாகக் கொண்ட சிலரில் அவரும் ஒருவர்.

ஓர் மென்பொறியாளன் தன்னைவிட இரண்டு தலைமுறை மூத்த ஓரு கட்டிடக்கலைஞரால் கவரப்படுவது இதை வாசிக்கும் வாசகர்களுக்கு வியப்பை அளிக்கலாம். சிறு வயது முதலே கட்டிடங்கள் என்னை வசீகரித்துக் கொண்டே இருந்தன. நான் மென்பொறியாளனாக வர விரும்பியதில்லை – மிக முக்கியமாக காரணம் - பள்ளியில் தலைவலியை ஏற்படுத்தும் நீண்ட நேரக் கணினி ஆய்வக வகுப்புகள்தான். நான் கட்டிடப் பொறியாளனாகவே விரும்பினேன். எங்களுக்கு முன்பாக, நாங்கள் குடியிருந்த வீட்டில் தங்கியிருந்த கட்டிடக் கலைஞர் பெயருக்கு வந்து கொண்டிருந்த வரைபடக்கட்டிடக்கலைப் புத்தகங்கள்தான் என்னைத் தூண்டியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் நான் பெரும்பாலான நேரம் கட்டிடம் கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டோ, கட்டிடம் தொடர்பான கட்டுரைகளை வாசித்துக் கொண்டோ இருப்பேன். அந்நாட்களில் மலையாள செய்தித்தாளான மாத்ருபூமி குறைவான செலவில் கட்டிடம் கட்டுவது தொடர்பான தொடர்களை வெளியிட்டு வந்தது. அவற்றை இன்று வரை  நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நான் கட்டிடவியலுக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றாலும், வரையத் தெரியாதவர்கள் நல்ல கட்டிடவியலாலர்களாக வர முடியாதென்ற பொதுக்கருத்தின் அடிப்படையில், எல்லோரையும் போல இளநிலைத் தொழில்நுட்பவியல் படித்து மென்பொருளியல் வேலையில் சேர வேண்டியதானது. அதனால் இப்போதும் தலைவலி எப்போதாவது வரத்தான் செய்கிறது.

நான் கட்டிடக்கலை மீது கொண்ட காதல் மட்டுமே என்னை பேக்கரை நோக்கி செலுத்தவில்லை. உண்மை என்னவென்றால் அவர் வெறும் கட்டிடக்கலை வல்லுநர் மட்டுமல்ல. அதை நாம் எளிதாக விளக்கிவிடலாம். அவர் தன் வாழ்நாளில், மயக்கமருந்தாளுநர், மதபோதகர், தோட்டவேலைக்காரர், சமையல்காரர், விவசாயி, விலங்கு மருத்துவர், காயமுற்றோரை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டி, தச்சர், கொத்தனார், பறவைகளைக் கவனிப்பவர், கவிஞர், கேலிச்சித்திரக்காரர்... என வெவ்வேறு பணிகளைச் செய்துள்ளார். மிக முக்கியமாக, அவர் தான் செய்த எல்லா வேலைகளிலும் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார். எனக்குத் தெரிந்து இதே போல் பல வேலைகளை செய்யும் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தவர் – புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் – வைக்கம் முகம்மது பஷீர். என் பார்வையில் பேக்கர், பஷீரைப் போலவே ஓர் முழுமையான மனிதரும் கூட.

1937ஆம் ஆண்டு லாரன்ஸ் வில்ஃப்ரெட் பேக்கர் பிர்மின்ஹாம் கட்டிடக்கலைக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். 1940களில் இந்தியாவில் தொழுநோயாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த பேக்கருக்கு மகாத்மா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, அது அவர் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. கிழிந்த துணியாலான காலணிகளை அணிந்த அந்த இளைஞன் காந்தியைக் கவர்ந்தான். பேக்கர் என்ற அந்த இளைஞன் இந்தியாவிலேயே தங்கிவிடுவதற்கு காந்தியுடனான அந்தச் சந்திப்பே போதுமானதாய் இருந்தது. பின்னாளில் அவர் கேரளாவைச் சேர்ந்த முனைவர் எலிசபெத் சாண்டியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இணையர்கள் 16 வருடங்கள் இமயமலையில் வாழ்ந்தனர் – அந்நாட்களில் பேக்கர், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொதுநலக்கூடங்கள், வழிபாட்டுக்கூடங்கள் ஆகியவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பில் இருந்தார். பின் அந்த இணையர்கள் கேரளாவிற்கு இடம் பெயர்ந்தனர். பிந்தைய எழுபதுகளில், திருவனந்தபுரத்தில் வளர்ச்சி ஆய்வு மையத்தைக் கட்டியமைத்த பின் பேக்கர் தன் முத்திரையை கேரளத்திலும் பதிக்கத் தொடங்கினார்.

பேக்கரின் உள்ளே இருந்த காந்திதான் என்னைக் கவர்ந்தார் என்று உணர்கிறேன். என் தலைமுறையில் காந்தி புத்தகங்களுக்குள் அடைபட்டவராகவே இருந்தார். லாரி பேக்கர் காந்தியத்தின் அழகியலை நிகழ்த்திக் காட்டினார் – அது, அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடைமுறைக்கு நெருக்கமாகவும், தினசரி வாழ்வில் விரவிப் பரவுவதாகவும் இருக்கும்.
அடிப்படையில் பேக்கரின் தத்துவம் என்பது இயற்கைக்கு மதிப்பளிப்பது. இயற்கையின் அலகுகளைத் தேவையின்றித் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை பேக்கர் ஒரு விதியாகவே பின்பற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த அவருடைய நினைவஞ்சலியின் தலைப்பு – அவரைப் பொருத்தவரை “இல்லம் என்பது நிலத்தின் நீட்சி.” கட்டிடம் கட்டப் பட வேண்டிய இடத்தின் நிலஅமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவர், அதை எந்தக் காரணத்திற்காகவும் மாற்றியமைக்காதவர். அவர் ஒருபோதும் மலைப்பாங்கான இடத்தை மட்டப்படுத்தியதோ, பள்ளக்காடான இடத்தை வேறெங்கிருந்தோ கொண்டு வந்த மண்ணால் நிரவியதோ கிடையாது. அதற்குப் பதிலாக அவர் அமைத்த கட்டிடங்கள் இயற்கையான சரிவுகளையும் கணக்கில் கொண்டு அவற்றை அனுசரிக்கும் விதமாகவே இருந்தன. ஒரு மரம் இருந்தால் அம்மரத்தைப் பிடுங்கிவிட்டு கட்டிடம் கட்டுவதற்குப் பதிலாக, அந்த மரத்தைச் சுற்றியே பேக்கரின் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதன் மூலம் அவருடைய ஒவ்வொரு கட்டிடமும் சூழ்ந்துள்ள இயற்கைக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகளாகவே இருந்தன.

மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய வழிமுறை மிகச் சிறப்பானது. பெரும்பாலோர் ஒத்துக்கொள்ளாத ஆனால் பேக்கர் பயன்படுத்திய காந்திய வழிமுறையானது – எந்த ஒரு கட்டிடமும் ஐந்து மைல் சுற்றளவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டப்பட வேண்டும்- என்பது. பாறாங்கற்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அவர் அவைகளைக் கொண்டே வீடுகளை அமைத்தார். இதன் மூலம் செலவு குறைவதுடன், சுற்றி இருக்கும் சூழலுடனும், நிறத்துடனும் பொருந்திய, ஆனால் விசித்திரமான தோற்றமளிக்காத கட்டிடங்கள் கிடைத்தன. சிமெண்ட்டும், கண்ணாடியும் உற்பத்தியாக எடுத்துக் கொள்ளும் கூடுதலான சக்தியைக் காரணமாக வைத்து அவர் அவற்றைக் கூடுமானவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தினார்.

லாரி பேக்கர் கட்டிடக் கலையின் உண்மைத் தன்மையை உறுதி செய்தார். கட்டிடத்தில் எதைச் செய்தாலும் அதற்கொரு நோக்கம் இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். செங்கற்களால் கட்டிடம் கட்டி, அதன் மேல் சிமென்ட் பூசிய பின், செங்கற்களைப் போல தொற்றமளிக்கும் வகையில் வர்ணத்தால் வரையும் வேலையின் பின்னுள்ள காரணகாரியங்களை அவர் அறியாததில் வியப்பொன்றும் இல்லை. பேக்கரின் கட்டிடங்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றாது. அவை இவற்றால்தான் கட்டப்பட்டவை என்பதை மறைக்காதவை (பொதுவாக பேக்கருக்குப் பிடித்த செங்கற்கள்). அவை புதிதாய்ப் பிறந்த குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பை உங்களுக்குத் தருபவை. அவை செங்கற்களுக்கேயான சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாது, வெவ்வேறு நிறத்தில் அமைந்து வித்தியாசமான காட்சிகளையும் விளைவுகளையும் உருவாக்குபவை. அருகிலிருக்கும் கறையாலும் அழுக்கினாலும் பாதிக்கப்படும் (மேற்பூச்சுப் பூசியும் வண்ணம் பூசப்பட்டும் இருக்கும்) கட்டிடங்களுடன் பேக்கரின் கட்டிடங்களை ஒப்பிட்டால், நாட்பட இயற்கைத் தாக்கங்களைத் தாங்குவதில் பேக்கரின் கட்டிடங்கள் சிறப்பானவை.

பேக்கரின் கட்டிடங்கள் ஸ்டுடியோக்களில் வடிவமைக்கப்பட்டவை அல்ல – அவர் அப்படிப்பட்ட ஸ்டுடியோ ஒன்றைச் சொந்தமாகக் கொண்டிருந்தவரும் அல்ல. அவர் எப்போதுமே கட்டிட வரைபடங்களை வரைவதற்கு முன்பு, மனை இடங்களுக்குச் சென்று, அதன் நிலவமைப்பு குறித்தும், இயற்கையமைப்பு குறித்தும் அறிந்து, அவற்றையும் கணக்கில் கொள்வார். மேலும்  ஒவ்வொரு  வாடிக்கையாளரிடம் அவர்களின் உணவு, தூங்கும் முறைகள், வேலை மற்றும் பொழுதுபோக்கு குறித்து நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக் கூடியவர். எனவே அவரால் ஓர் கவிஞருக்கென கட்டப்பட்ட வீட்டிற்கும், படைப்பூக்கம் ஏதுமற்ற ஓர் அரசூழியருக்கென கட்டப்பட்ட வீட்டிற்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கும். எனவேதான், கார்டூனிஸ்ட் அபு ஆப்ரகாமின் வீடு பாடகர் ஏசுதாஸ் வசிக்கப் பொருத்தமற்றதாக மாறிவிடுகிறது. ஒரே வகையான இரு படைப்புகளில் கூட ஒவ்வொன்றுக்குமான தனித்தன்மையைக் காப்பாற்றும் இயற்கையின் படைப்புத்திறன்பால் பேக்கர் கவரப்பட்டதே இதற்குக் காரணம்.

திருவனந்தபுரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றின் அருகிலிருக்கும் தம்பனூர் இந்தியன் காபி ஹவுசிற்கு அடிக்கடி நான் செல்வதற்கு ஒரு முக்கிய கரணம் – அது ஓர் பேக்கர் கட்டிடம் என்பதால்தான் (மற்றொரு காரணம், அங்கே கிடைக்கும் மசாலா தோசை – முக்கியமாக உள்ளிருக்கும் செந்நிற மசாலா). நீங்கள் இவ்வளவு சிறப்பான மற்றொரு காபி ஹவுஸ் கட்டிடத்தைத் திருவனந்தபுரத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. படிக்கட்டுகளே இல்லாத வட்ட வடிவிலான மூன்று மாடி உயரக் கட்டிடம் அது. மேல் செல்லும் வழி சரிவான வளைவுப் பாதையாக இருப்பது உங்களைப் பயமுறுத்தலாம், ஆனால் நான் இதுவரை அந்தப் பாதையில் யாரும் சறுக்கி விழுந்து பார்த்ததில்லை. அங்கே பணியாளர்கள் இரு கைகளிலும் அடுக்கப்பட்ட தட்டுக்களை வைத்துக் கொண்டு விரைவாக மேலும் கீழுமாகச் செல்வது வெகுஇயல்பாகக் காணக்கிடைக்கும் காட்சி. இதைத்தான் நாம் அழகும் துல்லியமும் ஒன்றிணைவது என்று சொல்கிறோம். சிலை முனையத்தில் இருக்கும் காபி ஹவுஸ் கட்டிடம் ஏன் அழகான ஓர் கட்டிடமாக இல்லை என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஓரு காலத்தில்  அதே இடத்தில் அழகான கட்டிடம் இருந்தது என்பதைக் கடந்தவாரம்தான் தெரிந்து கொண்டேன். பேக்கர் வரைந்த அந்தப் பழைய கட்டிடத்தின் வரைபடத்தைக் கூட நான் பார்த்திருக்கிறேன். இப்போதிருக்கும் பகட்டான கட்டிடத்தைக் கட்டுவதற்காக அந்தப் பழைய கட்டிடம் இடிக்கப் பட்டபோது பேக்கர் மிகவும் வருந்தியிருக்கிறார்.

நாங்கள் எங்கள் வீட்டைக் கட்ட முடிவு செய்தபோது, அதை ஓரு பேக்கர் வகை வீடாகக் கட்ட என் பெற்றோரைச் சம்மதிக்கச் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றும் இருக்கிறது. என் பெற்றோரும் பெரும்பாலான பிற மலையாளிகளைப் போலவே வழக்கமான பாணியிலான – சதுர அல்லது செவ்வக வடிவிலான அறைகளையும், முழுவதும் பூசப்பட்டு வர்ணங்கள் அடிக்கப்பட்ட வீட்டையே கட்ட விரும்பினார்கள். ஏகப்பட்ட சிமெண்டும், கம்பிகளும் உபயோகித்தே அவ்வீடு கட்டப்பட்டது, இருந்தும், இன்று நிறையச் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. பெரும் எண்ணிகையிலான ஜன்னல்களும், கதவுகளும் தரமான மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியும் எனக்கு வியர்க்கவே செய்கிறது. இதை எழுதிகொண்டிருக்கும் இந்நேரத்திலும் கூட வர்ணம் பூசும் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.(கடந்த பத்து வருடத்தில் மூன்றாம் முறை) அதற்க்குச் செலவிடும் தொகையைக் கொண்டு பேக்கர் ஓர் சிறு வீட்டையே கட்டிவிடுவார்.
இன்னும் கூட எனக்கு பேக்கர் வீடொன்றில் வாழும் கனவு உண்டு – அது வெளிவெப்பத்திலிருந்து காக்கும் வகையிலான எலிவளை இணைப்பு மூலம் இணைக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டதாக, குளிர்ந்த காற்றை அனுமதிக்கும் காற்றிடைச் சுவர்களால் சூழப்பட்டதாக, வெப்பத்தை வெளியேற்றும் மேற்கூரைக் காற்றுத் திறப்பான்கள் கொண்டதாக, வட்டமும், அறுங்கோணமுமாக இருக்கும் அறைகளைக் கொண்டதாக, சுவற்றில் பதிக்கப்பட்ட (உபயோகமற்ற) போத்தல்கள் வழியாக வரும் ஒளி உருவாக்கும் கலைடாஸ்கோப் ஓவியங்கள் விழும் களிமண் ஓடுகளைக் கொண்டதாகவும் இருக்கும் அந்த வீடானது உண்மையிலேயே இயற்கையின் நீட்சியாக இருக்கும்.

பேக்கர் பேருயரம் கொண்ட கட்டிடங்களை அமைத்தவரில்லை (விதிவிலக்காக CDS Complex  போன்றவை இருக்கலாம்). அவர் அவருடைய கட்டிடங்கள் ஒரு பொதும் ஓர் தென்னை மரத்தின் உயரத்தைத் தாண்டுவதை விரும்பாதவர். ல கற்பூசியேகள் அல்லது லட்யன்கள் போன்ற மேல்த்தட்டு அறிவாளிகளிடையே அவருக்கு இடமின்றி இருக்கலாம். ஆனாலும் கூட ஆயிரக்கணக்கான ஏழைகள் தங்களுக்கென ஓர் கூரைக்குடிசைகள் அமைத்துக் கொள்ள உதவியதால், எல்லாக் கட்டிடவடிவமைப்பாளர்களையும் விட மேலான இடத்திலேயே அவர் இருக்கிறார். நீங்கள் திருவனந்தபுரத்தின் சேரிப்பகுதியான செங்கச்சூலயில் இருக்கும் அழகான கட்டிடங்களைப் பார்க்கும் போது தெரியும் – அவை வெறும் கூரைக்குடிசைகள் அல்ல என்று.
பேக்கரின் வழிமுறைகள் பெருமளவிலான கேரளா மக்களைக் கவராததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மக்கள் முன்முடிவுகளோடும், பழகிப்போன நடைமுறைகளோடுமே பேக்கரை அணுகுகின்றனர். பேக்கர் மாதிரி கட்டிடங்கள் புகழ் உச்சியில் இருந்தபோது வந்த நகைச்சுவைத் துணுக்கு ஒன்றில் – எனக்கு குறைந்த விலை (பேக்கர் மாதிரி) வீடு ஒன்று வேண்டும், அதற்காக எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று ஒருவர் சொல்வதாக இருந்தது. நாம் பொதுவாகவே ஒரு விசயத்தின் ஆன்மாவை அறிவதற்குப் பதில், குருட்டுத்தனமாகப் பொதுப்போக்கிலேயே செல்கிறோம். ஒருவேளை பேக்கர் வீடுகள் கேரளாவில் பரவலாகி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிப்பேன். விலைமிகுந்த ஆனால் நாகரிகமற்ற பல விஷயங்களைப் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்காது. முக்கியமாக,தொலைக்காட்சி இடைவேளைகளில் பார்க்கும் சிமென்ட், வர்ணங்கள் குறித்த விளம்பரங்களையாவது பார்க்காமல் இருந்திருப்போம். இன்றைய நுகர்கலாசாரத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று கனவேனும் காணலாமா?

பேக்கர் ஓரு கேலிச்சித்திரக்காரர் – அதில் மிகுதிறன் மிக்கவரும் கூட. அவர் மரணத்திற்குப் பின் அவர்குறித்து நிறையக் கட்டுரைகள் வந்திருந்தாலும் கூட, அவருடைய கேலிச்சித்திரத் தொடரான மலையாளியுட முண்டு (மலையாளியின் வேட்டி) குறித்து எங்கும் குறிப்பிடப்படவே இல்லை. அந்தத் தொடரை வார இதழான மாத்ருபூமி வெளியிட்டு வந்தது. (எண்பதுகளில் இருக்கலாம் – உறுதியாகத் தெரியவில்லை. என் சொந்த ஊரில் என்னிடமிருக்கும் பழைய இதழ்களில் பார்த்திருக்கிறேன்) அந்தத் தொடர் பேக்கரின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்துபவை. அவர் ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் எவ்வளவு தூரம் கவனித்திருக்கிறார் என்பதை அவர் வரைந்துள்ள எளிய கோடுகளின் வழியே உணரலாம். "Rubbish by Baker" மற்றும் "Baker’s Mud" போன்ற புத்தகங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். முன்னது கழிவுப்பொருட்களை அகற்றுவது தொடர்பானது, பிந்தையது களிமண்ணில் இருந்து கட்டிடம் கட்டத் தேவையான பொருட்களைப் பெறுவது தொடர்பானது. களிமண்ணைப் பயன்படுத்தி கட்டிடம் கட்டுவதை முழுமையாக, படங்களுடன் விளக்கிவிட்டு பேக்கர் கேட்பது – யார் உங்களுடைய மண் வீட்டைக் கட்டுவார்கள்? விருப்பமும் நேரமும் இருக்குமென்றால் நீங்களே கட்டுங்கள். இதைவிடத் தன்னிறைவைப் பற்றி உங்களால் சொல்லமுடியுமா?

பேக்கரைப் புரிந்துகொள்ளாத என் தலைமுறை, நம் காலத்தில் வாழ்ந்த ஓரு காந்தியைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தானாகவே இழக்கிறது. முக்கியமாக, சமீபத்தில் வேறெவரும் காந்தியத்தை இவ்வளவு அழுத்தம்திருத்தமாகக் கண்டவர்களில்லை. அவர் சொல்லொன்றும் செயலொன்றுமாக வாழ்ந்தவரில்லை. அவர் எந்த முறைகளை அடுத்தவர்களுக்குச் சொன்னாரோ அதே முறையில்தான் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஹேம்லெட் என்று பெயரிடப்பட்ட அவருடைய வீட்டையும் கட்டினார். ஆகையால் அவர் என் வாழ்வே என் செய்தி என்று சொல்லிக்கொள்ள முழுத்தகுதி கொண்டவராகிறார்.

ஹாம்லெட்டைக் கட்டி சொந்தம்மாக்கிக் கொண்டவரான அவருடைய நம்பிக்கையின் அடிப்படையில், அவர் ஒருபோதும் “இருப்பதா அல்லது இறப்பதா” என்று குழம்பியதில்லை. அவர் மறைந்த இந்நேரத்தில் நான் ஷேக்ஸ்பியரின் ஆண்டணியைப் போல சொல்கிறேன் பேக்கர் என்றொருவர் இங்கிருந்தார், மீண்டும் அவரைப் போல் இன்னொருவர் எப்போது வருவார்?

Wednesday, January 6, 2016

புது வருடம் – புது மனிதர்கள்

புது வருடம் – புது மனிதர்கள்
இவ்வருடத்தின் முதல் நாள், நான் பாரிஸ் கார்னர் பகுதியில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். உயர்நீதிமன்றத்தின் எதிரே உள்ள நடைபாதையில் ஓரு கோயிலும் அங்கே மஞ்சள் நிறஅம்மன் சிலையும் இருக்கிறது. நான் அதை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு திருநங்கை – அந்த அம்மனைப் போலவே அழுத்தமான மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருந்தவர் -என்னிடம்- சாமி கிட்டப் போயி போட்டோ எடு சார் என்றார். நான் என் செருப்பை நடை பாதையில் விட்டுவிட்டு சிலைக்கு இன்னும் பக்கத்தில் சென்று போட்டோ எடுக்கத் தொடங்கினேன். அந்தக் கோயிலின் ஒருபகுதியிலேயே இயேசுவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. நான் அதையும் போட்டோ எடுத்துவிட்டு, அந்தப் படம் அங்கேயிருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டேன். ஆமா சார் எல்லாம் நம்ம சாமிதான், ஏசுவும் அம்மனும் அல்லாவும் எங்களுக்கு ஒன்னுதான். அல்லாவுக்கு உருவங்கிடையாது, அதுனால படம் வைக்கல. சாமில இதுவேற அதுவேறையா சார்? என்று கேட்டார். நான் அவருடைய பெயரைக் கேட்க மறந்துவிட்டேன் – பெயரா முக்கியம்?



அங்கிருந்து சென்ரல் ரயில் நிலையம் போனேன். நடைபாதையில் கடை போட்டிருக்கும் குறவர் ஒருவர், என்னுடைய கேமராவைப் பார்த்தவுடனே தயவு செய்து எங்களைப் போட்டோ எடுக்காதீங்க என்றார். ஏன் என்று கேட்டேன், உங்கள மாதிரி ஒருத்தர் போட்டோ எடுத்து பேப்பர்ல போட்டுட்டார், அன்னைக்கே கடைய போலிஸ் காலி பண்ணிட்டாங்க. பொழைப்பு போயிரும் வேணாங்க என்றார். படமெடுப்பதை விரும்பாதவர்களை நான் படம் எடுப்பதில்லை என்பதால் கிளம்பினேன்.
இரவு பத்துமணிக்கு, விஜயநகர் சிக்னலில் ஒரு புறமிருந்து இன்னொரு புறம் நானும் இன்னும் சிலரும் கடந்தோம் எங்களுடன் ஒரு போலிஸ்காரரும், ஒரு தெரு நாயும். அந்த நாய் மனிதர்களைப் போலவே சிக்னலைக் கவனித்து, எங்களை ஒட்டி நடந்து வந்தது. நடுவில் இருக்கும் ரவுண்டானா அருகே வந்தவுடன் அந்த போலிஸ்காரர் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நின்றுவிட, நாயும் நின்றுவிட்டது. நாய் உங்களதா சார் என்று கேட்டேன், அவர் இல்ல சார், கொஞ்ச வருஷம் முன்னாடி எங்கிருந்தோ அதுவா வந்து போலீஸ் கூண்டுக்கு கீழ தங்கிட்டு இருக்கு. நடு ரோடுனாலும் சரி, கூண்டு பக்கத்துலயும் சரி, நாங்க எங்க நிக்கிறமோ அங்க அதுவும் நிக்கும். அது மழைனாலும் வெயில்னாலும் வேற எங்கயும் போகாது என்றார்.

இரண்டாம் நாள், பார்த்தசாரதி கோயிலுக்குப் போனேன். நீண்ட நேரம் வெளியிலேயே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். வெளிமண்டபத்தில், மந்திரங்கள் முழங்க உற்சவம் நடந்து கொண்டிருந்தது. என் செருப்பை ஓரமாக விட்டுவிட்டு, உள்ளே செல்ல முயன்றபோது நுழைவாயிலில் இருந்த ஒருவர் என்னைக் கோயிலுக்குள் போகக்கூடாது என்று தடுத்தார். காரணம் – கேமரா. ஏதேனும் ஆகம விதி இருக்கும். J என் கேமரா கடவுளின் சக்தியைத் திருடிவிடும் என்பதால் நானும் வந்துவிட்டேன்.